அவளோடு போனவை
====================
கவிஞர் யாழிசைசெல்வா
=======================
மேற்குத் தொடர்ச்சி மலையில் விழுந்து கொண்டிருந்தது சூரியன். அணையும் விளக்கின் பிரகாசத்தோடு அந்திவானம் சிவந்திந்தது. மாடுகளை குளிப்பாட்டுவதற்காக குளத்தில் இறக்கியிருந்தான் சந்தனம். ஒரு வாரமாக மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டுமென்று நினைத்தது இன்று தான் கை கூடியது. இடுப்பாலத்தில் நின்று கொண்டு குளத்தின் நீரை ரெண்டு கைகளாலும் வாரி வாரி மாட்டின் மீது இறைத்தான். தண்ணீர் பட்டதும் உடலை சிலிர்த்துக் கொண்டன மாடுகள். வைக்கோல் பிரிவைத்து உடல் முழுவதும் சந்தனம் தேய்த்து விட்டதும் மாடுகள் பார்ப்பதற்கு அழகாய்த் தெரிந்தன. பொழுது மேலேறி இருளின் ஆதிக்கம் மெல்லப் பரவி வந்து கொண்டிருந்தது. குளிப்பாட்டி முடிந்ததும் மாடுகளை கரையிலிருந்த ஆலமரத்தின் விழுதுகளில் கட்டி வைத்தான்.
"ஏலே சந்தனம்.... நீ வரலையா....?" பக்கத்தூர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு போய்க்கொண்டிருந்த தங்கப்பாண்டி கேட்டான்.
.
"வெள்ளையும் சொல்லையுமா எங்கடா கிளம்பிட்ட? பாக்குறதுக்கு மாப்பிள்ளை கணக்கால இருக்க? வேற ஏதும் விசேஷமாடா? என்கிட்ட கூட சொல்லாம அப்படி என்னடா ரகசியம்? ரெண்டு பேரும் ஒன்னாத் தானே எங்க போனாலும் போவோம். இப்ப என்னடான்னா நீ மட்டும் தனியாப் போய்கிட்டு இருக்க? இதெல்லாம் உனக்கு நல்லவா இருக்கு? அம்புட்டுத்தேன் நம்ம கூட்டோட லட்சணம் போலருக்கு.... சரி! நீயொரு முடிவோட கிளம்பிட்ட.... நல்லபடியாப் போயிட்டு வாடா..." எனச் சொல்லிக்கொண்டே சந்தனம் குளத்தை நோக்கி நடந்தான்.
"இருடா. நீ பாட்டுக்கு என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்க. உன்ன விட்டு நான் எங்கேயும் போகல. உன்னத் தேடி வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டிக் கிடந்துச்சு. அப்பத்தான் பக்கத்து வீட்டு காளியம்மாப் பாட்டி, நீ மாட்ட புடிச்சுகிட்டு குளத்து பக்கம் போனதா சொன்னாங்க. அதுதான் உன்னைத் தேடி இங்க வந்தேன். இது தெரியாம நீ பாட்டுக்கு என் மேல கோபப்பட்டுட்டு இருக்க" எனச் சொல்லிக் கொண்டே சந்தனம் அருகே வந்தான் தங்கப்பாண்டி.
"என்ன மன்னிச்சுக்கடா. நீ வெள்ளையும் சொல்லையுமா கிளம்பி வந்ததை பார்த்ததும் எனக்கு அப்படித் தோனிருச்சு. அதுக்காண்டி என்ன கோவிச்சுக்காத. சரி இப்பச் சொல்லு? எங்க போறதுக்காக இப்படி கிளம்பி வந்து இருக்க?"
"உன்னோட அம்மா பிறந்த ஊருல காளியம்மா கோவில் திருவிழா நடக்குதுடா. அது உனக்கு தெரியாதா? இல்ல நீ மறந்துட்டியா? எதுனாலும் பரவாயில்லை வா ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்"
"இல்லடா நான் வரல. நீ போயிட்டு வா"
"ஏண்டா வரல? உன்னோட அம்மா ஊரு தானடா அது. பெறகெதுக்கு வர மாட்டேங்குற?"
"என்னைக்கு என்னோட அம்மா யெறந்து போச்சோ. உறவு அருந்த மாதிரி அன்னையோட எங்கப்பனும் என்னத் தலைமுழுகிட்டு வேற கல்யாணம் கட்டிக்கிட்டான். அந்த ஊருக்கும் எனக்குமான சம்பந்தம் விட்டுப் போயிடுச்சு. அதுக்கு பிறகு அந்த ஊரோட எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்ல..."
"அதுக்கு சாமி என்னடா பண்ணும்?"
"எங்க அம்மாவை விட பெரிய சாமி எனக்கு எதுவும் இல்லடா....! எல்லாம் எனது அம்மாவோட போயிருச்சுடா...." எனச் சொல்லிக்கொண்டே குளிப்பதற்கு குளத்தில் இறங்கினான் சந்தனம்.
(முடிந்தது)
கவிஞர் யாழிசைசெல்வா
14/07/2025
No comments:
Post a Comment