கடந்து வந்த பாதை
====================
எனக்கென மட்டும்
உருவான ஒற்றைக் கனவிருந்தது -
ஒரு காலத்தில்!//
அதன் நிறத்தை
அதன் குணத்தை முழுவதும்
என்றாவது படித்திட வேண்டுமென்ற ஆவல் மட்டும்
பசியோடு எழுந்த ஒரு பறவையின் தேடலை
ஒத்திருந்தது எனச் சொல்லலாம்...!//
ஆனால் வாய்த்ததெல்லாம்
புறக்கணிப்பெனும் பரிசு மட்டுமே....!//
புகழுக்காக போர்த்திக்கொள்ளவோ
இரவிற்காக அணைத்துக்கொள்ளவோ
ஒருநாளும் நான் முயன்று பார்த்ததில்லை!//
வழமையாய் கிடைத்ததெல்லாம்
உருப்படாத உபதேசம்
ஒன்றுக்கும் பயன்தராத நலவிசாரிப்புகளெனும்
நாடகம் மட்டுமே!//
இத்தனைக்கும் நடுவில்
எதிர்பாராமல் நீ இதயம் நுழைந்ததும்
கடந்த பாதையின் வலிகள் மொத்தமும்
தானே விடைபெறும் மாயம் நடக்கின்றது!//
பாதை ஒன்றுதான்
அதன்பயணம்தான் வேறு
புயலுக்கு பதில்
வானவில்லோடு வலசை போகின்றது!//
யாழிசைசெல்வா
தேனி மாவட்டம்
19/01/2026