Saturday, 17 May 2025

உண்ணா நோன்பு யாழிசைசெல்வா

உண்ணா நோன்பு 

=================

யாழிசைசெல்வா

===============

        சுருக்கெனக் குத்தும் மொட்ட வெயில் பிட்டத்தை சுட்டெரிச்சு பொசுக்கும் நடு மதியான வேளையில் கடலைச் செடிக்கு களைவெட்டிக் கொண்டிருந்தாள்  பூரணி!  பொடனில அடிச்ச மாதிரி "ஏண்டி பூரணி...! வாடி சாப்பிட்டு வேலை செய்யலாம்", சத்தம் வந்த தெசப்பக்கம் திரும்பாமலே "இல்ல சின்னம்மா நீ சாப்பிடு!"


     "அப்படி என்னடி சாப்பிடாம கொள்ளாம வேலை செய்ய வேண்டிக் கெடக்கு! அப்படி மிச்சம் பண்ணி நீ என்னத்த அள்ளிக்கட்டப் போற! கூலிக்கு மாரடிக்கிற நானே சாப்பிடுறேன். காட்டுக்கு சொந்தக்காரி நீ ஏண்டி இப்படி கெடந்து உன்ன வருத்திக்கிற" என்றாள் சீலக்காரி!


     "அட நீ வேற... வெவரம் புரியாம பேசாத...! அவ உண்ணா நோன்பு இருக்கா..." என சீலக்காரி அருகில் களைவெட்டிக்கிட்டுயிருந்த கருப்பாயி சொன்னாள்.


    "என்னடி சொல்ற கருப்பாயி?"


    "ஆமா உனக்கு ஒன்னும் தெரியாது! ஏன் வாயை கெலராம சும்மா இரு!"


      "உண்மையில தாண்டி கேக்குறேன் எனக்கு அந்த வெவரம் தெரியாது!"


    "பூரணி கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சுனு அவ மாமியா கெடந்து தெனமும் புடுங்கித் திங்கிறா, அது பொறுக்க முடியாமத்தான் நம்ம வீரபாண்டி மாரியம்மன் சாமிக்கு வேண்டுதல் வச்சி உண்ணா நோன்பு இருக்கா... நீ அது தெரியாம ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க"


    "எனக்கு உண்மையிலேயே இந்த வெவரம் தெரியாதுடி! தெரிஞ்சா நான் எதுக்கு கேட்கப் போறேன்..."


     "ரெண்டு நாளைக்கு முன்னால வந்த பூரணியோட நாத்தனாளும் பத்தாக்கொறைக்கி அவ பங்குக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆத்தாள ஏத்தி விட்டுட்டு போயிட்டா.... சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு குதிச்ச மாதிரி தெருவுல நின்னு ஒரே ஆட்டத்தை ஆடி பூரணியை கேவலப்படுத்தி புட்டா மாமியாகாரி! பாவம் எதுவும் பேசாம தேம்பித் தேம்பி அழுதுகிட்டே நின்னுகிட்டு இருந்தா.... வேடிக்கை பாத்த சனம் ஒன்னு கூட என்னா ஏதுன்னு கேட்கவே இல்லையே"


     "கேட்டா பூரணியோட மாமியா, அவங்கள சும்மா விட்ருவாளா....? மேல விழுந்து நாய் மாதிரி கடிச்சு கொதறிற மாட்டா...."


       "ஆமா.... அதுவும் உண்மைதான்" என்றாள் கருப்பாயி!


     களைவெட்டியதை நிறுத்திவிட்டு   சோர்ந்து போய் வேப்பமரம் அருகே அமர்ந்து கொண்டாள் பூரணி! அதப் பாத்ததும் சீலக்காரியும் கருப்பாயியும் அவளருகே போனார்கள்! எங்கிருந்தோ கெளம்பி வந்த இளங் காற்று முகம் முழுவதும் வேர்த்துகெடந்த பூரணியோட முகத்தை முத்தமிட்டு சென்றது! 


      "பாவம் புள்ள சொனங்கிப் போயிட்டா.... " எனக் கூறிக்கொண்டே பூரணியின் முகத்தை தன்னோட முந்தானைச் சேலையால் விசிறி விட்டுக் கொண்டே "ஏண்டி ஆத்தா! கொஞ்சம் பச்ச தண்ணியாவுது குடியேண்டி...."என்றாள் சீலக்காரி!


      "வேணாம் சின்னம்மா! சாயங்காலம் வரைக்கும் நாக்குல பச்ச தண்ணி படாம இருக்கணும்! இல்லாட்டி வேண்டுதல் வீணாப் போயிரும்!" 


     "தாயில்லாத புள்ள இப்படி தவிச்சு கெடக்கிறதை பார்க்கும் பொழுது மனசு பொறுக்கலடி"


      "வாங்கி வந்த வரம் அப்படி இருக்கு சின்னம்மா!" என்றவளின் விழிகள் துளிர்த்தன! "சரி வாங்க போய் வேலையைப் பார்க்கலாம்! இல்லாட்டி அதுக்கும் என் மாமியார் கெடந்து கத்துவா"என்றவள் மீண்டும் களைவெட்ட புறப்பட்டாள் பூரணி!

(முடிந்தது)

No comments:

Post a Comment