Wednesday, 6 August 2025

Short story contest

உயில்

=======
கவிஞர் யாழிசைசெல்வா
========================
      இருள் சூழ்ந்து நீண்ட காலமாக படிந்த தூசியும்,  எங்கும் ஒரே நூலாம்படையாகத் தேங்கிக் குப்பைத் தொட்டியாக பராமரிப்பின்றி கெடந்த நிலவறைக்குள் நுழைந்த செல்லம்மாள் போன வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்து போல் வெளியே வந்தவள் "ம்அச்சு.... ம்அச்சு..... ம்அச்சு "யென விடாமல் தும்மிக் கொண்டிருந்தவள் "எத்தனை முறை சொன்னாலும் அந்தப் பய  முருகன் கேட்கவே மாட்டேங்குறான்! ரொம்ப நாளா பூட்டிக் கெடக்கு! அதை சுத்தம் பண்ணுடா எத்தனை தடவை சொல்லி இருப்பேன்! கேட்டானா.... இன்னும் ரெண்டு நாள்ல சென்னையிலிருந்து பொற்கொடி வந்துருவா... அவ மட்டும் இதப் பார்த்தா.... அவ்வளவுதான்.... வீட்ட ரெண்டாக்கிருவா..... அதுக்குள்ளற  இத சரி பண்ணப் பாக்கணும்"எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வீட்டின் பட்டாசாலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவள் "டேய் முருகா....! எங்கடா போன? இங்க இருக்கியா இல்லையா? "என்றவள் ஒரு வழியாக பட்டாசாலைலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைவிசிரி எடுத்து வீசிக் கொண்டிருந்தாள்!

     கொல்லைப்புறத்திலிருந்து பட்டாசாலை நோக்கி வந்த முருகன் துண்டை உதறி முகத்தை துடைத்துக் கொண்டு செல்லம்மாள் அருகே வந்து நின்றவன் "அம்மா கூப்பிட்டியா?" எனச் சொல்லிக்கொண்டே அவளருகே மர நாற்காலி எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்!

     "யேண்டா...  ஒருவேளை நீ வேணும்ன்டே காது கேட்காத மாதிரி நடிக்கிறியா என்ன?" என்ற செல்லம்மாள் முருகனை வினையமாகப் பார்த்தாள்!

     "என்னம்மா.... என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் இப்படி கேக்குறியே! இது உனக்கே நல்லா இருக்கா?"என்றவன் தலையைக் குனிந்து கொண்டான்!

      "தெரியும்டா...! சும்மா சொன்னேன் டா! நீ பாட்டுக்கு எதுவும் நினைச்சுக்காத!" என்றவள் முருகன் தலையைக் கோதிவிட்டாள்!

     "சரி சரி! மதிய நேர மாத்திரயை சாப்பிட்டியா இல்லையா? "

    "இல்லடா...! நிலவறைக்கு போனேன் அப்படியே மறந்துட்டேன்!" என்றவள் விழிகள் நிலவரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன!

     "நேரம் நேரத்துக்கு மாத்திரை சாப்பிடலனா தங்கச்சி என்னத் தான் திட்டும்! அது தெரிஞ்சும் நீ இப்படி செய்யலாமா? சரி இரு" என்றவன் செல்லம்மாள் படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்து அலமாரியில் மாத்திரையும் செம்பு நிறையத் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தான்! எதுவும் பேசாமல் முருகனிடம் மாத்திரை வாங்கி முழுங்கிவிட்டு செம்பைக் கீழே வைத்தாள்!

     "முருகா..." என்றாள் செல்லம்மாள். "இப்ப என்ன சொல்ல வாறேன்னு எனக்குத் தெரியும்! நிலவரையை சுத்தம் பண்ணிடுறேன், அதுக்கு மின்னால உன்னப் பத்தி எத்தனை தடவை கேட்டு இருக்கேன் ஒரு தடவையாவது அதைப் பத்தி சொல்லி இருக்கியா? இன்னைக்கு நீ சொல்லியே ஆகணும்!" என்றான் பிடிவாதமாக முருகன்!


     " நீ வேலைக்கு வந்து அஞ்சு வருஷமாச்சு! நீயும் வந்ததிலிருந்து அத விடாமக் கேட்டு கிட்டுத்தானிருக்க!  அதப்பத்தி கேட்காதன்னு சொல்லிட்டேன் உனக்கு புரியுதா இல்லையா? இல்ல வேணுமின்டே கேக்குறியா?"

     "நீ சொல்றதெல்லாம் உண்மைதான்! நிலவறை பக்கம் போனாலே திட்டுற நீ!  எப்பவும் இல்லாம இந்த வருஷம் நிலவறைய சுத்தம் பண்ணச் சொல்றியே அதுதான் ஏன்? "

     "சரி சொல்றேன்" என்றவள் ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போல் நாற்காலியில்  சாய்ந்து கொண்டவள் "இந்த வீட்லதான் நானும் எங்க அண்ணன் குருசாமியும் பொறந்தோம்!  தோட்டத்துல விளையறது தேவைக்கு அதிகமா வருமானத்தை கொடுத்ததால , வீட்ல பணப் பிரச்சனை வந்ததேயில்லே!  எங்க அண்ணன் நல்லா படிச்சு மாவட்ட ஆட்சித் தலைவராயிட்டான்! அதனால அவனுக்கு எங்க சொந்தக்காரப் பொண்ணப் பார்த்து கல்யாணம் கட்டி வச்சுட்டாங்க!  ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்தான்! அப்பத்தான் நான் கல்லூரியில வரலாறு மூன்றாமாண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன்! அந்த ஆண்டு நடந்த கலை நிகழ்ச்சியில சுந்தரபாண்டியனப் பாக்குற வரையிலும் என் வாழ்க்கை இயல்பா தான் போய்கிட்டுருந்துச்சு!" என்றவள் முகம் தாமரையாய் மலர்ந்தது!

     "அப்புறமென்ன நடந்துச்சு! சீக்கிரம் சொல்லுமா? "

     "இருடா... சொல்லாம என்ன செய்யப் போறேன்" என்றவள் தொடர்ந்து "ஆடல் பாடல் முடிந்த பிறகு நான் நடிச்ச நாடகத்தைப் பார்த்த  எல்லாரும் அமைதியா இருந்தப்ப அவர் மட்டும் விசிலடிச்சு கொண்டாடித் தீர்த்திட்டாரு...."

     "அப்புறம் என்ன?"

      "பெறகு என்ன? நானும் சும்மா இருக்காம அவரைப் பத்தி அவரோட கல்லூரி பொண்ணுக கிட்ட வெவரம் கேட்கும் போது அவரே முன்னால வந்து 'உன்ன எனக்கு புடிச்சிருக்கு! கல்யாணம் கட்டிக்க சம்மதமானு' கேட்டுட்டாரு.... ஒரு நிமிஷம் எனக்கு படபடன்னு ஆயிருச்சு..... அதுக்குப் பெறகு ரெண்டு மாசம் அவர அலையவிட்டு, அவருக்கு சம்மதம் சொன்னேன்! ஒரு நாள் ரெண்டு பேரும் நம்ம ஊரு முருகன் கோயிலுல மாலைமாத்தியதோட பதிவுத் திருமணம் செஞ்சு, எங்க வீட்டுக்கு வந்தப்ப, எங்க அப்பா எங்களச் சேர்த்துக்காம வீட்டை விட்டு விரட்டிட்டாரு! ரொம்ப நாளா அவரோட பேச்சு வார்த்தையே இல்ல... எங்க அப்பா இறந்த பெறகு இந்த வீட்டை எங்கண்ணன் எனக்கு கொடுத்துட்டாரு" என்றவள் விழிகள் குளமாயின!

      அப்போது "செல்லம்மா! இந்த வீட்ட உங்க அப்பா உன் பேர்ல எழுதி வச்ச உயில உங்க அண்ணன் இப்பதான் பதிவுத் தபாலுலே  அனுப்பியது வந்துச்சு"என்றபடி உள்ளே வந்தார் சுந்தரபாண்டியன்!

      எதுவும் பேசாமல் உயிலைக் கையில் வாங்கியவள் சிறுவயதில் ஓடி விளையாடிய நிலவரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா!

(முடிந்தது)

#############################################

கதை 02 

========

நாட்காட்டியின் நினைவலைகள் 

===========================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

        பரபரப்பைக் பற்றி கொண்டு சதுரக் கண்ணாடியின் வழியே விழியில் நலம் விசாரித்தபடி வகுப்பறைக்குள் நுழைந்தவர் "இந்த ஆண்டு வரலாற்றுத் துறை ஆண்டு விழாவில் யாரெல்லாம் பேசப் போறீங்க? விருப்பம் இருக்கவங்க பேர் கொடுக்கலாம்"எனப் புதிய விடியலுக்கு கட்டியம் கூறினார் பேராசிரியர் துரைச்சாமி!

       ஒவ்வொருவரும் வகையாய் மாட்டிக் கொண்ட திருடன் போல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்களே தவிர யாருமே பதில் தரவில்லை! 

     "நீங்களா பேர் சொல்றீங்களா? இல்ல நானே பேர எழுதிக்கவா?"எனப்பேராசிரியர் கரடியாய் கத்தினாலும் யாரிடமும் எந்தவித பதிலுமில்லை! "வேற வழியே இல்ல... செவ்வந்தி, செல்வகுமார், ரவிக்குமார் நீங்க மூணு பேரும் பேசுறீங்க" எனச் சொல்லிவிட்டு பாடவேளை முடிந்ததால் வகுப்பறை விட்டு வெளியேறிச் சென்றார் துரைசாமி! 

       "என்னடா இப்படி பண்ணிட்டாரு! இப்ப, என்ன பண்ணப் போற? இதுவரைக்கும் ஏதாவது மேடையில பேசி இருக்கியா?" என செல்வகுமாரைப் பார்த்துக் கேட்டான் மாரியப்பன்! 

     "இல்லடா... பள்ளிக்கூடம் படிக்கும் போது ஒன்னு ரெண்டு மேடையில பரிசு வாங்குவதற்கு மட்டும்தேன் மேடை ஏறி இருக்கேன்! இதுவரைக்கும் எந்த மேடையிலும் பேசுனதில்ல..." பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் மாரியப்பனிடம் பேசினான் செல்வகுமார். 

     "இப்ப என்ன செய்யப் போற?"

     "அதுதாண்டா தெரியல எனக்கு?"

     "பேசாம அவர் கிட்ட போயி உண்மையை சொல்லிரலாமா?"தலையை ஆட்டிய செல்வக்குமார் மாரியப்பனுடன் அதை வேகத்துடன் வரலாற்றுத் துறை அலுவலகத்திற்குள் நுழைந்து பேராசிரியர் துரைச்சாமி முன்பாக இருவரும் நின்றுந்தார்கள்!

     "என்னையா வந்திருக்கீங்க?" என்றவர் அவர்கள் முகத்தை பார்த்தார்! 

     "பேச்சுப் போட்டிக்கு என்னோட பேர சொல்லிட்டீங்க... என்ன பேசுறது? எப்படி பேசுறது? எதுவுமே தெரியாது ஐயா!" தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தையை உருவி எடுத்து வெளியே மெல்லக் கொட்டினான் செல்வகுமார்!

      "அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரமில்ல... நாலு மேடை ஏறிப் பேசினா எல்லாமே தானா வந்துரும்... நீ பேசுற அவ்வளவுதான். உனக்கு ஏதாவது புத்தகம் வேணும்னா நூலகத்தில் எடுத்துப் படிச்சுக்கோ! நான் நூலகத்துல சொல்லிடுறேன். வாழ்க்கையில வாய்ப்பு எப்போதுமே தானா அமையாது! நாமதேன் அமைச்சுக்கிறணும்! கிடைச்சது புடிச்சு மேல போக பழகிக்க! போயிட்டு வா!" என்றவர் அருகிலிருந்த 'ரொமிலா தாப்பர் எழுதிய பண்டைக் கால இந்தியா' புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கி விட்டார் பேராசிரியர் துரைசாமி!

    "என்னடா இப்படி சொல்லிட்டாரு? இப்ப என்ன பண்ண போற?" என மாரியப்பன் செல்வகுமாரை பார்த்துக் கேட்டான்! 

      அதற்கிடையே....

     இவர்களைக் கடந்து சென்ற சக மாணவர்களில் ஒருவன் "வகுப்புல ஒரு நாளும் பாடத்தைத் தவிர வேறு எதுவும் சந்தேகம் கேட்க மாட்டான்! இவன் எல்லாம் என்ன பேசிக் கிழிக்கப் போறனோ? "என செல்வக்குமாரைப் பார்த்து கைதட்டி நண்பர்களிடம் சிரித்தான்!

    எதுவும் பேசாமல் இருவரும் நூலகத்திற்கு வந்திருந்தார்கள்! வெகு நேரம் தேடிய பின்பு கிடைத்த புத்தகம் 'நொறுக்கப்பட்ட மனிதர்கள்' அதனைப் படித்த செல்வகுமார் முகத்தில் மின்னலாய் தலைப்பு தோன்றியது!

     ஆண்டு விழா பேச்சுப் போட்டியில் வென்ற புத்தகத்தையும், நாட்குறிப்பையும் செல்வகுமார் திறந்த போது கல்லூரி ஞாபகம் நிழலாடியது!

(முடிந்தது)

################################################

கதை 03

=========

பூத்தது வாழ்க்கை 

================

யாழிசைசெல்வா 

===============

      அந்தி வானத்தைத் துரத்திக் கொண்டு இருள் கவிழ்ந்து கொண்டிருந்த மாலை வேளை! வேப்பமரமருகே இருந்தது செல்லாயி குடிசைவீடு! 

     வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு மண்ணெண்ணெய் விளக்கைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் செல்லாயி மகள் மீனாட்சி! அலை அலையாய் பரவியிருந்த கருங்கூந்தல் முகத்தின் முன்னால் பரவி முத்தமிட்டு கொண்டிருந்தபோது "தாயி! அம்மா இல்லையா...?" என்றபடி வாயில் போட்டிருந்த வெத்தலையைக் குதிப்பிக் கொண்டே கேட்டாள் செல்லம்மா! 

      "வாங்க பெரியம்மா....! அம்மா வீட்டுக்குள்ளற தான் இருக்காங்க. செத்த பொருங்க...."என்றவள் வீட்டிற்குள் திரும்பி "அம்மா.... அம்மா..." என்றாள் மீனாட்சி! 

     "உள்ளாற தானே இருக்கேன்! அதுக்கேண்டி இப்படி கெடந்து கத்துற..."என்றபடி வாசலில் வந்த செல்லாயி, "வாக்கா.... இப்பத்தான் யேன் வீடு இருக்க நெனப்பு தெரிஞ்சதாக்கும்.... திடீர்னு அதிசயமா வந்திருக்கியே.... காரணமில்லாம வரமாட்டியே... சொல்லுக்கா..." என்றவள் திண்ணையில் அமர்ந்து கொண்டு செல்லம்மாவையும் கையைப் பிடித்து அருகே அமர வைத்தாள் செல்லாயி!

      சிறிது நேரம் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாவைப் பார்த்து "என்ன? காணாததை கண்டது போல புள்ளையை அப்படி வெரச்சுப் பார்க்குற...? என்ன விவரமுனு சொல்லுக்கா?" 

       "நேத்து சந்தைக்கு போயிருந்தேன். அப்ப நம்ம தூரத்துச் சொந்தம் மகாலிங்கம் அண்ணனைப் பார்த்தேன்!" 

     "சரி! அதுக்கென்ன இப்ப?"என வெடுக்கெனக் கேட்டாள் செல்லாயி!

     "கொஞ்சம் பொறுடி, முழுசா என்னச் சொல்ல விடு!"

      "சரி சரி! நான் எதுவும் சொல்லல..."

      "மகாலிங்க அண்ணன் மகன் கருப்பசாமிக்கு ரொம்ப நாளா பொண்ணு தேடிக்கிட்டு இருக்க தா சொன்னாரு. ஒரு இடமும் நல்லபடியா அமையல. உனக்கு தெரிஞ்ச பொண்ணு ஏதாவது இருந்தா சொல்லுனு சொன்னாரு. உடனே மீனாட்சி பத்தி அவர்கிட்ட சொன்னேன்" என்றவள், செல்லாயி முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்! 

     "மகாலிங்கம் அண்ணே! ரொம்ப நல்லவருதான்! ஆனா என்னோட நெலமை உனக்குத்தான்.... தெரியுமில்ல...! அந்த மனுசன் போன பிறகு என் உசுர கையில புடிச்சு வச்சிருக்கதே மீனாட்சிக்காகத்தான்! அவள நல்லவன் கையில புடிச்சு கொடுத்துட்டா...." என்றவள் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் செல்லாயி!

     "இப்ப நீ எதுக்கு கெடந்து மனசப் போட்டுக் குழப்பிக்கிற, மகாலிங்க அண்ணனோட பையன் நல்லா படிச்சு, கை நிறையச் சம்பாதிக்கிறான்! எந்தக் கெட்ட பழக்கமுமில்லை! பெறகு உனக்கென்ன கவலை?"

     "நான் இருக்க நெலமையில மீனாட்சிய எப்படி கட்டிக் கொடுக்கப் போறேன்?"

     "மீனாட்சிக்கு ஏற்கனவே குடிகார சடையாண்டியோட கல்யாணமாகி அவன் கொடுமை பொறுக்க முடியாம, ஊரைக் கூட்டி சபையில வச்சு அவனோட வாழ்ந்தது போதுமுனு அத்து விட்ட நாளே நாளுல மகளுக்கு ஏற்பட்ட துக்கம் தாங்காமல் மீனாட்சி அப்பா இறந்தது எல்லாத்தையும் தெளிவாச் சொல்லிட்டேன். அது மட்டுமில்லாம கல்யாணத்த ஆடம்பரமில்லாம மாரியம்மன் கோயில்ல, நம்ம சொந்தக்காரங்களை மட்டும் அழைச்சு வச்சு நடத்துறதுக்கும் அவர் சம்மதிச்சுட்டாரு... இப்ப சொல்லு இதுல கவலைப்பட என்ன இருக்கு?" என்ற போது மீனாட்சி விளக்கேற்றியதில் வெளிச்சத்தில் வீடு நிறைந்திருந்தது!

     பூத்தது வாழ்க்கையென தாயும் மகளும் சிரித்தார்கள்!

    (முடிந்தது)


##################################################



No comments:

Post a Comment