மாண்புமிகு மனைவி
யாழிசைசெல்வா
விட்டும் தொட்டும் விடாத
ஐப்பசி அடைமழையில்
தூர கிழக்கில் இடி மின்னலைப் புரட்டித் தள்ளி
மின்சாரப் பூவாய் இதயத்தில் மலர்ந்த
வசந்தத் திருநாளாய் அமைந்த மண நாள் அது!
கலையாத கனவுகளோடு காற்றுக்கும் தெரியாமல்
கண்ணெழுத்துக் கவிதையில் கார்கால மயிலாய்
எத்தனையோ கற்பனைகளோடு
ஏகாந்த நினைவுகளைச் சுமந்து கொண்டு
எதிர்பார்ப்பில் நீயிருந்தபோது
திடீரென இடி விழுந்த வீடாய்
மாறிப்போன நாட்களில் தானடி
உன்னை நான் அறிந்து உதிர்ந்து போனேன்!
உன் வானை மூடிய கருப்பு இரவுகளாய்
புதைத்துக் கொண்ட எத்தனையோ நாட்களில்
தடமிழந்து தவித்துக் தனியே சிறகடித்து
அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப் பூவாய்
அத்தனை துயரங்களையும் அடித்துத் துவைத்து
மலர்ந்து சிரித்த உனது புன்னகை முன்னால்
ஆணேன்ற கர்வம் உன் காலடியில் சிதைந்து
காணாமல் போன நாளில் தானடி
மாண்புமிகு மனைவி நீயென்பதை உணர்ந்து
உன் இதழோறப் புன்னகையாய்
நானிருக்க தவமாய் கிடந்தேன்!
செல்வி தரிசனம் நீ தருவாயா ?
உனக்கான இரவுகளாய் எப்போதும் நானிருக்க?
கவிஞர் யாழிசைசெல்வா
05/05/2025
No comments:
Post a Comment