Sunday, 8 June 2025

உலகை மாற்றும் பெற்றோரின் பாதைகள் - யாழிசைசெல்வா

உலகை மாற்றும் 

பெற்றோரின் பாதைகள் 

=======================

தனக்கென்று தனியொரு

உலகம் ஏதுமில்லாமல்

வினைப்பயன் இதுவோ என்றென்னாமல்

ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை 

மாற்றும் மந்திர சாவி கொண்டு

மடை திறந்த வெள்ளமாய் 

யாவரும் அறியாத பொழுதிலும் 

புதிய சகாப்தம் படைத்திடும் 

படைப்பின் ஆதார சக்தியான பெற்றோர் 

வகுத்திடுவார் புதிய நீதி!//


இன்னும் முடியாத பொழுதை துரத்திக் கொண்டு 

சுழன்று அடிக்கும் புயலையும் 

பட்டெனத்தள்ளி சட்டெனப் பூத்திடும் 

சாகச வித்தையை 

காட்டும் வல்லமை 

அவனியில் இவர்களுக்கு இணை 

காலம் கையளிக்க வில்லை 

என்பதை இவர்கள் அறியார் - இருப்பினும் 

தடையாய் எரிமலை எழுந்தாலும் 

தகர்க்கும் துணிவு மட்டும் 

ஒரு நாளும் ஓய்வதில்லை!//


பாதையின் நெருஞ்சி முள்ளை

பட்டுக்கம்பளமாய் பாவித்து பயணித்து

கலங்கரை விளக்கமாய் காட்சி தந்து

எப்போதும் புன்னகை மட்டுமே பூத்திடும்

பெற்றோரன்றி பூமியில் யாருமிலர்!//


பூமி பந்தும்

நிற்காமல் சுற்றுவதும் 

அச்சத்தை அறைந்த 

இவர்களின் சுழற்சியின் 

சூட்சுமத்தைக் கண்டறிவதற்காக தானோ?//


கவிஞர் யாழிசைசெல்வா 

தேனி மாவட்டம் 

02/06/2025








No comments:

Post a Comment