Tuesday, 27 May 2025

உயில் கவிஞர் யாழிசைசெல்வா

உயில்

=======

கவிஞர் யாழிசைசெல்வா 

========================

      இருள் சூழ்ந்து நீண்ட காலமாக படிந்த தூசியும்,  எங்கும் ஒரே நூலாம்படையாகத் தேங்கிக் குப்பைத் தொட்டியாக பராமரிப்பின்றி கெடந்த நிலவறைக்குள் நுழைந்த செல்லம்மாள் போன வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்து போல் வெளியே வந்தவள் "ம்அச்சு.... ம்அச்சு..... ம்அச்சு "யென விடாமல் தும்மிக் கொண்டிருந்தவள் "எத்தனை முறை சொன்னாலும் அந்தப் பய  முருகன் கேட்கவே மாட்டேங்குறான்! ரொம்ப நாளா பூட்டிக் கெடக்கு! அதை சுத்தம் பண்ணுடா எத்தனை தடவை சொல்லி இருப்பேன்! கேட்டானா.... இன்னும் ரெண்டு நாள்ல சென்னையிலிருந்து பொற்கொடி வந்துருவா... அவ மட்டும் இத பார்த்தா.... அவ்வளவுதான்.... வீட்ட ரெண்டாக்கிருவா..... அதுக்குள்ளற  இத சரி பண்ணப் பாக்கணும்"எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வீட்டின் பட்டாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவள் "டேய் முருகா....! எங்கடா போன? இங்க இருக்கியா இல்லையா? "என்றவள் ஒரு வழியாக பட்டாசலைலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைவிசிரி எடுத்து வீசிக் கொண்டிருந்தாள்! 


     கொல்லைப்புறத்திலிருந்து பட்டாசலை நோக்கி வந்த முருகன் துண்டை உதறி முகத்தை துடைத்துக் கொண்டு செல்லம்மாள் அருகே வந்து நின்றவன்"அம்மா கூப்பிட்டியா?" எனச் சொல்லிக்கொண்டே அவளருகே மர நாற்காலி எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்! 


     "யேண்டா...  ஒருவேளை நீ வேணும்ன்டே காது கேட்காத மாதிரி நடிக்கிறியா என்ன?" என்ற செல்லம்மாள் முருகனை வினையமாகப் பார்த்தாள்!


     "என்னம்மா.... என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் இப்படி கேக்குறியே! இது உனக்கே நல்லா இருக்கா?"என்றவன் தலையைக் குனிந்து கொண்டான்! 


      "தெரியும்டா...! சும்மா சொன்னேன் டா! நீ பாட்டுக்கு எதுவும் நினைச்சுக்காத!"என்றவள் முருகன் தலையைக் கோதிவிட்டாள்! 


     "சரி சரி! மதிய நேர மாத்திரயை சாப்பிட்டியா இல்லையா? "


    "இல்லடா...! நிலவறைக்கு போனேன் அப்படியே மறந்துட்டேன்!" என்றவள் விழிகள் நிலவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன!


     "நேரம் நேரத்துக்கு மாத்திரை சாப்பிடலனா தங்கச்சி என்னத் தான் திட்டும்! அது தெரிஞ்சும் நீ இப்படி செய்யலாமா? சரி இரு" என்றவன் செல்லம்மா படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்து அலமாரியில் மாத்திரையும் செம்பு நிறையத் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தான்! எதுவும் பேசாமல் முருகனிடம் மாத்திரை வாங்கி முழுங்கிவிட்டு செம்பைக் கீழே வைத்தாள்!


     "முருகா..."என்றாள் செல்லம்மா. "இப்ப என்ன சொல்ல வாறேன்னு எனக்குத் தெரியும்! நிலவரைய சுத்தம் பண்ணிடுறேன், அதுக்கு மின்னால உன்னப் பத்தி எத்தனை தடவை கேட்டு இருக்கேன் ஒரு தடவையாவது அதைப் பத்தி சொல்லி இருக்கியா? இன்னைக்கு நீ சொல்லியே ஆகணும்!"என்றான் பிடிவாதமாக முருகன்! 


     " நீ வேலைக்கு வந்து அஞ்சு வருஷமாச்சு! நீயும் வந்ததிலிருந்து அத விடாமக் கேட்டு கிட்டுத்தானிருக்க!  அதப்பத்தி கேட்காதன்னு சொல்லிட்டேன் உனக்கு புரியுதா இல்லையா? இல்ல வேணுமின்டே கேக்குறியா?"


     "நீ சொல்றதெல்லாம் உண்மைதான்! நிலவறை பக்கம் போனாலே திட்டுற நீ!  எப்பவும் இல்லாம இந்த வருஷம் நிலவறைய சுத்தம் பண்ணச் சொல்றியே அதுதான் ஏன்? "


     "சரி சொல்றேன்" என்றவள் ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போல் நாற்காலியில்  சாய்ந்து கொண்டவள் "இந்த வீட்லதான் நானும் எங்க அண்ணன் குருசாமியும் பொறந்தோம்!  தோட்டத்துல வெளையறது தேவைக்கு அதிகமா வருமானத்தை கொடுத்ததால , வீட்ல பணப் பிரச்சனை வந்ததேயில்லே!  எங்க அண்ணன் நல்லா படிச்சு மாவட்ட ஆட்சித் தலைவராயிட்டான்! அதனால அவனுக்கு எங்க சொந்தக்காரப் பொண்ணப் பார்த்து கல்யாணம் கட்டி வச்சுட்டாங்க!  ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்தான்! அப்பத்தான் நான் கல்லூரியில வரலாறு மூன்றாமாண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன்! அந்த ஆண்டு நடந்த கலை நிகழ்ச்சியில சுந்தரபாண்டியனப் பாக்குற வரையிலும் என் வாழ்க்கை இயல்பா தான் போய்கிட்டுருந்துச்சு! "என்றவள் முகம் தாமரையாய் மலர்ந்தது! 


     "அப்புறமென்ன நடந்துச்சு! சீக்கிரம் சொல்லுமா? "


     "இருடா... சொல்லாம என்ன செய்யப் போறேன்" என்றவள் தொடர்ந்து "ஆடல் பாடல் முடிந்த பின்பு நான் நடிச்ச நாடகத்தைப் பார்த்த  எல்லாரும் அமைதியா இருந்தப்ப அவர் மட்டும் விசிலடிச்சு கொண்டாடித் தீர்த்திட்டாரு...."


     "அப்புறம் என்ன?"


      "பெறகு என்ன? நானும் சும்மா இருக்காம அவரைப் பத்தி அவரோட கல்லூரி பொண்ணுக கிட்ட வெவரம் கேட்கும் போது அவரே முன்னால வந்து 'உன்ன எனக்கு புடிச்சிருக்கு! கல்யாணம் கட்டிக்க சம்மதமானு' கேட்டுட்டாரு.... ஒரு நிமிஷம் எனக்கு படபடன்னு ஆயிருச்சு..... அதுக்குப் பெறகு ரெண்டு மாசம் அவர அலையவிட்டு, அவருக்கு சம்மதம் சொன்னேன்! ஒரு நாள் ரெண்டு பேரும் நம்ம ஊரு முருகன் கோயிலுல மாலைமாத்தியதோட பதிவுத் திருமணம் செஞ்சு, எங்க வீட்டுக்கு வந்தப்ப, எங்க அப்பா எங்களச் சேர்த்துக்காம வீட்டை விட்டு விரட்டிட்டாரு! ரொம்ப நாளா அவரோட பேச்சு வார்த்தையே இல்ல... எங்க அப்பா யெறந்த பெறகு இந்த வீட்டை எங்கண்ணன் எனக்கு கொடுத்துட்டாரு"என்றவள் விழிகள் குளமாயின! 


      அப்போது "செல்லம்மா! இந்த வீட்ட உங்க அப்பா உன் பேர்ல எழுதி வச்ச உயில உங்க அண்ணன் இப்பதான் பதிவுத்தபாலுலே  அனுப்பியது வந்துச்சு"என்றபடி உள்ளே வந்தார் சுந்தரபாண்டியன்! 


      எதுவும் பேசாமல் உயிலை கையில் வாங்கியவள் சிறுவயதில் ஓடி விளையாடிய நிலவரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா!

(முடிந்தது)

கவிதை சரல் சங்கமம் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கதை இது!


    

No comments:

Post a Comment