நாட்காட்டியின் நினைவலைகள்
===========================
கவிஞர் யாழிசைசெல்வா
======================
பரபரப்பைக் பற்றி கொண்டு சதுரக் கண்ணாடியின் வழியே விழியில் நலம் விசாரித்து"இந்த ஆண்டு வரலாற்றுத் துறை ஆண்டு விழாவில் யாரெல்லாம் பேசப் போறீங்க? விருப்பம் இருக்கவங்க பேர் கொடுக்கலாம்"எனப் புதிய விடியலுக்கு கட்டியம் கூறினார் பேராசிரியர் துரைச்சாமி!
ஒவ்வொருவரும் வகையாய் மாட்டிக் கொண்ட திருடன் போல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்களே தவிர யாருமே பதில் தரவில்லை!
"நீங்களா பேர் சொல்றீங்களா? இல்ல நானே பேர எழுதிக்கவா?"என பேராசிரியர் கரடியாய் கத்தினாலும் யாரிடமும் எந்தவித பதிலுமில்லை! "வேற வழியே இல்ல... செவ்வந்தி, செல்வகுமார், ரவிக்குமார் நீங்க மூணு பேரும் பேசுறீங்க"எனச் சொல்லிவிட்டு பாடவேளை முடிந்ததால் வகுப்பறை விட்டு வெளியேறிச் சென்றார் துரைசாமி!
"என்னடா இப்படி பண்ணிட்டாரு! இப்ப என்ன பண்ணப் போற? இதுவரைக்கும் ஏதாவது மேடையில பேசி இருக்கியா?"என செல்வகுமாரைப் பார்த்துக் கேட்டான் மாரியப்பன்!
"இல்லடா... பள்ளிக்கூடம் படிக்கும் போது ஒன்னு ரெண்டு மேடையில பரிசு வாங்குவதற்கு மட்டும்தேன் மேடை ஏறி இருக்கேன்! இதுவரைக்கும் எந்த மேடையிலும் பேசுனதில்ல..." பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் மாரியப்பனிடம் பேசினான் செல்வகுமார்.
"இப்ப என்ன செய்யப் போற?"
"அதுதாண்டா தெரியல எனக்கு?"
"பேசாம அவர் கிட்ட போயி உண்மையை சொல்லிரலாமா?"தலையை ஆட்டிய செல்வக்குமார் மாரியப்பனுடன் வரலாற்றுத் துறை அலுவலகத்திற்குள் நுழைந்து பேராசிரியர் துரைச்சாமி முன்பாக நின்றுந்தார்கள்!
"என்னையா வந்திருக்கீங்க?"என்றவர் அவர்கள் முகத்தை பார்த்தார்!
"பேச்சுப் போட்டிக்கு என்னோட பேர சொல்லிட்டீங்க... என்ன பேசுறது? எப்படி பேசுறது? எதுவுமே தெரியாது ஐயா!" தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தையை மெல்லக் கொட்டினான் செல்வகுமார்!
"அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரமில்ல... நாலு மேடை ஏறிப் பேசினா எல்லாமே தானா வந்துரும்... நீ பேசுற அவ்வளவுதான். உனக்கு ஏதாவது புத்தகம் வேணும்னா நூலகத்தில் எடுத்துப் படிச்சுக்கோ! நான் நூலகத்துல சொல்லிடுறேன். வாழ்க்கையில வாய்ப்பு எப்போதுமே தானா அமையாது! நாமதேன் அமைச்சுக்கிறணும்! கிடைச்சது புடிச்சு மேல போக பழகிக்க! போயிட்டு வா!" என்றவர் அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கி விட்டார் பேராசிரியர் துரைசாமி!
"என்னடா இப்படி சொல்லிட்டாரு? இப்ப என்ன பண்ண போற?" என மாரியப்பன் செல்வகுமாரை பார்த்துக் கேட்டான்!
அதற்கிடையே....
இவர்களைக் கடந்து சென்ற சக மாணவர்களில் ஒருவன் "வகுப்புல ஒரு நாளும் பாடத்தைத் தவிர வேறு எதுவும் சந்தேகம் கேட்க மாட்டான்! இவன் எல்லாம் என்ன பேசிக் கிழிக்கப் போறனோ? "என செல்வக்குமாரைப் பார்த்து கைதட்டி நண்பர்களிடம் சிரித்தான்!
எதுவும் பேசாமல் இருவரும் நூலகத்திற்கு வந்திருந்தார்கள்! வெகு நேரம் தேடிய பின்பு கிடைத்த புத்தகம் 'நொறுக்கப்பட்ட மனிதர்கள்' அதனைப் படித்த செல்வகுமார் முகத்தில் மின்னலாய் தலைப்பு தோன்றியது!
ஆண்டு விழா பேச்சுப் போட்டியில் வென்ற புத்தகத்தையும், நாட்குறிப்பையும் செல்வகுமார் திறந்த போது கல்லூரி ஞாபகம் நிழலாடியது!
(முடிந்தது)
No comments:
Post a Comment