Sunday, 8 June 2025

உதயமும் அஸ்தமமும் - கவிஞர் யாழிசைசெல்வா

உதயமும் அஸ்தமமும் 

====================

கவிஞர் யாழிசைசெல்வா 

=======================

     இருள் தனது இழையை இறுகப்பற்றிக் கொண்டு பதுக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கருக்கல் பொழுதின் ஊடாக மென்மையாகத் தழுவிக் கொஞ்சும் காற்றில் அலையடித்து மிதந்தபடி அருகே நடந்து வந்த பாரதியின் தோள்களை இறுகப்பற்றி அணைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் பரிதி! 


     "யேங்க.... இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?" வார்த்தைகள் தந்தியடிக்க கேட்டாள் பாரதி!


    "இதோ வந்து விட்டோம்! இன்னும் சிறிது தூரம் தான் நேற்று மாலை தானே இது வழியாக போய் வந்தோம் அதற்குள் மறந்து விட்டாயா...?"என்றவன் அவளது விழிகளை வட்டமிடும் பருந்தாக கொத்திக் கொண்டிருந்தான் பரிதி!


      தூரத்தில் இருளின் இழையை கண்ணின் இமை விலகுவது போல் மெல்ல மெல்ல அலைகளின் மடியில் தவழ்ந்த படி, மகரந்தப் பொடியைத் தொடுவானில் விதைத்தபடி, ஆழியிலிருந்து மஞ்சள் ஞாயிறு கொடியேற்றியபடி, மங்கலமாய் எழுந்து மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்!


       எழிலார்ந்து விரிந்த இயற்கைக் காட்சியின் அழகில் மெல்ல இதயத்தைப் பறி கொடுத்த பாரதியின் அழகிய வதனத்தின் ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்த பரிதியைச் சட்டென இறுகத் தழுவி நச்சென்று இதழ் முத்தம் தந்துவிட்டு, ஞாயிறின் புலர் காலை அழகை வியந்து ரசித்துக் கொண்டிருந்தாள்! அவளையும் அறியாமல் அவளது அஞ்சன விழிகள் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்துச் சிரித்தன!


      பரிதியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இயற்கையின் இன்ப மாயங்களை அணு அணுவாகப் பருகிக் கொண்டிருந்தாள் பாரதி!


      காற்றில் அலை அடிக்கும் அவளது கார் கூந்தலை கோதியபடி "பாரதி"என்றான்...


     "ம்ம்ம்"என்ற ஒலி மட்டும் அவளது உதட்டிலிருந்து உதித்தது! 


     "நேற்று மாலை ஞாயிறின் மறைவையும் இன்று உதயத்தையும் பார்த்து விட்டாய் இப்போது உனக்கு திருப்தி தானே?"


     "இது என்ன கேள்வி?"என அவனது விழிகளை நன்றியோடு பார்த்தாள்!


     "அப்படிப் பார்க்காதே பாரதி! இது எனது கடமை"


     பாரதியின் விழிகளிலிருந்து மீண்டும் துளிர்த்துச் சிரித்தன கண்ணீர்! 


     "உனக்குள் ஏன் மீண்டும் வேதனை! வேண்டாம் அவை!"எனக் கூறிய படி அவளை இருகத் தழுவிக் கொண்டான் பரிதி!


     "கன்னியாகுமரியில் ஆதவனின் உதயத்தையும் மறைவையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனது சிறு வயது முதலே விடாமல் தொற்றிக் கொண்டது! அதற்காக பள்ளி, கல்லூரியில் படிக்கும் நாட்களிலிருந்து பலமுறை பார்க்க ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது! ஒரு கட்டத்தில் வாழ்க்கைத் தேடலில் அது மறந்தே போய்விட்டது!"எனக் கூறியபடி அலை கடலில் மிதக்கும் ஞாயிறின் பொன்னொளியை ரசித்துக் கொண்டிருந்தவள் "ஆமாம்... எனது இந்த ஆசை உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" அவனது விழிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே கேட்டாள்!


      "உன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக உனது தோழி செல்வியிடம் கேட்டேன்"


      "கண்ணான கணவனோடு கவின்மிகு காட்சியைக் காதலோடு பார்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பமதுவாக இருந்தால் யார் மாற்ற இயலும்?"என்றவள் மீண்டும் பரிதியை இறுகத் தழுவிக் கொண்டாள் பாரதி!


       இருவருக்கும் இடையில் நுழைய முயன்ற காற்றும் தோற்றுப் போய் திரும்பிக் கொண்டிருந்தது!


(முடிந்தது)


ரோசாக் கூட்டம் ஐந்தாம் ஆண்டு விழா சிறுகதை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது 

கவிஞர் யாழிசைசெல்வா 

08/06/2025

No comments:

Post a Comment