ஞாயிற்றுக்கிழமை மாலை
========================
கவிஞர் யாழிசைசெல்வா
=======================
வீட்டுக்குள்ளிருந்து எழுந்து வாசலில் வந்து சோம்பல் முறித்தவளின் மேனி முழுதும் செந்தூரச்சாரளொளி சிதறி விழுந்தது!
"இதென்னடி கூத்து! செத்த நேரம் கண்ணசந்தேன்! அதுக்குள்ளற மயங்கிப் போச்சு" நகர்ந்த போது மந்திரிச்சு விட்டது போல் மாமர இலைகள் வாசல் முழுவதும் இறைந்து கெடந்தது!
திண்ணையில் கெடந்த வெளக்குமாறை எடுத்துக்கொண்டு மாமரக் குப்பைகளை 'பரட் பரட்டென' கூட்டிப் பெருக்கி கொண்டிருந்தபோது "முனியம்மாக்கா...." என்ற சத்தம் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தாள்!
"யென்னடி மசங்குன நேரத்துல வந்திருக்கே....? நீ சும்மா வர மாட்டியே...?"யெனக் காளியம்மாளைப் பார்த்துக் கேட்டாள் முனியம்மாள்!
"அது ஒன்னுமில்லக்கா.... ஒரு சேதி கேள்விப்பட்டேன்...! அதுதேன் உனக்கு தெரியுமா... இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு போயிடலாம்னு வந்தேன்...." யென்றாள் காளியம்மாள்!
"யென்னடி பேச்சுல நீ போட்ட நெடி மூக்குல நுழைஞ்சு மூளையக் கொளப்புது...! சொல்ல வந்தத நேரடியாச் சொல்லுடி.... வீட்டுக்குள்ளார வேலை வெட்டி அப்படியே கெடக்கு...."
"ஆமா... யெல்லாம் வக்கனையாத்தான் பேசுற.... ஆனா உன் வீராப்பு எல்லாம் யெங்க போகும்னு தானே பாக்கப் போறேன்" முனியம்மாளின் விழிகளைக் கொத்தும் பருந்துபோல் பார்த்துக் கொண்டே பேசினாள் காளியம்மாள்!
"யேண்டி... எதுக்கு இப்படி வடசட்டில விழுந்த புளு மாதிரி கெடந்து துடிக்கிறவ.... யென்ன விசயமுன்னு ஒன்னத்தையும் சொல்லாம... பேச்சுக்கு பேச்சு பொடி வச்சுப் பேசிக்கிட்டே போறயடி...."
"க்கும்ம்..." மென வாயை கொனட்டி இழுத்துக் கொண்டே "உனக்கு யெல்லாம் தெரியும்! யேன்கிட்ட தெரியாத மாதிரி நடிக்கிற.... அந்த வேலையெல்லாம் யேன்கிட்டக் காட்டாத.... உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?"
"அடியே....! இன்னைக்கு நீ ஒரு மார்க்கமாத் தாண்டி வந்திருக்கே.... யென்ன விசயமுண்ணு சொல்லுவியா மாட்டியா.... யெனக்கு வேலை கெடக்குடி"
"சரி சரி! சொல்லுறேன்.... சின்னமனூருக்காரி வார ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் விசேசம் வச்சிருக்காளாம்... அதுதேன் உனக்கு தெரியுமா இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு போலாம்னு வந்தேன்..." யென்றவள் முனியம்மாள் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னாள் காளியம்மாள்!
"நீ யாரடி சொல்ற....?"
"அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி கேட்காத..."
"இதென்னடி வம்பாப் போச்சு.... நீயா வந்த... எதையோ சொன்ன... என்ன வெவரம்னு கேட்டா... ஒழுங்கா சொல்ல மாட்டேங்குற..."
"உனக்கு சின்னமனூருல்ல ஆயிரம் பேரா இருக்காங்க...." யென்றவள் முனியம்மாளின் முகம் மாறுதலை கவனித்து விட்டாள்!
"அதுக்கென்னடி இப்ப?"
"இல்ல.... விசேசத்துக்கு உன்னக் கூப்பிட்டாளா இல்லையா....?"
சிறிது நேரம் தயங்கி விட்டு "இல்லடி"
"அப்ப நீ போக மாட்டயில்ல...."
"அது எப்படி டி போகாம இருக்க முடியும்"
"யென்னக்கா சொல்ற? உன் கூடத்தேன் எந்த ஓட்டு உறவும் இல்லாம இருக்காளே...."
"அவ வேணுமெண்டா இருக்கலாம்! அதுக்காக அண்ணன் பெத்த மகங்கிற உறவ அழிக்க முடியுமா? யெனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் அவ தாண்டி.... அடிச்சாலும் புடிச்சாலும் யெனக்கு அவ தான்! அவளுக்கு நான் தான்.... சரி! அது கெடக்கட்டும்! அவ எங்க விசேசம் வச்சிருக்கா?"
"நம்ம ஈசுவரன் கோயில்ல நாளைக் கழிச்சு வாரே ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் விசேசம் வச்சிருக்கா...."
முனியம்மாளின் விழிகளில் பட்டாம்பூச்சி சிறகடித்தது!
(முடிந்தது)
கவிஞர் யாழிசைசெல்வா
29/06/2025
ரோசா கூட்டம் ஐந்தாம் ஆண்டு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கதை இது
No comments:
Post a Comment