Saturday, 3 July 2021

இளம்வழுதி - யாழிசைசெல்வா

  💕இளம்வழுதி 💕

                                   👣 யாழிசைசெல்வா 👣


     சித்திரை முழுநிலவின் தன்னொளி காவிரியாற்றின் வடகரையிலமைந்த **இடவை பெருவெளியை நோக்கியதும் சற்று அதிர்ந்துதான் போனாள்.  ஆம்., அலைகடலென திரண்டு பெரும் பெரும் கூடாரமடித்து  தங்கியிருந்த பாண்டியமகாசேனையின் திறல்கண்டு  ஒரு கணம் விக்கித்துப்போனாள் வெண்ணிலவு.


    ***பாண்டியமன்னன் மாறவர்மன் பரசக்கரகோலாகலன் கி.பி.862யில் திடிரென இறக்கவே அவன் மைந்தன் இரண்டாம் வரகுணபாண்டியன் அரசுக்கட்டில் ஏறியதோடு  பல்லவ-சோழ மன்னர்களிடம் இழந்த பகுதிகளை மீட்டு,  பாண்டியநாட்டுப் பகுதிகளை பேணவேண்டியும் பாண்டியவீரத்தின் மாண்பை காட்டவேண்டிய அவசியம் உணடானதால் இடவையில் படைதிரட்டி தண்டுயிறங்கியிருந்தது பாண்டியமகாசேனை.


     பாண்டியர்களின் படைத்தலைவன் இளம்வழுதி தன் கூடாரத்தில் அப்படியும் இப்படியுமாக நடந்தவண்ணம் பெரும் யோசனையிலிருந்தான்.


    சித்திரை முழுநிலவின் தன்னொளி கூடாரவாயிலைத்தாண்டி இளம்வழுதியின் முகத்தில் பட்டையாக அடித்ததால் அவனது சுந்தரமுகத்திற்கு கூடுதல் அழகை தந்து கம்பீரமாக்கியது.


    குணக்கடலில் தோன்றிய சீதளத்தென்றல் அவன் குழலை மெல்ல வருடியவண்ணமிருந்தது. நிலவின் தன்னொளியும் சீதளத்தென்றலின் ஸ்பரிசமும் கூட அவனது சிந்தனையை அகற்றவில்லை போலும்.


     சாதாரண நாட்களாய் இருந்தாள் இயற்கையின் அழகை பருகுவதில் வஞ்சனையின்றி இருப்பவன்தான் ஆனால் எதிரே விரிந்து காட்சிதந்த கோட்டையில் உள்ள எதிரியை எவ்வாறு தோற்கடிப்பது என்ற பலமான யோசனையில் ஈடுபட்டியிருந்தான்.


     பாண்டியவேந்தன் இரண்டாம் வரகுணபாண்டியனுக்கு இவ்வெற்றி மிக அவசியம் என்பதை நன்கு அறிவான் இளம்வழுதி.  மேலும் பாண்டியமன்னன் வெற்றியை பெற்றுத்தரும் பொறுப்பை இவனிடத்தில் அளித்திருந்ததால் எப்படியும் சாதித்தே தீருவது என்ற தீர்மானத்தில் இருந்தான் இளம்வழுதி.


     உருண்டுதிரண்ட தனது பெரிய கண்களை அப்படியும் இப்படியுமாக சுழற்றியபடி நீண்டநேரம்,  யோசனையுடன் கூடாரத்தில் உலவியபடி இருந்தான் இளம்வழுதி.


     சோழர்களைபற்றி ஒற்று அறிவதற்கு சிலநாட்களுக்கு முன்பே சென்ற ஒற்றன் மாறன் ஏன் இன்னும் வரவில்லை, அவன் கொண்டுவரும் தகவல் அடுத்தகட்ட நகர்வுக்கு உதவியாக இருக்ககூடுமென்ற எண்ணத்தில் உலவினான் இளம்வழுதி.  மாறன் பாண்டிய ஒற்றர்களின் தேர்ந்தவன் மட்டுமின்றி இளம்வழுதியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன்.


அப்போது….


     விரைந்து பாண்டியசேனாதிபதியின் கூடாரத்தை அடைந்தவன் “வணக்கம் படைத்தலைவரே” என்று கூறியபடி வணங்கிநின்றான் மாறன்.


     “வா மாறா..!, போன காரியம் ஜெயம் தானே!?” என்றான் இளம்வழுதி.


    “நமக்கு வேண்டிய விவரங்களை சேகரித்து விட்டேன் படைத்தலைவரே”

    “நல்லது மாறா”

    “சோழமன்னன் விஜயாலயன் வயது மூப்பின் காரணமாக உடல்நலமின்றி இருப்பதால் அவரது சிகிச்சைக்கு வேண்டிய மூலிகைகளை வாரமிருமுறை கோட்டைக்கு எடுத்து சென்றுவரும் வைத்தியரின் சீடனிடம் சினேகம் பிடித்துக்கொண்டேன். அவனின் உதவியால் கோட்டைக்குள்ளே எளிதாத சென்று வரமுடிந்தது.  தற்போது நிர்வாகத்தை சோழ இளவல் ஆதித்தன் தான் மேற்கொண்டு வருகிறார்.  இளம்வயது, அனுபவமின்மை  ஆகியவற்றால் சரியான முறையில் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியவில்லை.  அனுபவம் மிகுந்த அமைச்சர் பெருமக்களின் யோசனைகளை புறந்தள்ளிவிட்டு எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமென்று முடிவெடுக்கிறார். ஆகவே உள்ளுக்குள் புகைச்சல் உண்டாகி எனக்கென்ன வந்ததது என உள்ளார்கள்.  கோட்டையின் பாதுகாப்பிற்கு ஆயிரம் வீரர்கள் தான் இருக்கக்கூடும் , நமது இந்த திடீர் படையெடுப்பு அவர்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியுள்ளது, எனவே விரைந்து தாக்குதல் நிகழ்த்தினால் நமக்கு சாதகமாக இருக்கக்கூடும்” என்றான் மாறன்.


     “ஆகட்டும் மாறா, நீ சென்று ஓய்வெடு “ எனக்கூறி மாறனை அனுப்பிவிட்டு இருக்கையில் கிடந்த சீலை ஒன்றை எடுத்து விடுவிடுவென அதில் சிலகோடுகளையும் சில புள்ளிகளையும் வைத்துவிட்டு நேர்கோடாக சிலகோடுகளை ஆங்காங்கே வரைந்துவிட்டு பின்பு ஒருமுறை சீலையை உற்றுநோக்கியவன் “நன்று!நன்று!” என தனக்குள் சமாதானம் செய்து கொண்டான் இளம்வழுதி.


     வாயில் காவலனை அழைத்து உபசேனாதிபதிகள் நால்வரையும் உடனே விரைந்து தன்னை வந்து காணும்படி உத்தரவை பிறப்பித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான் இளம்வழுதி.


    ‘வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு’போல் உபசேனாதிபதிகள் நால்வரும் படைத்தலைவரின் கூடாரத்திற்கு வந்து சேரந்தார்கள்.  அவர்களை இருக்கையில் அமரும்படி கண்ஜாடைகாட்டிவிட்டு, தான் தீட்டிவைத்திருந்த சீலையை எடுத்து அவர்களிடம் கொடுத்து “இந்த சீலையை பாருங்கள், திட்டத்தில் குறையிருந்தால் கூறலாம்” எனறான் இளம்வழுதி.


    சிறிது நேரம் நால்வரும் சீலையை மாறிமாறி பார்த்ததோடு தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், “திட்டம் தெளிவாக உள்ளது படைத்தலைவரே” நால்வரும் ஒருசேர ஆமோதித்தனர்.


    “வேறு ஏதேனும் சந்தேகமிருந்தால் கேட்கலாம்” என்றான் இளம்வழுதி.

   “  படைத்தலைவரின் திட்டத்தில் அப்பழுக்கில்லாமல் தெளிவாக உள்ளது . எனவே வெற்றி நம்வசம்தான்.” என நால்வரும் ஒருங்கே கூறினார்கள்.


     “இந்தக் கோட்டையின் ஒருபகுதி பலமே கிழக்குபுறம் அமைந்துள்ள அடர்ந்தகாடுதான்.  அந்தக்காட்டுக்குள் நேற்று ஆராய்ந்தபோது கோட்டைக்கு செல்லும் ரகசியவழி ஒன்றுயிருப்பதை அறிந்தேன்.  ஒருவேளை முற்றுகை நீடித்தால் அதன் வழியே கோட்டைக்குள் உணவுப் பொருள்களும் மருத்துவ உதவிகளும்  கிடைக்குமாயின் முற்றுகை பலமாதங்கள் நீடிக்கும் நம்மால் சோழர்களை வெற்றி கொள்வதென்பது கனவாகிவிடும். அத்தோடு கோட்டைக்குள்ளேயிருப்பவர்கள் தப்பிவெளியேறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே சிறுபடை ஒன்றை அங்கு நிறுத்தி அதனை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சாலச்சிறந்தது” என்றபடி தன் திட்டத்தை விரிவாக எடுத்துரைத்ததோடு  அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்களை கூறி அவர்களை அனுப்பிவிட்டு படுக்கையில் சாய்ந்தபோது சீதளத்தென்றல் சுகமாக வீச விரைவில் உறங்கிப்போனான் இளம்வழுதி.


     குணபுலத்தில் குதித்தெழுந்த ஆதவனும் அன்று தனது உதயத்தை தாமதமாகவே இடவை பெருவெளியில் தடம் பதித்தான்.


    ஆர்த்தெழுந்த பாண்டியமகாசேனையின் முகப்பில் சிறு யானைப்படையின் துதிக்கையில் பெறும் காட்டுமரங்களை தந்ததோடு யானைப்படைக்கு உதவியாக வில்படையும், காலாட்படையும் அதன் பின்னே குதிரைப்படையும் கொண்டு அணிவகுத்து பாண்டியபடைகளை நிறுத்தியதோடு மேற்கு வாயிலுக்கு தலைமைதாங்கி பாண்டியசேனாதிபதி இளம்வழுதி அரிமாவென தனது அரபுநாட்டு கரும்புரவியில் அமர்ந்தவண்ணம் எதிரே விரிந்த கோட்டையை பார்வையிட்டபடி இருந்தான்.


     தேவையற்ற இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு சோழ இளவல் ஆதித்தனை சரணடைய சொல்லி தூதுஅனுப்பியும் பணியமறுக்கவே போர் தவிர்க்கமுடியாமல் போயிற்று.


    கோட்டைக்குள்ளே ஒரே அதிரிபுதிரியாக படைவீரர்கள் தங்கள் நிலைநோக்கி நகர்ந்தவண்ணமிருந்தனர்.  அவர்களின் செயல்களில் காணப்பட்ட தொய்விலிருந்தே இப்போரை அவர்கள் எதிர்நோக்கவில்லை என கட்டியம் கூறியது.


    இளம்வழுதி தனது வாளை உயர்த்திக்காட்டியதும் பெரும் முரசுகள் அதிரத்தொடங்கின.  அதற்காகவே காத்திருந்த உபதளபதிகள் தங்களது கொம்புகளை முழக்கியதும் திட்டமிட்டபடி படைகள் நகரத்தொடங்கின.


    பாண்டியசேனைகளை பலவாறாக பிரித்து அதன் ஒருபகுதியினை வலதுபுறவாயிலுக்கும் தெற்குவாயிலுக்கும் அனுப்பியதோடு மேற்கு வாயிலுக்கு தானே தலைமையேற்று நடத்தியதோடு ஒரேநேரத்தில் பன்முகத்தாக்குதலை அரங்கேற்றி எதிரியை நிலைகுலைய வைக்கதிட்டமிட்டிருந்தான், மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி கிழக்கே அமைந்த ரகசிய வழிக்கு மாறன் தலைமையில் சிறுபடைஒன்னறையும் அனுப்பி வைத்திருந்தான் இளம்வழுதி.


     பெரும் மரத்துண்டுகளை ஏந்தியபடி மேற்கு வாயில் கதவினை தகர்க்கத் தொடங்கின களிறுகள் . யானையின் மீதிருந்த பாகர்கள் விரைந்து செலுத்தியும் கோட்டைக்கதவுகள் அசைந்து கொடுக்க மறுத்தன.  அதேநேரத்தில் கோட்டையின் மீதிருந்த சோழவீரர்கள் யானைப்படையின் மீது சரமென அம்புமழைதொடுத்து சாய்த்தனர்.  தொடர்ந்த தாக்குதலில் யானைப்படையின் முன்னேற்றம் தடைப்படவே விரைந்து கொம்புகளை ஊதி யானைப்படையை பின் நகர்த்தாவிடில் தனது சேனையின் பெரும்பகுதி தமது யானைகளாலே நாசம் அடைவது திண்ணம் என உணர்ந்து செயலாற்றியதோடு உபசேனாதிபதிக்கு சங்கேத ஒலி ஒன்றை எழுப்பவே அதற்க்காகவே காத்திருந்ததுபோல் பெரும் கல் கவன் வண்டிகளை நகர்த்தி படையின் முகப்பு பகுதியை அடைந்ததோடு கல்கவன் கற்களுக்கு பதிலாக நூல்பந்து உருண்டைகள் எண்ணையில் நனைத்து மேற்கு வாயில் கதவினை நோக்கி எறிந்ததோடு முன்னணி வில்வீரர்களைவிட்டு  நெருப்பு கனைகளால் நூல்பந்துருண்டைகளை தாக்கும்படி செய்தான்.   அவ்வளவுதான் குபீரென வாயில் கதவுகள் பற்றி எரிய தொடங்கியது .


    வாயில் கதவு எரிவது கண்டு அதனை அனைக்க முற்பட்ட  சோழவீரர்களை பாண்டிய  வில்விரர்கள் கொன்று குவிக்கத் தொடங்கினர்.


    தொடர்ந்த கல்கவன் எரி உருண்டைகள் கோட்டைக்குள்ளும்  வீசி எறிந்ததால் அங்கிருந்த குடிசைகள் பற்றி எரியத்தொடங்கியபோது அங்கிருந்த மக்களின் அலறல் சத்தம் கேட்டு சோழவீரர்களின் கவனம் சிதறத்தொடங்கின.  குடிசைகளின் தீயை அனைக்காவிடில் விரைவில் கோட்டையின் குடியிருப்பு முழுவதும் நாசமாகிவிடும் என்பததை உணர்ந்த சோழ இளவல் ஆதித்தன் நெருப்பை அனைக்க வீரர்களை ஏவினான்.


     பற்றி எரிந்த மேற்குவாயில் கதவின் மேல் பெரும்மரங்களைக்கொண்டு யானைப்படை தாக்கியதும் நொறுங்கி விழுந்த வாயில் கதவின் வழியாக காலாட்படையும் குதிரைப்படையும் புகுந்து எதிர்பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தபடி ஒருபுறம் முன்னேறியதோடு நிலைக்கூண்டிலிருந்தவர்களை வில்வீரர்களின் துனைகொண்டு கொன்று குவித்தபடி பாண்டியப்படை முன்னேறத்தொடங்கின.


    இதற்கிடையே ரகசியவழியின் வழியே உள்ளே புகுந்த மாறன் தலைமையிலான பாண்டியபடை வீரர்கள் கோட்டையின் மீதிருந்த என்னைகொப்பரைகளை சோழப்படையின் மீது சாய்த்து அங்கிருந்த தற்காப்பு படையினை அடியோடு அழித்தனர்.


     இதேபோல் கோட்டையின் மற்ற வாயில்களும் திறம்பட செயல்பட்ட பாண்டிய உபசேனாதிபதிகளின் தாக்குதலுக்கு முன் நிற்காமல் வலுவிழந்து சரணடையும் நிலைக்கு சோழர்கள் தள்ளப்பட்டனர்.  ஏற்கனவே பற்றி எறிந்துகொண்டிருந்த கோட்டையில் மக்களின் அலறல் ஒலியோடு பாண்டியவீரர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எழுப்பிய மரண ஒலியும் சேர்ந்து வானைப்பிளந்தன.


    இனியும் தாமதித்தால் கோட்டை முழுவதும் அழிந்துவிடும் , சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை எனபதை உணர்ந்த ஆதித்த சோழன் சரணாகதி சங்கினை எழுப்பியதோடு பாண்டியசேனாதிபதி இளம்வழுதியை வரவேற்கத் தயாரானான்.


    விடிந்த ஒரு ஜாமத்திற்குள் வெற்றி அன்னை பாண்டியர் வசம் தஞ்சம் புகுந்திருந்தாள்.


    ஆதவனின் பொன்ஒளியைத் தூக்கி விழுங்குவதுபோல் ரத்த ஆறாக காட்சி தந்தது இடவைக்கோட்டை.


அடிக்குறிப்புகள்:


**இடவை – கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு ஊர் என சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.


*** பிற்கால சோழர் வரலாறு – தி.வை. சதாசிவபண்டாரத்தார் பக்கம்:46,47


ஆதார நூல்கள்:

1.பிற்கால சோழர் வரலாறு – தி.வை.சதாசிவபண்டாரத்தார்

2.தென்னாட்டு போர்க்களங்கள் – க. அப்பாதுரை



###இந்தக்கதை கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டி - 2020க்கு அனுப்பியது.###






7 comments:

  1. கதை நன்றாகவே உள்ளது. இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்த நிகழ்வுகளால் மெருகேற்றிருக்கலாம்.

    ReplyDelete
  2. போர்க்களம் கண்டேன் தங்கள் எழுத்தினில்..நன்று..தொடர்க...

    ReplyDelete
  3. நிகழ்வின் பதிவு போல் உள்ளது. கதை போல் அல்ல. சுவை கொஞ்சம் சேர்க்கலாம். எழுத்துப்பிழைகளை கவனிக்கவும். நல்ல முயற்சி.

    ReplyDelete
  4. வீரம் கொப்பளிக்கும் காட்சிகள் & தந்திரங்கள்.
    முற்றுகையில் சோழ படைகளால் யானை படை தோற்பது போல காட்டி விட்டு, பாண்டியர் வெற்றி பெற்ற கதை.
    இது கதை அல்ல . சிறு போர் குறிப்பு மட்டுமே .

    ReplyDelete