Wednesday, 26 March 2025

கோலமிடும் மயிலே மாலையிட வரவா யாழிசை செல்வா

 கோலமிடும் மயிலே மாலையிட வரவா 

=================================

சூரிக் கத்தியோட

உங்கப்பன் எதிரே//01


கேலிக் கண்ணோட

ஊரெல்லாம் பேசும்//02


வேடிக்கை விரட்டும் 

முத்தமாகச் சிரிச்சு//03


கருக்கலில் பூக்கும் 

கனகாம்பரப் பூவே!//04

சுருக்காப் பேசும் 

சீனிப் பட்டாசே!//05


எனக்காகச் சிரிக்கும் 

வெள்ளரிப் பூவே!//06


அந்தி சாயும் 

மழைக் காத்துல//07


சோடிக் கிளியா 

பேசிப் பறந்து//08


வெட்கம் மறந்து 

வெடிச்சுப் பூத்த//09


கோலமிடும் மயிலே 

மாலையிட வரவா?//10

கவிஞர் யாழிசைசெல்வா 

26/03/2025

Sunday, 23 March 2025

அய்யனார் 02 யாழிசை செல்வா

🚔02. ஐந்தாம் மாடி ஆறாவது அறை!🚔

      குத்திட்டிக் கோபுரமாய் நிமிர்ந்திருந்த பத்து மாடிக் குடியிருப்பின் உள்ளேயிருந்து "வீல்"வென்ற பெருத்த அலறல் சத்தத்தால் ஈர்க்கப்பட்ட அய்யனாரும் சாத்தப்பனும் சட்டென குடியிருப்பை நோக்கி நகரத் தொடங்கினார்கள்! மழை நீரின் வெள்ளம் முழுவதுமாக சாலையிலிருந்து வடிந்து விட்டிருந்தாலும் ஆங்காங்கே அடித்துக் கொண்டு வந்த குப்பைகளை சாலையின் இருமருங்கிலும் விதைத்துச் சென்றிருந்தது!  பிளாஸ்டிக் பைகளும் சோப்பு காகிதங்களும் சகதிகளின் ஊடாக பிணைந்து எரிச்சல் தரும் புன்னகையை பிதுக்கி கொண்டிருந்தன! 


      ஏற்கனவே மழையில் முழுவதுமாக நனைந்து விட்டிருந்த அவர்களின் ஆடைகள், ஒரு வழியாக அவற்றின் ஈரத்தைக் காற்றிடம் கையளித்திருந்தன. 


     குத்தீட்டிக் கோபுரமாய் நிமிர்ந்து நின்றிருந்த குடியிருப்பின் வாசலைக் கடந்து உள்ளே நுழைய முற்பட்டபோது 'மருதம் எழிலகம்' எனும் பெயர் பலகை வாசலில் சிரித்துக் கொண்டிருந்தது! 


     மருதம் எழிலகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அதற்குள் கூட்டமாக கூடிப் பேசிக்கொண்டு பெரும் இரைச்சலை எதிரொலித்துக் கொண்டிருந்தார்கள். பத்து மாடிகளை கொண்டிருந்த அந்தக் குடியிருப்பு பெரும் மக்கள் வெள்ளத்தை, எழுந்த பெரும் சத்தத்தால் வெளியே துரத்தி அடித்திருக்க வேண்டும்! ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக எழிலகத்தின் குடியிருப்பாளர்கள், ஏதேதோ தங்களுக்கு தோன்றிய கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்! அப்போது அவர்களை அணுகி விட்டிருந்த அய்யனாரும் சாத்தப்பனும் அவர்களை கடக்க முயன்ற போது கூட்டத்தில் இருந்தவர்களின் உரையாடல் அவர்களை தேக்கி நிறுத்தி இருந்தது! 


     "ஐந்தாவது மாடியிலிருந்துதானே சத்தம் வந்தது! அங்க யாராயிருக்கும்?" என்றார் அங்கிருந்த கூட்டத்தில் வயதான நபர் ஒருவர்! 


    "ஐந்தாவது மாடியில மொத்தம் பத்து வீடு இருக்கு! அதுல எந்த வீட்டிலருந்து  சத்தம் வந்ததுன்னு யாருக்கு தெரியும்?"என்றார் அவர் அருகில் இருந்த குட்டை மனிதர்!


       "ஆமா நீ சொல்றதும் சரிதான்! எனக்கென்னவோ ஐந்தாவது மாடியில்  ஆறாவது வீட்டில் குடியிருக்கும் வீட்லருந்து தான் சத்தம் கேட்டதுனு நினைக்கிறேன்"

     

      "அங்க மருதமுத்து குடியிருந்தார்! "


        "ரொம்ப நல்ல மனிதர் ஆயிற்றே! என்னை பார்க்கும் போது எல்லாம் நலம் விசாரிச்சு பேசுவார்! எவ்வளவு முக்கியமான வேலையா வெளியே போனாலும் என்னிடம் பேசாமல் போக மாட்டார்! அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு எப்போதும் இருப்பார்! அவரால எந்த தொந்தரவும் இந்த குடியிருப்பில் இருந்ததில்லை! நானும் ரொம்ப காலமா இந்த குடியிருப்பில் இருக்கேன்!"


      "இதுவரைக்கும் இப்படி ஒரு அசம்பாவிதம் நம்ம குடியிருப்பில் ஏற்பட்டதே கிடையாது! எல்லாமே புதுசா இருக்கு! என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல! யாருக்கு வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் அப்படிங்கறதுக்கு இப்ப நடந்ததும் பெரிய உதாரணமாக போயிருச்சு!"


      "நீ பாட்டுக்கு ஏதாவது உளறி வைக்காத! இன்னும் நாம யாரும் அந்த வீட்ல தான் சத்தம் வந்ததுன்னு உறுதியா தெரியாதப்ப நாம எதுவும் பேசக்கூடாது!"


      "எல்லாம் சரிதான்! ஆனா சத்தம் போட்டது பொம்பள குரல் மாதிரி இருந்துச்சு! மருதமுத்தோட வீட்டில அவர் மட்டும் தானே தனியா இருந்தார்! இதுல எப்படி திடீர்னு பொம்பள குரல் கேட்க முடியும்? அதுதான் எனக்கு ஒன்னும் புரியல? என்ன நடந்திருக்கும் என்று ஒரே யோசனையா கெடக்கு! உனக்கு எதுவும் புரிபடுதா?"


       "நாம என்ன போலீஸா என்ன? அவர்களுக்குத்தான் எல்லாத்தையும் துப்பறிக்கிற புத்தி இருக்கும்! நாம சாதாரண மனுஷன் தானே! நம்ம வேலைய பாக்குறதுக்கு நேரம் பத்த மாட்டேங்குது! இதெல்லாம் யோசிக்கிறதுக்கு எங்க கெடக்கு நேரம்!"என அலுத்துக் கொண்டார்!


       அதுவரையில் அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அய்யனார் இனியும் தாமதிக்க வேண்டாம் என நினைத்தான் போலும்! கூட்டத்தை விளக்கிக் கொண்டு மருதம் எழிலகத்தின் உள்ளே நுழைய முயன்றான்! கூட்டத்தில் தனித்தனியாக பேசிக் கொண்டிருந்த அனைவரும் திடீரென தங்களைக் கடந்து யாரோ இருவர் உள்ளே நுழைவதை பார்த்ததும் திகைத்துப் போய் அவர்களையே பெரும் கேள்விக்குறியோடு பார்க்கத் தொடங்கி விட்டார்கள்! 


      அவர்களின் ஒருவர் "நீங்கள் யார்? திடீரென உள்ளே நுழைந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என கூட்டத்தை விளக்கிக் கொண்டு முன்னாள் வந்தார் வயதான வழுக்கைத்தலை கொண்ட மனிதர்!


      வழுக்கைத் தலை மனிதரின் கேள்விகளால் ஈர்க்கப்பட்ட இருவரும் அவரை நோக்கி திரும்பினார்கள்! அதற்குள் வழுக்கைத் தலை மனிதரும் அவர்கள் அருகே வந்து விட்டிருந்தார்! இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்! 


     அய்யனாரையும் சாத்தப்பனையும் மேலும் கீழும் பார்த்து விட்டு தனது இடுப்பில் கையை ஊன்றி கொண்டு, வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டியோடு நெற்றியில் குங்குமம் துலங்க சிவந்த நிறத்தில் காட்சி தந்தார் வழுக்கைத் தலை மனிதர்! 


       "நான் உங்கள் இருவரை பார்த்து தான் கேள்வி கேட்டேன்! நீங்கள் இதுவரை எவ்விதமான பதிலையும் தரவில்லை! யார் நீங்கள்? உங்களுக்கு இங்கு என்ன வேலை?"என மிரட்டும் தொனியில் அவர்களைப் பார்த்து கேட்டார்! 


      சாத்தப்பன் முந்திக்கொண்டு "இந்த கட்டிடத்தில் இருந்து யாரோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. அது என்னவென்று பார்க்கத்தான் இங்கு வந்தோம்!"என்றார்! 


       "அதெல்லாம் சரி! அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் யார்? யாரைக் கேட்டு நீங்கள் பாட்டுக்கு உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்? யார் வேண்டுமானாலும் வந்து போகும் சத்திரம் இதுவல்ல? " என கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார் வழுக்கைத் தலை மனிதர்!


       "நீங்கள் நினைப்பது போல் நாங்கள் ஒன்றும் யாரோ ஒருத்தர் அல்ல! எதையும் தெரிந்து கொள்ளாமல் உங்கள் பாட்டுக்கு ஏதாவது பேசி வைக்க வேண்டாம்!"என பதிலுக்கு கோபமாக பேசினார் சாத்தப்பன்! 


      "இது என்ன அநியாயமாய் இருக்கிறது! எங்கள் குடியிருப்புக்குள் நீங்கள் இருவரும் உள்ளே நுழைந்து விட்டு, உங்களுக்கு என்ன வேலை எனக் கேட்டால், நீங்கள் என் மீதே எரிந்து விளுகிறீர்கள்! உங்களை முதலில் போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும்! இத்தனை நேரம் உங்களிடம் நாகரிகமாக பேசிக்கொண்டு இருந்ததே மிகுந்த தவறாய் போய்விட்டது! "என சாத்தப்பனையும் அய்யனாரையும் பார்த்து கூறியவர் திடீரென பின்னால் திரும்பி "யாரங்கே! ...." என்றதும் மருதம் எழிலகத்தின் காவலாளி ஓடிவந்து அவர் முன்பாக பணிவாக நின்று கொண்டார். அவரைப் பார்த்த வழுக்கை மனிதர் "உடனடியாக போலீசை கூப்பிடு!" என்றார்! காவலாளியும் தனது காவல் கூண்டை நோக்கி ஓடிச் சென்று தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள சென்று கொண்டிருந்தார்! 


       "உங்களுக்கு அத்தனை அவசரம் தேவையில்லை!" என்றார் சாத்தப்பன்! 


      "ஏன்? அதற்குள் உங்களுக்கு பயம் வந்து விட்டதா? அப்படி வாருங்கள் வழிக்கு! போலீசைக் கூப்பிடு என்று சொன்னதும் தானாக வழிக்கு வந்து விட்டார்கள்!"என தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்ட நினைப்பில் விழுந்து சிரித்துக் கொண்டே அங்கிருந்த கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார் வழுக்கைத்தலை மனிதர்! 


     "தாங்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு இங்கு ஏதும் நடந்துவிடவில்லை! உண்மை தெரிந்தால் உங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்களோ தெரியவில்லை!" என்றார் சாத்தப்பன்! 


     "அப்படி என்ன அரும்பெரும் உண்மையை வைத்திருக்கிறீர்கள்! உங்கள் சௌரியத்திற்கு உள்ளே நுழைந்தது பெரும் தவறு! அதை துணிச்சலாக செய்ததோடு இப்போது என்னிடம் தேவையில்லாமல் வம்பளந்து கொண்டு வாய்சாவடல் வேறு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! இதற்கெல்லாம் சேர்த்து நீங்கள் மிகுந்த வருத்தப்பட போகிறீர்கள்! அது மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது!" என்றார் வழுக்கைத் தலை மனிதர்! 


     "அடடே! உங்களுக்குத்தான் சிறிதும் பொறுமை என்பதே கிடையாதா? மீண்டும் மீண்டும் பெருமிதம் கொள்வதிலேயே காலத்தை கடத்துகிறீர்களே தவிர உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் பக்குவம் உங்களுக்கு சிறிதும் கிடையாது!"என்றார் சாத்தப்பன்! 


     "சரி! நீரே அனைத்தையும் கூறிவிடு! மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என வேண்டா வெறுப்பாக அவர்களைப் பார்த்து கூறினார் வழுக்கைத் தலை மனிதர்! 


      "ஒரு வழியாக இப்போதாவது ஒத்துக் கொண்டீர்களே! நீங்கள் நினைப்பது போல் நாங்கள் ஒன்றும் தவறான நபர் அல்ல! இதோ என்னுடன் இருக்கும் இவர் சென்னையின் குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரி அய்யனார்!" எனக் கூறிவிட்டு அங்கிருந்தவர்களை பார்த்தார்! 


     கூட்டத்தில் அதுவரை நிலவி வந்த சலசலப்பு குறைந்து அனைவரும் அய்யனாரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்!


     அய்யனார் எதுவும் கூறாமல் மாடிக்கு செல்லும் லிப்ட் நோக்கி நகர்ந்து விட்டிருந்தான்! சாத்தப்பன் கூட்டத்தை ஒரு முறை பார்த்துவிட்டு அய்யனாரை பின்தொடர்ந்து இருந்தார்! உறைந்த நிலையில் லிப்ட் இருந்தது! அப்போது மருதம் எழிலகத்தைச் சார்ந்த காவலாளி தடதடவென்று ஓடி வந்தான்! திடீரென்று அவனது வரவால் அவனை நோக்கி இருவரும் திரும்பி இருந்தார்கள்! 


     ஓடி வந்ததால் மூச்சு வாங்கிக் கொண்டே"மழை  பேஞ்சதால் கரண்ட் கட் ஆகி விட்டது!  அதனால லிப்ட் வேலை செய்யாம அப்படியே நின்னு போய்விட்டது! இப்பதான் கரண்ட் வந்திருக்கு! திரும்பவும் வேலை செய்ய எப்படியும் இருபது நிமிஷம் ஆகும்! "எனக் கூறிக் கொண்டே தன் தலையை சொரிந்து கொண்டிருந்தான் காவலாளி! 


      காவலாளிடம் எதுவும் கூறாமல் மாடிக்கு செல்லும் படிக்கட்டை நோக்கி அய்யனார் சென்றதும் அவனைத் தொடர்ந்து சாத்தப்பனும் மருதம் எழிலகத்தின் காவலாளியும் பின் தொடர்ந்தார்கள்! ஏற்கனவே கூட்டத்தில் இருந்தவர்கள் கூறியபடி ஐந்தாவது மாடியை நோக்கி அய்யனார் விறுவிறுவென ஓட்டம் நடையுமாக படிகளில் ஏறிக் கொண்டிருந்தான்! அவனைத் தொடர்ந்து கொண்டிருந்த சாத்தப்பனும் காவலாளியும் எத்தனை முயன்றும் அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கி தவித்துக் கொண்டிருந்தார்கள்! 


      நனைந்த சூ  கால்களில் பரபரப்பை பற்ற வைத்துக்கொண்டு ஐந்தாவது மாடியில் அடைந்திருந்த அய்யனார் வெகு நிதானமாக அங்குள்ள ஒவ்வொரு அறைகளையும் நோட்டமிட்டுக்கொண்டு சென்று கொண்டிருந்தான்! அங்கு உள்ள பத்து  அறைகளில் குடியிருக்கும் நபர்கள் ஏற்கனவே வெளியேறி கீழே சென்று விட்டதால் ஒரு சில வயதான நபர்கள் மட்டும் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும் எலிகள் போல் தங்களது வாசலில் இருந்து வெளியே தலையை மட்டும் காட்டிக் கொண்டு இருந்தார்கள்! அய்யனார் ஆறாவது அறையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது நான்காவது அறையில் இருந்த முதியவர் வெளியே வந்து ஆறாவது அறையைப் பார்த்து வலது கையின் ஆட்காட்டி விரலால் ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார்! முதியவரின் சைகையை தொடர்ந்து ஆறாவது அறையை நோக்கி சென்றவன் வாசலில் நுழைய முற்பட்டவன் ஒரு கணம் தயங்கி நின்று விட்டான்! அதுவரையில் தங்களது அறைகளிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர்கள் அய்யனாரின் செயலால் ஈர்க்கப்பட்டு விழிகளில் என்ன என்ற கேள்விக்கணைகளை ஏந்திக்கொண்டு அங்கேயே நின்று விட்டார்கள்! 

(தொடரும்....03)





      


கனவுகளை நனவாக்கி உன்னைச் செதுக்கு யாழிசை செல்வா

கனவுகளை நனவாக்கி உன்னைச் செதுக்கு 

============================================

தூரிகையின் தூண்டிலை 

துடைத்து சுத்தமாக்கு//01

விழிகளின் தீபத்தை 

பற்றவைக்கும் நெருப்பு//02

மிச்சம் இருக்கும் 

வேடிக்கை பந்தயத்தை//03

எரித்துச் சிதைக்கும் 

எரிமலை சுடர்//04

காலம் கையளிக்கிறது 

ககனத்தில் உன்னிடம்//05

கனவை நனவாக்கு

உன்னைச் செதுக்கு//06

கவிஞர் யாழிசைசெல்வா 

23/03/2025


தென்குமரி கவிதைக் களம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை


உழைக்கும் கரங்கள் யாழிசை செல்வா

உழைக்கும் கரங்கள் 

===================

வியர்வையின் குருதியை 

குடித்துச் சிரிக்கிறது //

குத்திட்டிக் கோபுரங்களாய்

மாடமாளிகையின் எழுச்சி //

இருப்பின் தவிப்பில் 

இருளைக் கிழித்துக்கொண்டு //

விடியலைத் தேடும் 

உழைக்கும் கரங்கள்!//


கவிஞர் யாழிசைசெல்வா 

23/03/2025

Saturday, 22 March 2025

அய்யனார் - யாழிசை செல்வா அத்தியாயம் 01

🚔01. அய்யனார் 🚔

       துளித் துளியாய் தொடங்கிய தூறல் விரைவில் வெளுக்கத் தொடங்கிவிட்டது!  விட்டும் தொட்டுமாக ஆரம்பித்து திடீரென பெருத்து வளர்ந்து வானத்தை கீழே சாய்த்தது போல் கொட்டத் தொடங்கி விட்டது! ஆட்டம் அரங்கேறிய பின் முறுக்கிக் கொண்டு நிற்க மனம் இல்லாமல் தூரத்தில் தெரிந்த நிழற்குடை நோக்கி தப தபவென்று ஓடிக்கொண்டிருந்தான்! 


      அப்படி ஒன்றும் பெரிய நிழற்குடை ஒன்றும் இல்லை ஆயினும் நான்கைந்து பேர் ஒரே நேரத்தில் ஒண்டிக்கொண்டு நிற்கும் அளவிற்கு ஏற்றதாகத்தான் இருந்தது! அடித்துப் பிடித்து சேர்ந்து நின்றால் இன்னும் மூன்று பேர் பாதி நனைந்தும் மீதி குளிர்ந்தும் நின்று கொள்ளலாம் என்னும் அளவிற்கு தான் அந்த இடம் இருந்தது! 


      "இன்னைக்குன்னு பார்த்து தானா எல்லாம் நடக்கனும்? வழக்கம்போல வந்திருந்தால் இதெல்லாம் தேவையா? கிளம்பும்போதே தோன்றியது.... இருந்தாலும் உள்ளூர தோன்றிய நப்பாசையின் காரணமாக பைக்கை எடுத்துக் கொண்டு வந்தது, எத்தனை பெரிய தவறு! இனிமேல் இதுபோல் செய்யக்கூடாது என்பதற்கு எத்தனை பெரிய பாடத்தைக் கொடுத்து விட்டது! ஆனாலும் இவை கொஞ்சம் அதிகம்தான்! இத்தனை நாளும் வெறித்துக் கிடந்த வானம்.... மொத்தமாக இன்று ஒரே நாளில் வட்டியும் முதலுமாக சேர்த்து வைத்து கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது! பாழாய் போன பைக்கும் இன்று காலை வாரிவிட்டதே....!  நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் விட்டிருந்ததால் வந்த பிரச்சனை இது! தொடர்ந்து சரியாகப் பராமரித்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது! அடிக்கொருமுறை பயன்பாட்டில் கொண்டு வந்திருந்தால் நடந்திராதென இப்போது தோன்றி என்ன பயன்? "என எண்ணிக்கொண்டே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து ஏதோ ஒரு  எண்ணை அழுத்தி பேச முயற்சித்தான்! தொடர்பு கிடைக்காத வெறுப்பில் தரையை உதைத்துக் கொண்டான் அய்யனார்!


      சென்னையின் குற்றப்பிரிவின் சிறப்பு காவல் அதிகாரி பொறுப்பில் இருப்பவன்தான் அய்யனார்! அசத்தும் ஆணழகன் இல்லை என்றாலும் தவிர்க்க முடியாத மாநிறத்தைக் கொண்ட‌ துணிச்சல் மிக்க இளைஞன்! பணிக்கு வந்த நாட்களில் பார்த்தவரும் கேட்டவரும் பொறாமை கொள்ளும் அளவில் சட்டென பற்றி கொண்ட வளர்ச்சியின் சிகரத்தில் அமர்ந்து கொண்டவன்! துரு துரு கண்கள்! தேர்ந்த உடற்பயிற்சிகள் உரமேறிய தோள்கள்! பூரிப்பில் துளிர்த்த கால்கள்! பரபரப்பிற்கு பஞ்சம் வைக்காத செயல்களென எப்போதும் வலம் வரும் வேங்கையாக பணியில் இருந்ததால் எண்ணற்ற எதிரிகள்! இருந்தும் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளின் காலத்தை நீட்டிக்காத கண்ணியத்துடன் சேர்ந்தே வளர்ந்தவன்!

 

        வெளுக்கும் மழையில் ஆங்காங்கே குத்தீட்டிக் கோபுரங்களாய் செழித்திருந்த வீடுகளில் வழுக்கிக் கொண்டு சாக்கடையில் குதித்துக் கொண்டிருந்தது மழை நீர்!   வீடுகளுக்கு அருகாமையில் ஆங்காங்கே செழித்திருந்த மரங்கள் கொடி போல் கிளை பரப்பிக் கிடந்தன! மரங்களின் சருகுகளை சுமந்து கொண்டு சிறிய நீரோடையாய் சுழித்துக் கொண்டு தெருவெங்கும் மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இடமே பெரும் வெள்ளக்காடாய் மாறிவிட்டிருந்தது! இன்னும் சிறிது நேரம் போனால் அந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கு நீந்திச்செல்லும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! 


     நீரோடைகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து பூத்திருந்த கல் மரங்களின் சாபக் கேட்டின் சரித்திர பக்கங்களின் சாட்சிகளாய் மாறிவிட்ட சென்னைக்கு இது ஒன்றும் புதிதில்லை! நீண்ட வளர்ச்சியின் நீர் பூத்த நெருப்பு இது! 


      கொடி கொடியாய் வளர்ந்து கொட்டிக் கொண்டிருந்த மழையின் ஊடே  மின்னலும் சேர்ந்து சிரித்தது! 


     அப்போது பட்டென அருகில் இருந்த மின்சாரக் கம்பத்தில் வெடித்து பெரு நெருப்பு துளிர்த்தது தான் தாமதம்! சுற்றிலுமிருந்த மாளிகை வீடுகளின் வெளிச்சப் புள்ளிகள் சட்டென மௌனித்து மரணித்தன!


      "ஏற்கனவே வெளுத்து வாங்கும் மழை நின்ற பாடில்லை.... பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மழை வெள்ளத்தை எப்படி கடப்பது எனத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்னும் கூடுதலாய் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் கரண்ட் வேற நின்னு போச்சு.... செல்போனுலயேயும் சரியா சிக்னல் கிடைக்க மாட்டேங்குது! அது வேலை செய்தாலும் பரவாயில்லை! யாரையாவது வரவளைச்சு, இங்கிருந்து போகலானு நினைச்சா அதுவும் முடியல.... என்ன செய்யறதென ஒன்னும் புரியலையே....! ஒவ்வொரு வருஷமும் இதே பொழப்பா தான் இருக்கு! இதுக்கு ஒரு முடிவு எப்போ வருமோ? பலமுறை தொலைக்காட்சியில் மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவங்களின் சிரமங்களை பார்த்து பரிதாபப்பட்டு இருக்கிறேன்! இப்ப என்னோட நெலமையும் அதுபோல ஆயிருச்சே!" என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான் அய்யனார்! 


      மாலையில் வேலை விட்டு வந்து கொண்டிருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தொடர் அணி வகுப்பில் அந்தச் சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது! கூடவே மழை நீர் வெள்ளத்தில் அவை ஏரியில் மிதக்கும் படகுபோல் மிதந்து கொண்டிருந்தது! திடீரென மின்சாரம் போனதால் அந்தச் சாலை முழுவதும் இருளின் பெருத்த நெருக்கடியில் சிக்கித் தவித்தது! ஒருபுறம் விடாத மழையென்றால், மறுபுறம் அந்த மழையின் காரணமாக சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த மழை வெள்ளம் சாலையில் பயணித்தவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தியிருந்தது! இரண்டு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்த பல பேர் திடீரென தங்களது வாகனம் நின்றுவிட்டதால் அதனை தள்ளிக் கொண்டு செல்ல முயன்ற போது, மழை வெள்ளத்தின் காரணமாக பெறும் போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்! ஒரு சில வாகனங்களிலிருந்த சிறு குழந்தைகளும் மழை நீரைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்! இரு சக்கரத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஆண்களை முந்திக்கொண்ட இளம் குமரிகள் தங்களது இரு சக்கர வாகனத்தை சடுதியாய் விரட்டிக்கொண்டு சென்றபோது, பக்கத்தில் சென்றவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டபடி சென்று கொண்டிருந்தார்கள்! திடீரென தங்கள் மீது சேறு தெரித்ததும் கோபத்தின் உச்சியில் தங்களைக் கடந்து சென்றவர்களை வசை பாடிக் கொண்டிருந்தார்கள் சில வாகன ஓட்டிகள்! இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே நிழற்குடையில் நின்று கொண்டிருந்தான் அய்யனார்! 


     ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மழை சற்று தணிந்து தூறலாய் தூவிக்கொண்டிருந்தது! நிழற்குடையில் அமர்வதற்குகென அமைக்கப்பட்டிருந்த இருக்கையின் மேலேறி நின்றபடி இத்தனை நேரமாக பார்த்துக் கொண்டிருந்த அய்யனார் அருகே எங்கிருந்தோ அடித்துப் பிடித்து ஓடி வந்த முதியவர் அங்கிருந்த மற்றொரு இருக்கையின் மீதேறி நின்று கொண்டு தனது நனைந்த தலையை பேண்ட் பாக்கெட்டில் இருந்து நனைந்த கைக்குட்டையை எடுத்துப் பிழிந்து தலையை துவட்டிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்! 


     சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அய்யனாரைப் பார்த்து "என்ன தம்பி! ரொம்ப நேரமா இங்கேயே இருக்கியா? ரொம்ப சலிப்போட சாலையை பார்த்துகிட்டு நிக்கிறியே....!"என்றார் பெரியவர்! 


     ஐம்பது வயதினை கடந்து ஒடிசலான தேகத்திற்கு கட்டம் போட்ட சட்டை, கருப்பு பேண்டிற்குள் உடலை நுழைத்திருந்தார்! விரக்தியை ஏந்திக்கொண்ட கண்கள்! உழைத்து உரம் ஏறிய தோள்கள்! காய்த்து போன கைகள்! உழைப்பதற்கு பிறந்த உடல்! வாழ்க்கையின் பல துயரங்களை எதிர்கொண்ட வைராக்கியம் அத்தனையும் கொண்டவராய் முதியவர் சாத்தப்பன்!


      முதியவர் சாத்தப்பனை ஒரு கணம் மேலும் கீழும் வாகனத்தின் வெளிச்சத்தில் உற்றுப் பார்த்துவிட்டு "ஆமாம் ஐயா!" என்றான் அய்யனார்!


     "தம்பிக்கு இப்படி மாட்டிக்கிட்டது இதுதான் முதல் முறையோ....?'


    "எப்படி அய்யா? பக்கத்துல இருந்து பார்த்தது மாதிரி சரியா சொல்றீங்க?"


     "உன்னோட உடுப்புகளும் சாலையை பாக்குற விதமும் உனது செயல்பாடும் எல்லாம் சேர்ந்து சொல்லாமல் சொல்லுது தம்பி!"


     "பார்த்தவுடனேயே இவ்வளவு என்கிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்டிங்களா...? எனக்கு ஆச்சரியமா இருக்கு!"


     "இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு தம்பி! வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம் அத்தனையும்! அவ்வளவு சுளுவா எல்லாத்தையும் மறந்துட முடியுமா என்ன? இது ஒரு பெரிய விஷயமே இல்ல தம்பி!"


     "எப்பவுமே நாங்க தான் இது மாதிரி பேசுவோம்! இப்ப நீங்க பேசறத பார்த்து எனக்கு அப்படித் தோணுச்சு ஐயா!"


      "நீ சொல்றது எனக்கு புரியல தம்பி! நீங்க பேசுவீங்க அப்படின்னா என்ன?" குழப்பத்தில் கேட்டார் முதியவர்   சாத்தப்பன்!


     "அடடே! தவறு என்னோடது தான்! நான்தான் தெரியாமல் கூறிவிட்டேன்! என்னைப் பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரியாது அல்லவா? "


      அய்யனார் கூறுவதை கவனித்துக் கொண்டே தன் தலையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்த முதியவர் சாத்தப்பன் "உன்னைப் பற்றி கொஞ்சம் கூறேன் தெரிந்து கொள்கிறேன்! எப்படியும் சாலையில் ஓடும் நீர் குறையாமல் இங்கிருந்து போகப் போவது கிடையாது! அப்படி இருக்கும் இந்த நேரத்தை நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகிக்கொள்வது ஒரு வகையில் நல்லது தான்! நான் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சாதாரண ஊழியன்! அவ்வளவுதான் என்னைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படி வேறு ஒன்றும் இல்லை! நீ விரும்பினால் உன்னை பற்றிக் கூறு தம்பி!"என்றார்!


      "சென்னையின் குற்றப்பிரிவு காவல் அதிகாரி நான்!"


     "தம்பி! நீ யாரென்று தெரியாமல் பேசி விட்டேன்!" என்றார் முதியவர் சாத்தப்பன்! 


     "நீங்கள் தவறாக எதுவும் பேசவில்லை ஐயா!'


     "உன்னைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டேன்! கண்டிப்பாக ஏதோ ஒரு உயர்ந்த பணியில் இருப்பாய் என்று யோசித்தேன்! ஆனால் நிச்சயமாக காவல்துறை அதிகாரியாக நீ இருப்பாய் என நான் நினைக்கவில்லை!"


      முதியவர் சாத்தப்பனை ஒருமுறை பார்த்து விட்டு மீண்டும் மழை நீர் வழிந்து ஓடும் சாலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அய்யனார்!


        "இந்த பக்கம் ஏதாவது துப்புத் துலக்க வந்தியா தம்பி?"


       "இல்லைங்க ஐயா! எனது  பள்ளிக்கூட நண்பன் ஒருவனை பார்க்க வந்தேன்! அவன் வீட்டில் இல்லை! வேறு எங்கோ போய் விட்டான்! சரி மீண்டும் ஆபீஸ்க்கு போகலாம் நினைச்சு கிளம்பிக் கொஞ்ச தூரம் வந்த பிறகு என்னோட பைக் திடீர்னு நின்னு போச்சு! வேற வழியில்லாம அதைத் தள்ளிக் கொண்டு போய் பக்கத்துல இருக்குற மெக்கானிக் ஷாப்ல விட்டுட்டு, சரி பொடி நடையா கொஞ்சம் தூரம் நடக்கலாமென நினைச்சு நடந்துகிட்டு இருந்தேன்! அப்போதுதான் இந்த மழையில சிக்கிக்கிட்டேன்!" எனக் கூறிக் கொண்டே நிழற்குடையிலிருந்து வலிந்து கொண்டிருந்த மழை நீரினைக் கையில் பிடித்து விளையாடிக்கொண்டே கூறினான் அய்யனார்! 


      "உனக்கென தனி வாகனம் இருக்குமே தம்பி! எப்போதும் அதுல தானே வருவீங்க! அது என்ன ஆச்சு? உன் கூட யாரும் வரவில்லையா?" தனது தலையை கைக்குட்டையால் துடைத்தவர், கைக்குட்டையின் நீரினைப் பிழிந்துவிட்டு மீண்டும் தன் தலையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே கூறினார் சாத்தப்பன்! 


      "இருக்கிறது ஐயா! சொந்தப் பணிகளுக்கு அதனை நான் பயன்படுத்துவது இல்லை! " என அவன் கூறிய போது சாலையில் வழிந்தோடிக் கொண்டிருந்த நீரின் அளவு குறைந்து மட்டு பட்டிருந்தது! அதோடு தூறலும் ஒரு வழியாய் விடைபெற்றுச் சென்றிருந்தது! 


      அது வரையில் ஊர்ந்தும் மிதந்தும் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மழைநீரின் அளவு குறைந்ததும் வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டன! சுற்றிலும் பரவி கடந்த இருளை கிழித்துக்கொண்டு வாகனத்தின் ஒளிகளின் தீண்டலில் அந்தச் சாலை முழுவதும் திருவிழாத் தீபத்தின் வெளிச்சத்தை பற்றிக் கொண்டிருந்தது! 


      தனது பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுத்து உயரே தூக்கி முன்பு அழைக்க நினைத்த அதே எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது சிக்னல் சரியாக கிடைக்காததால் டொய்ங் என தொடர்பு துண்டித்துக் கொண்டது! கோபத்தின் நெருப்புகளை விழிகளில் ஏந்திக்கொண்டு வெறுப்போடு சாலையை பார்த்தவன் பொறுத்தது போதுமென இறங்கி நடக்க முற்பட்டான் அய்யனார் !


        "தம்பி நானும் வருகிறேன்! நீ போகும் வழியில் தான் என் வீடும் உள்ளது!"என கூறிக்கொண்டே முதியவர் சாத்தப்பன் அய்யனாரைப் பின் தொடர்ந்தார்! 


       சாலையில் விரைவிக்  கிடந்த மொத்த குப்பைகளையும் அள்ளி அணைத்தபடி அந்த தெருவோரத்தின் சாக்கடையில் குதித்துக் கொண்டிருந்தது மழை நீர்! 


       சாலையின் இருமருங்கிலும்  பாதசாரிகள் நடப்பதற்காக பதித்து விரைவிக் கிடந்த சிமெண்ட் சாலையில் இருவரும்  நான்கைந்து தெருவினை கடந்து இருபது நிமிடம் நடந்திருந்தபோது மழையினால் போயிருந்த மின்சாரம் உயிர் பெற்று அங்கிருந்த வீடுகளின் விளக்குகள் பூக்கத் தொடங்கியருந்தது! இருவரும்  பேசிக் கொள்ளாமல் வெகு நேரமாய் நடந்து கொண்டிருந்தார்கள்!  அப்போது தெருவின் இடது புறத்தில் குத்தீட்டிக் கோபுரமாய் நீண்டு உயர்ந்திருந்த பத்து மாடிக் குடியிருப்பின் உள்ளேயிருந்து "வீல்" லென்ற பெருத்த அலறல் அந்தத் தெருவை கிழித்துக்கொண்டிருந்தது! 

(தொடரும்.....02)


       



     


Friday, 21 March 2025

 காற்றைப் போலே நீ வந்து போனாயே..!

===================================

கவிஞர் யாழிசை செல்வா 

==========================

இருளின்

கரை தெரியாத நீண்ட வானம்!

கடலின் அலைகளை - காதலோடு

தாக்கிக் கொண்டிருக்கும் வெண்ணிலா!

பொங்கிப் புனல் ஆடும் 

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளில் 

செங்கரும்பின் சுவை மேவிய 

அதரந்தனில் 

கோல முத்தம் தந்தேனே -

மறந்து போனதா மாயவா...? //01


சங்கத்தமிழ் பேசும்

சந்தனச் சிலை!

அசைந்தாடும் காற்று 

ஆர்ப்பரிக்கும் கடல் 

இசை போல் என் மனம் 

எங்கே போனாய் கண்ணாளா....?!//02


வானில் வட்டமிடும் நிலா 

நெஞ்சக் கனலில் சுட்டு எரிக்கிறதே!

செங்கரும்பின் சுவை மேவிய 

தித்திப்பு அதரங்கள் தீப்பற்றி எரியாதோ? 

இதோ வருகிறேன் 

இன்னுயிரும் உனக்காக தருகிறேன் 

சொன்னதெல்லாம் பொய்யா நாயகனே... //03


வில்லில் அம்பெய்து

வீரம் பேசும் மன்னவர்கள் முன்னால் 

விழிதனில் காதல் எழுதிய காதலனே -

காற்றைப் போலே 

நீ 

வந்து போனாயே...! //04


வேல்விழிக் கண்கள் 

விரகத்தில் உதிரும் கை வளையல்கள் 

தாகத்தில் தவித்திருக்கும் அதிரங்கள் 

மோகத் தீ மூட்ட 

மறந்து போனதேன் மன்னவா...! //05


நீ 

நான் 

நிலா 

காற்று 

வானம் 

சேர்ந்தெழுதிய பூக்கோலம் புதுக் கோலமாய் 

இன்னும்

என் இதயத்தில்....//06


நீண்ட வானம் 

தவழும் வெண்மதி 

சுழன்றடிக்கும் காற்று 

அலர் தூற்றும் ஊர் 

ஆசையாய் நான் 

கரம் பற்றிக் காப்பாற்றுவேன் என்ற நீ 

எங்கு போனாய் - என் 

ஆசைக் காதலா!//07


வழமையாகக் காத்திருக்கும் படகுத்துறை 

இடைதனில் கரம் கோர்த்து 

ஏந்திழை என்னைச்

சுரம் சேர்க்கத்தான் மறந்து போனாயே!//08


அலைந்தாடும் காற்றும் 

சுழித்தோடும் நீரும் 

மோகத்தை தூண்டும் நிலவும் 

எனது 

பாரத்தைப் பற்றுகின்றன-

காதலோடு கொஞ்சத்தான் நீ இல்லை!//09


அன்று -

ஊரில் நடந்த 

சடுகுடுப் போட்டியில் 

தோற்றுப் போனதாய் - 

உன்னை

அனைவரும் பலித்துப் பேசிய போது 

நீ 

என் இதயத்தை கைப்பற்றியது 

அவர்களுக்கு தெரியாமல் போனது!//10


அங்குமிங்குமாய்

காவிரிக் கரையோரம் 

ஒரு நாள் மாலை வேலை 

தெருக்கோடியிலுள்ள அங்காடிதனில் 

மதுரமான மாம்பழமொன்றைக்

கையில் எடுத்துச் சுவைத்தவன் 

யாரும் அறியாதபோது 

என்னருகில் வந்த நீ 

உனது குழி விழுந்த கன்னத்தின்

சுவையை ஒப்பிடும்போது - இதன் 

தித்திப்பு குறைவு தான் என்றாய்!//12


ஊர்த் தெரு முனையில் தோழிகளோடு 

நான் 

பாண்டி விளையாடிக் கொண்டிருக்கும்போது 

உன்னையும் 

சேர்க்கச் சொல்லி 

என்னிடம் வம்பிழுத்தாயே..!//13


இத்தனையும் மறந்து 

எத்தனை தூரம் சென்றாய் 

என் காதலா....!

காற்றும் கூட 

என்னைக் கைது செய்து விடத் துடிக்கிறது -

என் கரம் பற்றி 

இதழ் கொய்யத்தான் 

இங்கு நீயில்லை -

காற்றைப் போலே 

நீ 

வந்து போனாயே....!//15


கவிஞர் யாழிசை செல்வா

Thursday, 13 March 2025

தேரைப் பூச்சி போல மனசுல ஒட்டி நிக்கிறியே யாழிசை செல்வா

தேரைப் பூச்சி போல மனசுல ஒட்டி நிக்கிறியே...

=============================================

சுங்குடி சேலை கட்டி 

மின்னலா சிரிச்சு

ஆத்து மேட்டோரம்

அத்தி பூத்தாப்புல

பிஞ்சு முத்தம் கொடுத்தவளே!

சோளக்காட்டுல சொக்கி நீ நடந்தப்ப

மேலக் காத்தடிச்சு 

என் நெஞ்ச பரிச்சவளே 

மேகம் கருக்குது மேனி குளிருது 

தாகம் இல்லாம தவிச்சு நிக்கிறேன் 

விடியல் கருக்கலிலே

மாலை மாத்திக்க மறக்காம 

அய்யனார் கோயில் பக்கம்

காத்து நிப்பதாக  காத்துல கடுதாசி போட்டவளே! 

இன்னுமா விடியலைன்னு என் மனசு துடிக்குது 

ஏன் சோட்டுக் கிளியே  எங்கே போன? 

தேரை பூச்சி போல மனசுல ஒட்டி நிக்கிறியே...! 

கவிஞர் யாழிசைசெல்வா 

11/03/2025





Monday, 10 March 2025

இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 94

 🌾94. கோடியக்கரை யுத்தம்🌾

     ஆழம் குறைவான கோடியக்கரை கடல் பகுதி அலைகளை சுமந்துகொண்டு கரை மீது தழுவிக் கொண்டிருந்தது! கரை முழுவதும் பரவிக்கிடக்கும் குறுமணல்கள் மீது கடல் நண்டுகள் ஏறிச் சென்றுகொண்டிருந்தன! 


      கரையிலிருந்து தொலைவில் உள்ள கடலின் அலைகளுக்கு மேல் கடற்கெண்டைகள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன! அவற்றின் ஒவ்வொரு அசைவும் அத்தனை லாவகமாக இருந்தது! அதனை வேறு வழியின்றி காலை முதல் கரையிலிருந்து பெரும் மரத்தின் மேல் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்!


      கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ஐநூறு பேர் கொண்ட சிறு படையுடன் வந்திருந்த இளம்வழுதி சாளுக்கிய சதிகாரர்களின் சதித்திட்டங்களை எவ்வாறெல்லாம் எதிர்கொள்ள வேண்டுமெனக் கூறியிருந்ததால் அதற்கு ஏற்பத் திட்டமிட்டு செயலாற்றிக் கொண்டிருந்தார்கள்! கோடியக்கரை கடலின் ஒவ்வொரு அசைவையும் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து கொண்டிருந்தார்கள்! 


      அழகன் இருந்த மரத்திற்கு அருகாமையிலிருந்த மற்றொரு மரத்தில் அமர்ந்து கொண்டு இளம்வழுதியும் காத்துக் கிடந்தான்! இரவின் முதல் சாமம் முற்றிலும் ஏறிவிட்டிருந்தது! சித்திரை முழுநிலவு கடந்து விட்டிருந்ததால் நிலவின் ஒளியின் ஆதிக்கம் கடற்கரைப்பகுதியில்  ஓரளவு பரவிக்கிடந்தது!


      ஆழ்ந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு நடுக்கடலில் ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது! கப்பலில் இருந்தவர்கள் விளக்கினை அணைத்துவிட்டு நிலவின் ஒளியைத் துணையாகக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்! மெல்ல அசைந்தாடி கப்பல் கரையை நெருங்கிக் கொண்டிருந்தது! கரைமேல் அவர்களின் வரவிற்க்காக கரைகளில் செழித்து வளர்ந்து கிடந்த மரங்களின் மேலும் அடர்ந்த புதருக்குள்ளும் விழிப்போடு பதுங்கி காத்துக்கிடந்த சோழ வீரர்கள் கப்பலின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்! ஒருவரும் துளி அசைவின்றி அவர்களிருந்த இடத்திலேயே காத்துக் கிடந்தார்கள்! 


     சதிகாரர்கள் அடிக்கடி வந்துபோனதாலோ என்னவோ கரைக்கு வெகு தொலைவு முன்பே கப்பலை நிறுத்திவிட்டிருந்தார்கள்! சில கணங்களுக்கு பின்பு கப்பலின் கயிற்றேணியைக்கொண்டு சத்தமில்லாமல் கடலில் இறங்கி கரையை நோக்கி நீந்திக் கொண்டிருந்தார்கள்! ஒருவழியாக இருநூறு பேர் கொண்ட படையாக கரை மீது எழுந்து நின்றவர்கள், ஏற்கனவே கலங்கரை விளக்கம் தாண்டி நிறுத்தி வைத்திருந்த படகு இருக்கும் இடம் வழியாக காட்டிள்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்! ஏறக்குறைய அனைவரும் காட்டிற்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்! சதிகாரர்கள் முழுவதுமாக உள்ளே வரும்வரை சோழ வீரர்கள் எந்தவிதமான இடையூறும் அவர்களுக்கு கொடுக்கவில்லை! இளம்வழுதியின் திட்டமான உத்தரவு அப்படி இருந்துது! சதிகாரர்கள் அனைவரும் கோடியக்கரை மூர்க்கனின் இருப்பிடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்! இன்னும் நன்றாக உள்ளே நுழைந்த பிறகு சதிகாரர்கள் அனைவரையும் ஒரேயடியாக தீர்த்துக் கட்டும் திட்டம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது அது தெரியாமல் சதிகாரர்கள் காட்டுக்குள்ளே சென்று கொண்டிருந்தார்கள்!


    கடற்கரையைத் தாண்டி காட்டிற்குள் சதிகாரர்களை நன்கு நுழைய விட்டிருந்த இளம்வழுதி அதுவரை காத்து வந்த பொறுமையை கைவிட்டு இருந்தான்! குயில் போல் இன்னிசை அவன் எழுப்பியதும் மரங்களில் மறைந்திருந்த சோழ வில்லிகள் தங்கள் அம்பராத் துணியிலிருந்து கணைகளை கொடுத்து விட்டிருந்தார்கள்! எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது என்று சதிகாரர்கள் அறிவதற்குள்ளாக ஏறக்குறைய இருபது பேர் அம்புகளால் துளைக்கப்பட்டு கீழே சரிந்து விழுந்து கொண்டிருந்தார்கள்! திடீரென நடந்துவிட்ட இந்த பெரும் விபரீதம் கண்டு அவர்களின் தலைவன் சாளுக்கியவர்மன் தனது கரத்தை உயர்த்தியதும் சாளுக்கியத்தின் சதிகாரர்கள் அப்படியே நின்று விட்டார்கள்! 


      சாளுக்கியவர்மன் சுற்றிலும் தனது விழிகளைச் சுழல விட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான்! அதற்கிடையில் மீண்டும் ஒருமுறை குயிலின் ஓசை எழுந்ததும் சோழ வில்லிகள் தங்களது அம்பராத் துணிகளிலிருந்து அம்பு மழை பொழிந்ததில், மேலும் இருபது பேர் மண்ணில் சாய்ந்து விட்டிருந்தார்கள்! கண் இமைக்கும் நேரத்திற்குள் ஏறக்குறைய நாற்பது பேர் உயிரை இழந்துவிட்டது கண்டு சாளுக்கியவர்மனின் விழிகள் கோபத்தில் நெருப்புத் துண்டு போல் அந்த இரவிலும் ஒளிரத் தொடங்கின! தனது பல்லை நர நரவெனக் கடித்துக் கொண்டு தனது இடையிலிருந்த பெரும் வாளை உருவிக்கொண்டு அடுத்து நடக்கவிருக்கும் யுத்தத்திற்கு தயாரானான்! அவனைத் தொடர்ந்து அவனது விழி அசைவுகளுக்கு ஏற்ப சாளுக்கியத்தின் சதிகாரர்கள் ஆங்காங்கே மறைவிடங்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள்! திடீரென ஓடிக்கொண்டிருந்த சதிகாரர்கள் அப்படியே மிரண்டு போய் நின்று விட்டார்கள்! அவர்களுக்கு எதிரில் ஐம்பது பேர் கொண்ட சோழ வீரர்கள் யுத்ததிற்காண கவச உடை தறித்து  தயாராக நின்று கொண்டிருந்தார்கள்! 


       அங்குமிங்கும் விழிகளை சுலட்டிக் கொண்டிருந்த சாளுக்கியவர்மன் தனது விழி அசைவுகளால் சதிகாரர்களை முன்னோக்கி பாயச் சொல்லி உத்தரவிட்டிருந்தான்! சோழ வீரர்கள் சதிகாரர்களை எதிர்கொண்டு தாக்கத் தொடங்கி விட்டார்கள்! ஆங்காங்கு நடந்து கொண்டிருந்த தாக்குதலால் சதிகாரர்கள் சிதறிப் போய் கிடந்தார்களேயன்றி அவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை!எத்தனைதான் முயற்சி செய்தபோதும் அவர்களால் சோழ வீரர்களைக் தாண்டிச் செல்ல முடியாது தவித்துப் போனார்கள்!  தொடர்ந்து நடந்து கொண்டிருந்த தாக்குதலால் எண்ணற்ற சதிகாரர்கள் இறந்து விட்டிருந்தார்கள்! அதனை கண்ட சாளுக்கிய வர்மன் மேலும் கோபத்தோடு சோழ வீரர்களை வெட்டி சரித்துக் கொண்டிருந்தான்! 


      ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று அறியாமல் தனது வீரர்களோடு மீண்டும் கடலுக்குள் பின்வாங்கி சென்று விடலாம் என்று எண்ணினானோ என்னவோ கரையை நோக்கி இரண்டொரு அடிகள் தான் எடுத்து வைத்திருப்பார்கள் அதற்குள் அவர்களை எதிர்கொண்டு தாக்குவதற்காக இளம்வழுதி தனது வீரர்களோடு சுற்றி வளைத்து விட்டிருந்தான்! இதன் காரணமாக அங்கு சண்டை தொடர வேண்டிய நிலைக்கு சாளுக்கியர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்! மிகுந்த ஆவேசத்தோடு இரு பகுதிகளிலும் சண்டை நடந்து கொண்டிருந்தது! தொடர்ந்து யுத்தத்தின் காரணமாக அந்த இரவு நேரத்தில் காட்டில் உள்ள செடி கொடிகள் மீது வீணாக மனிதர்களின் குருதி குளித்து கொண்டிருந்தது! கிளாங் கிளாங்கென வாள்கள் உரசும் ஒளி அந்தக் காட்டினை அதிரச் செய்து கொண்டிருந்தது! சோழ வீரர்களின் வீர அவேசமான தாக்குதலும் இளம்வழுதியின் துணிகரமான செயல் திட்டமும் சேர்ந்து சாளுக்கியரின் திட்டத்தை தவிடு பொடியாக்கி கொண்டிருந்தது! நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளால் தோல்வி என்பது நிச்சயமாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட சாளுக்கியவர்மன் அதன் போக்கை திசை மாற்ற விரும்பினான் போலும்! அதற்காக திடீரென இளம்வழுதியை பார்த்து "நீதான் புதிதாக நாகைக்கு வந்திருக்கும் பாடிகாவல் அதிகாரியா? உனது திட்டம் அத்தனையும் தோற்றுப் போய் விட்டதை எண்ணி வெக்கப்பட வேண்டும்! ஏற்கனவே உனது தாய் தந்தையர் மற்றும் உனது சகோதரன் அனைவரையும் மரணத்தின் பிடிக்கு இழுத்துச் சென்றது யாம் கொடுத்த பரிசு தான்! இப்போது உனக்கும் அதை பரிசை வழங்குவதற்காக தான் இங்கு வந்துள்ளோம்!" எனக்கூறி கொக்கரித்துக் கொண்டு பேசினான் சாளுக்கியவர்மன்!


     "தோல்வியின் கலை உன் முகத்திலேயே முழுவதுமாக அப்பிக் கொண்டு உள்ளது! அதன் காரணமாக என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாய்! உனது முடிவு உனக்கே நன்கு தெரியும்! பின் ஏன் வேண்டாத இந்த வீராப்பு!"என்றான் இளம்வழுதி! 


      "உண்மையில் உனக்கு தைரியம் அதிகம் தான்! இத்தனை நடந்த பின்பும் துணிச்சலாக என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கிறாய்! உனக்குத் தெரியாது என்னுடைய வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் அவற்றின் முன்னால் நீங்கள் அனைவரும் வெகு சாதாரணம்!"எனக்கூறி சிரித்தான் சாளுக்கியவர்மன்!


     "இத்தனை காலமாக மறைந்திருந்து செயலாற்றிக் கொண்டிருந்த உங்கள் அனைவரையும் கூண்டோடு எமலோகத்திற்கு விரட்டியடிக்கும் நேரம் நெருங்கி விட்டதை பாவம் நீ மறந்து விட்டாய்! பல நாட்களாக நீங்கள் செய்து கொண்டிருந்த அத்தனை சதிச் செயலும் இன்றோடு முடிவுரை எழுதப்பட்டு விடும்! அதனால் வீணாக கொக்கரித்துக் கொண்டிருக்காதே!"என சாளுக்கிவர்மனை எச்சரித்தான் இளம்வழுதி! 


     "நான் தெரியாமல் வந்து உன்னிடம் மாட்டிக் கொள்ள, என்னை முட்டாள் என நினைத்து விட்டாயா? அப்படி நீ நினைத்திருந்தால் உனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விடு! உங்களுக்கு தக்க பதிலடி கொடுக்காமல் நான் இங்கிருந்து போக மாட்டேன்!"என்றான் சாளுக்கியவர்மன்!


      "நீ உனது வீரர்களை கப்பலில் மறைத்து வைத்து விட்டு வந்ததை கூறுகிறாயா? அவர்கள் அனைவரும் இன்னும் சிறிது நேரத்தில் எரிந்து சாம்பலாக போகிறார்கள்! அது தெரியாமல் நீ பேசிக் கொண்டிருக்கிறாய்! பாவம் உனது நிலை தான் மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது!"என்றான் இளம்வழுதி!


     "நீ என்ன கூறுகிறாய்? நீ கூறுவதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை! அப்படியெல்லாம் செய்துவிட உனக்கு ஏது தைரியம்?"என்றான் சாளுக்கியவர்மன்! 


     "அப்பாவி மக்களை கொன்றதோடு நாகையின் மணி கிராமத்தார் சூரிய வர்மரையும் கொடூரமாக கொலை செய்திருந்தீர்கள், மேலும் எனது குடும்பத்தை முழுவதுமாக நீர்மூழம் ஆக்கி இருந்தீர்கள், அவை மட்டுமின்றி நாகை சத்திரத்தில் தஞ்சைப் பெரும் வணிகர் செங்காணரையும் கொடூரமாக கொலை செய்திருந்தீர்கள்! இத்தகைய கொடிய செயல்களை எல்லாம் செய்ததோடு நிற்காமல் கங்கைகொண்ட சோழபுரத்தின் தலைநகரத்திலேயே மாதணட நாயகரின் தங்கை மீது தாக்குதலையும் நிகழ்த்தி இருந்தீர்கள்! அத்தோடு இல்லாமல் உங்கள் சாளுக்கிய நாட்டைச் சேர்ந்த சாளுக்கிய இளவரசி மதி மோகினி மீதம் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதலை தொடுத்து இருந்தீர்கள், இத்தனை செயல்களையும் கொஞ்சம் யோசிக்காமல் செய்துவிட்டு இப்போது எந்த நம்பிக்கையில் என்னிடத்தில் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு சிறிதேனும் அறிவு இருந்தால் இப்படி யோசித்து இருப்பாயா? எனது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! அவை எப்பொழுதோ கரையை கடந்து விட்டது! இங்கு இன்றே உனக்கான முடிவுரை எழுதப்பட்டு விடும்! அது மட்டும் சத்தியமான உண்மை!"என்றான் இளம்வழுதி! 


       இளம்வழுதி கூறி முடித்த சில கணங்களுக்குள் கடலில் நின்று கொண்டிருந்த சாளுக்கியர்களின் கப்பல் படீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது! அதன் உள்ளே அகப்பட்டுக் கொண்டிருந்த சாளுக்கிய சதிகாரர்கள் எழுப்பிய மரண ஓலம் கோடியக்கரை கடலைக் கிழித்துக் கொண்டிருந்தது! 


      தனது நண்பர்களின் கொடூரமான ஓலத்தை கேட்டதும் சாளுக்கியவர்மன் அதுவரை காத்து வந்த பொறுமையை அடியோடு இழந்து விட்டிருந்தான்! இளம்வழுதியும் தன்னைச் சுற்றி இருந்த சாளுக்கிய சதிகாரர்களை மல மல வென வெட்டி தள்ளிவிட்டு சாளுக்கியவர்மனை எதிர்கொண்டு தாக்கத் தொடங்கி விட்டான்! அவர்கள் இருவரது சண்டையும் வெகு நேரம் நீடிக்க வில்லை! அடுத்தடுத்த இளம்வழுதியின் தாக்குதலால் சாளுக்கியவர்மனின் வாள் காற்றில் பறந்திருந்தது! 


      ஓங்கிய தனது வாளை சாளுக்கியவர்மனின் வலது கையை நோக்கி வீசி இருந்தான் இளம்வழுதி! கரம் துண்டாகி தூரத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தது! "இது நாகையின் மணி கிராமத்தார் சூரிய வர்மரின் கொடூர கொலைக்காக கொடுக்கும் தண்டனை! "என்றான்! கரம் துண்டாகி கீழே விழுந்ததால் பெரும் அலறலை எழுப்பிக் கொண்டிருந்தான் சாளுக்கியவர்மன்! மீண்டும் தனது வாளை ஓங்கியவன் "இவை தஞ்சை பெரும் வணிகர் செங்காணரின் கொடூர கொலைக்கான தண்டனை!"எனக்கூறி அவனது இடது கையை துண்டாக்கி இருந்தான்! மேலும் அவனே தொடர்ந்து "இவை எனது தாய் தந்தை மற்றும் எனது சகோதரனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக"எனக்கூறி அவன் தலையை துண்டாக கொய்திருந்தான் ! சாளுக்கியவர்மனின் தலை தெறித்து போய் தூரத்தில் விழுந்தது! தங்களது தலைவனின் முடிவைக் கண்டதும் மற்ற சாளுக்கிய வீரர்கள் என்ன செய்வது என்று அறியாமல் மீதமிருந்த ஒரு சிலர் தங்களை தாங்களே மாய்த்துக்கொண்டு கீழே சரிந்து விழுந்தார்கள்! 


      அதற்குள் அழகன் தனது படைகளோடு அங்கு வந்து சேர்ந்திருந்தான்! சோழ வீரர்கள் தங்கள் கையில் கொண்டு வந்திருந்த தீப்பந்தத்தின் ஒளி நடந்து விட்டிருந்த யுத்தத்தில் மாய்ந்து போய் கடந்த சாளுக்கிய வீரர்கள் உடல் சிதறி கிடப்பதை தெளிவாக காட்டியது! அங்கு நடந்த அந்த யுத்தம் சோழ வீரர்கள் சிலரையும் காவு வாங்கி விட்டிருந்தது! அழகன் சோழ வீரர்களின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி கொண்டு போய் உரிய மரியாதையோடு அவர்களை எரியூட்டும் படி கூறியிருந்தான்! 


        இளம்வழுதி தனது மனதில் இருந்த அத்தனை துயரங்களையும் இறக்கி வைத்த நிம்மதியில் கோடியக்கரை கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்! அழகனும் அங்கு மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை அங்கு உள்ள சோழ வீரர்களுக்கு வேண்டிய உத்தரவுகளை பிறப்பித்து விட்டு இளம்வழுதியை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்! 


       கோடியக்கரை கடலில் மூழ்கி சிறிது நேரம் மனம் குளிர இளம்வழுதியும் அழகனும் குளித்துவிட்டு எழுந்தவர்கள் குழகர் கோயில் கோபுரத்தை நோக்கி நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கி நிமிர்ந்தார்கள்! 


               ***************************

        இரவின் இரண்டாம் சாமத்தில் பெரும் வேகத்தோடு நாகை கடலலை கடற்கரையை தாக்கிக் கொண்டிருந்தது!  அந்த இரவு நேரத்தில் சோழ காவல் வீரர்கள் தொலைவில் தங்கள் காவல் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்! 


        நாகை கடலின் அலைகள் இளம்வழுதி மற்றும் மதி மோகினியின் பாதங்களை முத்தமிட்டு கொண்டிருந்தது! 


       "நானும் வெகு நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்! கடலின் அந்த அலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் எதுவும் பேசாமல்? அப்படி எதனை நினைத்து மனதில் குழம்பிக் கொண்டு உள்ளீர்கள்? அதுதான் அத்தனை பிரச்சினைகளும் முடிந்து விட்டனவே? பிறகு என்ன கவலை உங்களுக்கு?"என்றாள் இராஜ மோகினி! 


      "நீ கூறுவது உண்மைதான்! சோழ தேசத்தை பிடித்திருநத சதிகாரர்கள் முழுவதுமாக வேரறுக்கப்பட்டு விட்டார்கள்! நான் அது குறித்து எல்லாம் நினைக்கவில்லை! இந்த சிறிது காலத்திற்குள் எத்தனை விபரீதங்கள் எல்லாம் நடந்தேறி வட்டது! அதனை எண்ணித்தான் வருத்தப்படுகிறேன்! மேலும் எனது சகோதரன் இன்னும் கண் விழித்த பாடு இல்லை! அவன் முழுவதுமாக தேறி எழுவானோ அல்லது அப்படியே இருந்து விடுவானோ என்ற கவலை மனதை அரித்துக் கொண்டிருக்கிறது! "என துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினான் இளம்வழுதி! 


     "கவலையை விடுங்கள்! எம்பெருமான் சிவனின் அருளால் உங்கள் சகோதரர் விரைவில் குணமாகி எழுந்து விடுவார்! " என இராஜ மோகினி கூறியதுதான் தாமதம்! தூரத்தில் எங்கோ ஒரு ஆலயத்தில் நள்ளிரவு வழிபாட்டிற்கான மணியோசை கடகடவென ஒலிக்கத் தொடங்கி விட்டது! ஒலிவந்த திசையனை நோக்கி இருவரும் வணங்கி நிமிர்ந்தார்கள்! 


      "ஆமாம் நான் கேட்க மறந்து விட்டேன்! சோழ மன்னர் உங்களுக்கு ஒரு பரிசு தருவதாக என்னிடம் கூறி இருந்தீர்கள்! அந்தப் பரிசு தங்களுக்கு கிடைத்து விட்டதா? நீங்கள் தான் அவரை போய் இன்னும் சந்திக்கவில்லையே!" என்றாள் இராஜ மோகினி! 


    இராஜ மோகினி சிற்றிடையில் தனது கரத்தை செலுத்தி இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளது இதழில் கவிதை எழுதத் தொடங்கி விட்டான் தனது முரட்டு ஆதாரங்களால்.....!


      சிறிது நேரத்துக்குப் பின்பு "நான் கேட்டதற்கு நீங்கள் பதில் ஏதும் கூறவில்லையே!" என்றாள் குறும்பாக இராஜ மோகினி! 


      "அதுதான் நான் பதிலை கூறி விட்டேனே!" என்றபடி அவளது இதழை நோக்கி தனது முரட்டு அதரங்களால் கவிதை எழுத முற்பட்டவனை பிடித்து தள்ளிவிட்டு கடற்கரையில் மானை தோற்கடிக்கும் துள்ளலில் ஓடிக்கொண்டிருந்தாள் சந்தனச் சிலை! 


(இத்துடன் இராஜமோகினி சரித்திரத் தொடர்கதை நிறைவு பெறுகிறது)

                *************************************



       



      







இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 93

  🌾93.சோமேசுவரரின் வருகையும் சோழ மன்னரின் முடிவும் 🌾


      சோழ வேந்தர் குலோதுங்கரைப் பார்த்து வணக்கத்தை கூறிக்கொண்டு நின்ற சாளுக்கிய மன்னர் சோமேசுவரனை புன்னகையோடு எழுந்து நின்று வரவேற்று அங்கிருந்து ஆசனத்தில் அமரும்படி சைகை காட்டினார் சோழ வேந்தர் குலோத்துங்கர். சாளுக்கிய மன்னரும் புன்முறுவலுடன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்!


     அங்கிருந்த அனைவரும் பெரும் அமைதியில் இருந்தபோது மாதண்ட நாயகர் " வரவேண்டும் சோமேசுவரரே, உங்களின் வருகை இங்குள்ள பலருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்குமென அறிவேன்! இன்றைய சூழலில் எத்தனை தேவை என்பதனை நானும் சோழ மன்னரும் நன்கு அறிவோம்! தங்கள் பயணம் நன்முறையில் அமைந்திருக்க வேண்டுமென நம்புகிறேன்! " என சாளுக்கிய மன்னர் சோமேசுவரரைப் பார்த்துக் கூறினார்!


     "எவ்விதமான இடையூறுமின்றி நன்முறையில் அமைந்தது! தங்களின் வீரர்கள் எல்லையிலிருந்து பூரண மரியாதையோடு என்னை அழைத்து வந்தார்கள்!" எனக் கூறிவிட்டு சோழ மன்னரைப் பார்த்து "நம்மிரு தேசங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த விரோதம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது! எனக்கு பெருமகிழ்வைத் தருகிறது!" என்றார் சாளுக்கிய மன்னர் சோமேசுவரர்!


     "அதற்கான முன் முயற்சியை தொடங்கி வைத்தது தாங்கள் தான்!" என்றார் மாதண்ட நாயகர்!


     "அப்படியா....! சாளுக்கிய வேந்தர் என்ன செய்தார் எனக் கூறினால் நாங்களும் தெரிந்து கொள்வோம்! நம்தேசத்தில் நடைபெற்றுக் கொண்டு இருப்பதை முழுவதும் அறிய முடியாமல் போய்விட்டது! "என்றார் கிளியூர் மலையமான்!


     "மலையமான் அவர்களே வருந்த வேண்டாம்! இனி நம் தேசம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் பூரண நம்பிக்கை வந்துவிட்டதிற்கு சாட்சியமாகவே சாளுக்கிய வேந்தர் சோமேசுவரரின் வருகை உள்ளது! இரு தேசங்களுக்கிடையிலான உறவை வளர்க்க எண்ணி யாரும் எதிர்பாராத செயலைத் துணிந்து செய்து காட்டிவிட்டார்! உண்மையில் நாம்தான் சோமேசுவரருக்கு மிகுந்த கடமைப்பட்டு உள்ளோம்! "எனக் கூறியதோடு அவருக்கு நன்றியையும் தெரிவித்தார் மாதண்ட நாயகர் !


      "மேலும் மேலும் எதிர்பார்ப்பினை அதிகரிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டுளீர்களேத் தவிர அவர் எண்ண செய்தார் எனக் கூறி வில்லையே....?" என்றார் மலையமான்!


     "சாளுக்கிய வேந்தர் தமது மகள் இளவரசி மதிமோகினி அவர்களை துணிச்சலோடு நாகைக்கு அனுப்பி வைத்துள்ளார்!"என்றார் மாதண்ட நாயகர்!


     " சாளுக்கிய இளவரசிக்கு நமது நாகையில் என்ன வேலை ? எதற்காக வரவேண்டும்?" என்றார் வீரகொட்டா சிற்றரசர்! தமக்கு தெரியாமல் இவை எப்படி நடந்தது! அனைத்தையும் இந்த மாண்ட நாயகன் மறைத்து வைத்து சதி செய்து விட்டானே என்ற கோபத்தில் கேட்டார்!


      "தாங்கள் பதறும் அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை! சாளுக்கிய இளவரசி மதிமோகினி அவர்களுக்கு தமிழ் இலக்கியங்கள் மீது அளப்பரிய காதல் அதனை நேரில் அறியவும், நம் தேசத்தில் உள்ளக சிவாலயங்களை தரிசிக்கவும் விரும்பியே இங்கு வந்தார்!" என்றார் மாதண்ட நாயகர்!


     "அவரது வருகை ஏன் முறைப்படி எங்களுக்கு தெரிவிக்கவில்லை!" என்றார் வீரகொட்டா சிற்றரசர்!


      "தங்களுக்கு தெரியாது ஒன்றுமில்லை! ஏற்கனவே நம் தேசத்தில் எண்ணற்ற சதிச்செயல்கள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன! இதற்கு இடையில் சாளுக்கிய தேசத்தின் இளவரசி வந்துள்ளார் எனத் தெரிந்தால் சொல்லவும் வேண்டுமா என்ன?" 


     " தாங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் அவருக்கு யார் இங்கு அடைக்கலம் கொடுத்தது?" என்றார் வீர கொட்டா சிற்றரசர் !


      "இரு தேசங்களுக்கு இடையிலான உறவை பேணுவதற்கு காரணமாக இருந்த மணி கிராமத்தார் சூரியவர்மர் இன்று நம்மிடமில்லை! அவர் இருக்கும் தைரியத்தில்தான் சாளுக்கிய மன்னர் சோமேசுவரர் தன் மகளை இங்கு அனுப்பி வைத்தார்! " என்றார் மாதண்ட நாயகர்!


      " ஆமாம்! நானும் கேள்விப்பட்டேன்! சூரிய வர்மர் சதிகாரர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதை அறிந்து மிகுந்த துயருற்றேன்" என்றார் மலையமான்!


     "அனைவரும் கணநேரம் எழுந்து நின்று மணிகிராமத்தார் சூரிய வர்மர் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவோம்" என சோழ மன்னர் கூறியதும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்திவிட்டு அமர்ந்தார்கள்!


      "சதிகாரர்கள் சூரியவர்மரை மட்டும் குறிவைக்கவில்லை சாளுக்கிய இளவரசி மதிமோகினி அவர்களையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தனர்! நல்லவேளையாக அப்போது எனது உபதளபதியை நாகைக்கு அனுப்பி வைதிதிருந்தது நல்லதாகப் போய்விட்டது! அதனால் சாளுக்கிய இளவரசி உயிர் காப்பாற்றப்பட்டு நாகை ஆதுரசாலையில் சேர்க்கப்பட்டு இன்று நலமோடு உள்ளார்!" என மாதண்ட நாயகர் கூறினார்!


      "இத்தனை ஆபத்து நிறைந்த பணிக்கு எதுவும் அறியாத சிறுபிள்ளை இவனை அனுப்பி வைக்க வேண்டிய அவசியமென்ன? நம்மிடம் கேட்டிருந்தால் சரியான நபரை கூறியிருப்போமே...!" என்றார் பொத்தப்பி சிற்றரசர்!


     "தங்கள் பணிவான ஆலோசனைக்கு மிக்க நன்றி! நீங்கள் நினைப்பது போல் இளம்வழுதி வேறு யாருமல்ல...! சோழ மாமன்னர் இராஜேந்திர சோழரின் திருக்கரத்தால் பிரும்மாராயன் விருது பெற்ற குமாரமள்ளரின் மைந்தன் ஆவார்! நம் தேசத்தின் மேன்மைக்காக உழைத்து பணி செய்த ஒரே காரணத்தால் பிரும்மாராயன் குமாரமள்ளர் அவர் மனைவி அன்னை வடிவு, இருவரும் சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டார்கள். மேலும் இளவழுதியின் சகோதரன் இளமாறன் நாகை பாடி காவல் அதிகாரியாக இருந்து பணிசெய்து காலத்தில் சதிகாரர்களுடன் இருட்டும் பள்ளத்தில் நடந்தமோதலில் அவரை குற்றுயிரும் குலை உயிருமாக கத்தியால் குத்திய தால் இன்றும் நாகை ஆதுரசாலையில் இருளப்பமள்ளரின் சிகிச்சையில் உள்ளார்! இப்பொழுது கூறுங்கள் இளவழுதியை விட யார் தகுதியென ?" என்றார் மாதண்ட நாயகர்!


       "இளம்வழுதி யின் குடும்பத்திற்கு இந்த தேசம் மிகுந்த கடமைப்பட்டுள்ளது! நடக்கும் பிரச்சினை ஓய்ந்ததும் இளவழுதிக்கு உரிய மரியாதை செய்யப்படும்! மேலும் அவருக்கு மிகவும் பிடித்த பரிசும் வழங்கப்படும்! இளவழுதியின் பெற்றோர் மறைவிற்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்துவோம்" என குலோத்துங்கச் சோழர் கூறியதும் அங்கிருந்த அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தார்கள்!


      இளம்வழுதி எழுந்து நின்று சோழ மன்னரைப் பார்த்து தலைவணங்கி விட்டு அமர்ந்தான்!


      மாதண்ட நாயகர் தனது கரத்தில் உள்ள ஓலையை எடுத்துக் காட்டியபடி "இப்பொழுது இந்த ஓலையில் உள்ள வாசகங்களை நம்புவீர்கள் என எண்ணுகிறேன்! இந்த ஓலையை கைப்பற்றி கொண்டு வந்ததோடு கோடியக்கரை பகுதியிலிருந்து கொண்டு தேசமுழுவதும் பெரும் சதிகளை அரங்கேற்றிய கோடியக்கரை மூர்க்கனையும் அவனது கூட்டத்தையும் அங்கேயே அழித்து அவர்களிடமிருந்து தான் இளம்வழுதியால் இந்த ஓலை கைப்பற்றப்பட்டது!" என்றார் மாதண்ட நாயகர்!


      "சதிகாரர்கள் நீண்டகாலமாக நாம் பயன்பாட்டில் இல்லாத கோடியக்கரை பகுதியை தேர்வு செய்துவிட்டதாலே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை " என்றார் மலையமான்!


      "மலையமான் அவர்களே அவர்கள் அங்கிருந்தது வேண்டுமானால் நமக்கு தெரியாமல் போயிருக்கலாம்! ஆனால் நமது தலைநகரத்தில் அதுவும் கங்கைகொண்ட சோழிசுவரர்ஆலயத்தில் வைத்து எனது தங்கை பொற்கொடியை கொலை செய்ய முயன்ற தோடு நேற்று நள்ளிரவில் அவளது மாளிகையிலேயே கொலை செய்ய முயன்றார்கள்! நல்லவேளையாக இவ்விரண்டு முயற்சியிலும் அவளது துணிச்சலான வாள் திறமையால் தப்பி விட்டாள்! " என்றார் மாதண்ட நாயகர்!


      "இத்தனை அநீதிக்கு பின்பும் எப்படி தங்களால் அமைதியாக இருக்க முடிகிறது! கேட்கும்போதே நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது! சதிகாரர்களுக்கு உரிய தண்டனை கொடுத்தே தீர வேண்டும்!" என்றார் மலையமான்!


      "இதுவரையில் போதிய ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை! இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரத்தைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்யவே இங்கு கூடியுள்ளோம்!" என்றார் மாதண்ட நாயகர்!


   "குறுக்கிடுவதற்கு  மன்னிக்கவும்!" என்ற படி சாளுக்கிய மன்னர் சோமேசுவரர் எழுந்தார்!அங்குள்ளவர்களைப் பார்த்து கூறினார்; "எனக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி நாகையை தாக்குவதற்கு சாளுக்கிய வர்மன் தலைமையில் பெரும்படை ஒன்று கப்பலில் கோடியக்கரை பகுதியில் வரப்போகிறது!" என்ற பெரும்வெடியை எடுத்துப் போட்டார்!


     அங்கிருந்த அனைவரும் ஒரு கணம் பேசும் சக்தியை இழந்து விட்டிருந்தார்கள்!


      "ஏற்கனவே நமது ஒற்றர்கள் தகவல் தந்து விட்டார்கள்! இது குறித்தும் நமது மன்னருக்கு தகவல் நேற்றிரவே தந்து விட்டேன்! இப்பொழுது தங்கள் கூறியது மூலம் கிடைத்த தகவல் உண்மையென்பதை நிறுபித்துவிட்டது!" என்றார் மாதண்ட நாயகர்!


     "நமது மாதண்ட நாயகர் கூறியபடி சாளுக்கியத்தின் சதிச்செயலை வேரோடும் வேரடி மன்னோடும் அழிக்கவேண்டும்!அதற்காக பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ள இன்றே தொடங்குங்கள்!"என்றார் குலோத்துங்கச் சோழ சக்கரவர்த்தி!


       "இந்த பிரச்சனையை ஆரம்பமுதலே தொடர்ந்து கண்காணித்து செயல்பட்டு வரும் இளம்வழுதியே இந்த யுத்ததிற்கு தலைமையேற்று நடத்தட்டும் என்பது எனது விருப்பம்! சோழ வேந்தர் முடிவு எதுவாயினும் கட்டுப்படுகிறேன்!" என்றார் மாதண்ட நாயகர்!


      "மாதண்ட நாயகரின் விருப்பம் பூர்த்தி செய்யப்படுகிறது! எனக்கும் இதுவே சரியாக இருக்குமெனத் தோன்றியது!" என சோழ வேந்தர் குலோத்துங்கர் கூறியதும் அவரது உத்தரவை திருமந்திர ஓலை சொல்ல திருமந்திர ஓலை நாயகம் ஓலையில் எழுதிக்கொண்டார்!


     அங்கிருந்த சிற்றரசர்களும் மற்ற அமைச்சர் பெருமக்களும் சோழ மன்னரின் உத்தரவை ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்கள்!


      "இனியும் நம் தேசத்தில் தேவையற்ற பிரச்சினை தலை தூக்குவதை சோழ மன்னர் விரும்பவில்லை! எனவே நமது நட்பு சக்திகளான சிற்றரசர்கள் இனியும் நம்மோடு கருத்துவேறுபாடு கொள்வதற்கு இனி எந்த முகாந்திரமும் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது!" என்றார் மாதண்ட நாயகர்!


     சிற்றரசர்கள் அனைவரும் வலிந்து தமது முகத்தில் புன்னகை வரவழைத்துக்கொண்டு  மாதண்ட நாயகர் கூற்றை ஆமோதித்தார்கள்! 


     அங்கிருந்து அனைவரும் மெளனமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்!


      குலோத்துங்கச் சோழ சக்கரவர்த்தியும் தனது அரண்மனைக்கு எழுந்து சென்றுவிட்டார்! 


       இளம்வழுதி எழுந்து வந்து மாதண்டநாயகரிடம்" நான் இப்பொழுதே புறப்படுகிறேன்! எனக்கு விடை கொடுங்கள்!"என்றான்!


     "சோழ மன்னர் உன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்! அதனை காப்பாற்றிக்கொள்! நடந்துவிட்ட அத்தனை சம்பவங்களிலும் மிகுந்த பாதிப்பு உனக்குத்தான் நானறிவேன்!அதற்காண தீர்வை எழுதும் நேரம் வந்துவிட்டது! எதையும் கவனித்து செயல்படு! படை வீட்டில் உனக்கு வேண்டிய வீரர்களை தேர்வு செய்து  படை ஒன்றை  உருவாக்கி அழைத்துச்சென்று வெற்றிகரமாக காரியத்தை முடித்து விட்டு வர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!" என்றார் மாதண்ட நாயகர்!


    மாதண்ட நாயகரின் தால் பணிந்து ஆசிபெற்று படை வீட்டை நோக்கி நகர்ந்தான்! இளம்வழுதி செல்வதை பார்த்துக்கொண்டு விட்டு தனது அரண்மனை நோக்கி நடந்து கொண்டிருந்தார் மாதண்ட நாயகர்!


(தொடரும்...... அத்தியாயம் 94ல்)


Sunday, 9 March 2025

இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 92

 🌾92. சிற்றரசர்களின் அதிருப்தி🌾 

     மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்கள் தனது இடைக்க கச்சையிலிருந்து கோடியக்கரை மூர்க்கனிடமிருந்து கைப்பற்றிய ஓலையை காண்பித்தார்! 


      அரசவையில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் அந்த ஓலையில் என்ன உள்ளது என அறிய விரும்பி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களது நோக்கத்தை நன்கு புரிந்து கொண்ட மாதண்ட நாயகர் அவர்கள் அந்த ஓலையினை தனது அருகில் இருந்த கொங்கு மண்டல அதிராசாதி ராசன் என்னும் சிற்றரசன் கையில் கொடுத்தார்! ஓலையில் உள்ள வாசகங்களை படித்துவிட்டு பொத்தபி சிற்றரசர் சோட மஹாராஜனிடம் ஓலையை கொடுத்தார்! பொத்தப்பி சிற்றரசரும் வாசித்து விட்டு முகத்தில் எள்ளம் கொள்ளும் வெடித்தபடி வீரக்கொட்ட சிற்றரசன் சூரப்பராஜனிடம் ஓலையை கொடுத்தார்! இவ்வாறாக அங்குள்ள அனைவரும் ஓலையை வாங்கி வாசித்து விட்டு மீண்டும் மாதண்ட நாயகரிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்! 


    ‌ "இந்த ஓலையில் இருக்கும் விவரம் உண்மை என்று எவ்வாறு ஏற்றுக் கொள்வது! இவை போலியான ஓலையாகக் கூட இருக்கலாம் அல்லவா? மேலும் வேண்டுமென்றே சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் மேல் வீண்பழியை இறைக்கும் நயவஞ்சக நாடகத்தின் ஓர் அங்கமாக கூட இந்த ஓலை இருக்க வாய்ப்பு உள்ளது" என்றார் வீரக்கொட்ட சிற்றரசன் சூரப்பராஜன்! 


      "ஆமாம் அப்படித்தான் இருக்க வேண்டும்! இவைகள் உண்மையாக இருக்க வாய்ப்பே கிடையாது! சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் பற்றி நான் நன்கு அறிவேன்! இவை அனைத்தும் வேண்டுமென்றே அவர் மீது திணிக்கப் படும் மோசடியின் இன்னொரு வெளிப்பாடாகத்தான் நான் பார்க்கிறேன்! இதனை இப்படியே நாம் விட்டு வைக்கக் கூடாது! இவை தொடர்ந்தால் நாளை எங்கள் மீதும் இல்லாததும் பொல்லாததும் கூறி சோழ மன்னருக்கு எதிராக திசை திருப்பி விட மாட்டார்கள் எனத் தோன்றுகிறது! ஆகவே இதனை உண்மையாக எடுத்துக் கொள்ளக் கூடாது! என சோழ மாமன்னர் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி அவர்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்!"என்றார் பொத்தப்பி சிற்றரசர் சோட மகாராஜன்!


       "நீங்கள் ஏன் பேசாமல் உள்ளீர்கள் கங்கபாடி சீயகங்கரே! நீங்களும் உங்கள் பங்கிற்கு ஏதேனும் கூறிவிடுங்கள்! அப்பொழுதுதான் முழுமை அடையும்! ஏற்கனவே உங்கள் நண்பர்கள் கூறியதை கவனித்திருப்பீர்கள்!"என்றார் மாதண்ட நாயகர்! 


     "அவர்கள் கூறியதில் எந்தவிதமான தவறும் இல்லை! ஏனெனில் சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் யாரோ ஒருவர் அல்ல! அவர் நமது சோழ தேசத்தின் இளவரசி மலர்வழி தேவியாரை மணந்து கொண்டவர்! நம் மீது அளவற்ற அன்பை கொண்டவர்! அப்படி உள்ள அவர் எதற்காக நம் தேசத்தின் மீது சரி செய்ய முற்பட வேண்டும்! ஒரு வகையில் இன்றைய சோழ தேசத்தில் அரியணை அவருக்கு உரிமையுடையது தானே! அப்படி இருக்கும் பொழுது அவர் ஏன் குறுக்கு வழியில் உள்ளே நுழைய வேண்டும்! நேராக வந்தாலே அவர்கள் உரியதை யாரும் மறுத்து விட முடியாது! இதனை நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்கள்! பின் எதற்காக ஏன் விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்! உன்னை எத்தனை காலம் தன் மறைத்து வைக்க முடியும்! ஆயிரம் கைகள் எழுந்தாலும் ஆதவனை மறைக்க இயலாது! நீங்கள் அறியாதவர் ஒன்றும் அல்ல!"என்றார் கங்கவாடி நாட்டின் சிற்றரசர் சீயகங்கன்!


      "கையில் வலுவான ஆதாரங்கள் சிக்கிய போதும் நீங்கள் இவ்வாறு பேசுவது உங்களுக்கு அழகு அல்ல சீயகங்கரே! சோழ தேசத்தில் இருந்து கொண்டு எதிரி மன்னருக்கு சாமரம் வீசவது இது முறையாக தெரியவில்லை! அதிலும் சோழ மா மன்னரின் முன்பாகவே இதனை கூறுவது சரியானது என நினைக்கிறீர்களா?"என்றார் மாதாண்ட நாயகர்! 


     "கங்கபாடியார் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்! அவர் சரியாகத்தானே குறிப்பிடுகிறார்! இன்று உள்ள சோழ தேசம் உண்மையில் சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தற்கு உரியது தானே! அப்படி இருக்கும் பொழுது அதனை எதற்காக அவர் குறுக்கு வழியில் அடைய முற்பட வேண்டும்!"என்றார் பொத்தப்பி சிற்றரசர்!


     "நானும் அதையேதான் கூறுகிறேன்!"என்றால் வீர கொட்டா சிற்றரசர்!


     "நீங்கள் அனைவரும் வேண்டுமென்று கலகத்தை உண்டாக்கும் நோக்கத்தில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! இந்த தேசம் யாருக்கு சேர வேண்டுமோ அவரிடம் தான் சேர்ந்து உள்ளது! சோழமா மன்னர் இராஜேந்திர சோழச் சக்கரவர்த்தி அவர்களின் உத்தம புதல்வி அம்மங்கை தேவி யாரின் ஒரே வாரிசான ராஜேந்திரர் பெயர் கொண்டவரும் இன்றைய சோழ மன்னருமான குலோத்துங்க சோழர் தான் உண்மையான வாரிசு என இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டதோடு நாம் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கத்தான் நமது மன்னர் அரசு கட்டில் ஏறினார்! உண்மை இவ்வாறு இருக்க அவர் மீது இல்லாததும் பொல்லததுமாக வீண் பழியை திணிக்க வேண்டாம்! இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அதன் விளைவுகள் விபரீதமாக போய்விடும்! உங்கள் அனைவரையும் எச்சரிக்கிறேன்! உனது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! வீணாக என்னைச் சீண்டி பகைத்துக் கொள்ளாதீர்கள்!"என பெரும் கோபத்தில் உரத்த குரலில் சத்தமிட்டார் கிளியூர் மலையமான்! 


       அதுவரை அங்கு நடந்து கொண்டிருந்த அத்தனை நிகழ்வுகளையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த சோழ தேசத்தின் மாமன்னர் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி திடுமென எழுந்து "கிளியூர் சேதிராயரே! சிறிது பொறுமை காத்துக் கொள்ளுங்கள்! சோழ தேசத்தின் உண்மையான விசுவாசியான நீங்கள் அமைதியாக இருங்கள்! " என அவரைப் பார்த்து கூறிவிட்டு, அவரை தொடர்ந்தார் "பொத்தப்பி, கங்கவாடி, வீரக்கொட்டா மற்றும் ஏனைய சிற்றரசர்கள் பெருமக்களுக்கும், இதுவரை இங்கு அமைதி காத்து வந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! நான் ஆட்சிக் கட்டில் ஏறிய காலத்தில் இருந்து தொடர்ந்து எண்ணற்ற இடையூறுகளை பார்த்து விட்டேன்! அவற்றின் நீள அகலங்களையும் பல்வேறு முறை மாதண்ட நாயகருடன் கலந்து உரையாடியுள்ளேன்! அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவுகளையும் எனது கவனத்திற்கு கொண்டு வந்த பின்பு செயலாற்றி கொண்டு உள்ளார்! அவர்கள் செயல்கள மீது எனக்கு எப்பொழுதும் பூரண நம்பிக்கை உண்டு! மேலும் என் மீதும் இல்லாததையும் பொல்லாததையும் கூறி சேற்றை வாரி இறைக்கும் உங்கள் முயற்சி அபத்தமானது என்பதை நான் அறிவேன்! உங்களை அடக்குவதற்கு எனக்கு ஒரு கணம் போதும்! அதை நான் செய்ய விரும்பவில்லை! அதற்குக் காரணம் இந்த தேசம் சிறப்பாக செயலாற்றுவதற்கு நாம் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டியது அவசியம்! அதனை நான் நன்கு அறிவேன்! நமது உறவு பலப்பட வேண்டும் என்பதற்காகத்தான் உங்களது அத்தனை மோசமான வார்த்தைகளையும் பொறுத்துக் கொண்டு உள்ளேன்! ஏதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என நினைத்தீர்கள் போலும்! நான் உங்களுக்கு தெளிவாக ஒன்று கூறிக்கொள்கிறேன்! நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு! தேவையின்றி ஏதேனும் கூறிவிட்டு பின்னால் அதற்காக வருந்தும் நிலைக்கு சென்று விடாதீர்கள்! நான் இப்படியே என்றும் பொறுமையாக இருப்பேன் என உறுதியாக கூற முடியாது! எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! அதனை சீண்டி பார்க்க நினைத்தால் விளைவுகள் விபரீதமாகத்தான் இருக்கும்! நீங்கள் அவ்வாறு செயலாற்ற மாட்டீர்கள் என நம்புகிறேன்! இன்னும் கடந்த காலத்தை பேசிக்கொண்டு காலத்தை கடத்துவது ஏன் விரயம்! இப்பொழுது நம் தேசம் சந்திக்கும் இடையூறுகளுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து அதனை கலைவதற்காக தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி உள்ளோம்! அதனை விடுத்து நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதற்காக ஒன்றுபடவில்லை! இதனை என்னை விட ஆட்சியில் அதிக அனுபவமான  மூத்தவராகிய நீங்கள் அறிவீர்கள்! அப்படி இருந்தும் உங்களது எண்ணமும் செயலும் தறி கெட்டுச் செயல்படுவது நன்மை பயக்கும் என்று நினைத்து செயல்படாதீர்கள்! இது உங்களுக்கு கொடுக்கும் இறுதி எச்சரிக்கையாகும்! இனியும் தொடர்ந்தால் விளைவுகளுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்!"எனக்கூறி விட்டு சிற்றரசர்களின் வதனங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் சோழச் சக்கரவர்த்தி குலோத்துங்கச்சோழர்!


     "நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பதாகவே கொண்டாலும், இந்த ஓலையில் சாளுக்கியவர்மன் என்று தானே குறிப்பிட்டுள்ளது! அவை ஒருவேளை சாளுக்கிய மன்னர் சோமேஸ்வரன் ஏன் இருக்கக்கூடாது? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?"என்றார் வீரகொட்டா சிற்றரசர்!


     "தாங்கள் இப்படி கூறுவது வியப்பாகத்தான் உள்ளது! சாளுக்கியவர்மன் யார் என்பதை அறிந்திருந்தும் எப்படி உங்களால் இவ்வாறு கூற முடிகிறது!"என்றார் மாதண்ட நாயகர்! 


     "சாளுக்கியவர்மன் யார் என்பதை நன்கு அறிவேன்! சாணக்கிய மன்னர் சோமேஸ்வரனும் விக்ரமாதித்தனும் ஒரே நாட்டின் இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஆட்சி செய்து வருவதை நாம் அறிவோம்! அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது! அப்படி இருக்கும் பொழுது ஒரு தலை பச்சமாக எவ்வாறு முடிவு எடுக்க முடியும்! ஆகையால் தான் கூறுகிறேன் வீணாக விக்கிரமாதித்தர் மீது பழியை சுமத்த வேண்டாம்! அது நமக்கு நன்மை தராது!"என்றார் வீர கொட்டா சிற்றரசர்!


     "தாங்கள் இவ்வாறெல்லாம் ஏதேனும் கூறி திசை திருப்ப முயல்வீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்! அதற்காகத்தான் முன்னேற்பாடாக இந்த ஓலையின் உண்மை தன்மையை எடுத்துக் கூறவும், இந்த ஓலையில் கண்டபடி அடுத்து நமது தேசத்தின் நடக்கவிருக்கும் தாக்குதலை குறித்து முடிவெடுக்கவும் திட்டமிட்டு தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! இங்கு எடுக்கப்படும் முடிவுகள் தீர்க்கமானவையாக இருக்க வேண்டும்! அவற்றின் பலா பலன்களை நம் தேசம் நன்முறையில் எதிர்கொள்ள வேண்டும்! அதனை நீங்கள் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் இங்கு கூட்டப்பட்டு உள்ளீர்கள்! அப்படி இருக்கும் பொழுது நீங்கள் கூறும் கண்ணோட்டத்தை கவனத்தில் கொண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" மாதண்ட நாயகர்! 


    "அப்படி என்ன முன்னேற்பாட்டை செய்துள்ளீரகள்? இந்த தேசத்தில் எத்தனையோ கலவரங்கள் நடந்து கொண்டுள்ளன? அதேபோல் புதிதாக ஏதேனும் கலவரத்தை இங்கு உண்டாக்கும் நோக்கத்தில் தான் நீங்கள் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்! நீங்கள் நினைக்கும் எதுவும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை! உங்கள் கனவுகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை!"என்றார் வீரக்கொட்டா சிற்றரசர்!


     "ஏன் இவ்வாறு பொறுமை இன்றி தவிக்கிறீர்கள்! நான் தான் அனைத்திற்கும் சரியான ஆதாரம் உள்ளது! அதனை காட்டுகிறேன் எனக் கூறும் பொழுது நீங்கள் ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்! நமது சோழ மா மன்னர் இப்போதுதான் உங்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார் அப்படி இருந்தும் புரியாதது போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உண்மையிலே புரியாமல் இருக்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே குட்டையை குழப்பும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்களா எனத் தெரியவில்லை? "என்றார் மாதண்ட நாயகர்! 


     "எங்களுக்கு அது போன்ற எண்ணம் ஏதும் கிடையாது! உண்மை உண்மை என கூவிக் கொண்டிருக்கிறீர்களே தவிர என்ன உண்மை என்று இதுவரை காட்டவில்லை! நீங்கள் காட்டுங்கள் பிறகு அதனை ஏற்றுக் கொள்வதா? அல்லது புறக்கணிப்பதா பிறகு முடிவு செய்து கொள்வோம்!"என்றார் வீரக்கொட்டா சிற்றரசர்!


     அப்போது அங்கு திடீரென உள்ளே வந்த நபரை கண்டதும் அங்குள்ள சிற்றரசர்கள் சிலரின் முகம் வியர்வை மழையில் நனைந்து விட்டது!


(தொடரும்.... அத்தியாயம் 93ல்)



      

இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 91

 🌾91. குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி🌾 


    கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனை விழாக் காலத்தின் உற்சவத்தினை கொண்ட பொலிவோடு செயல்பட்டுக் கொண்டிருந்தது! 


      புலர் காலைப்  பொழுதின் புன்னகைகளை புள்ளினங்கள் இசைக்கத் தொடங்கிய வேளையில் பல்வேறு திசைகளில் இருந்தும் பெரிய பல்லக்குகளிலும் அழகிய குதிரைகளிலும் சிற்றரசர்களும் அமைச்சர் பெருமக்களும் வந்த வண்ணம் இருந்தார்கள்! தத்தமது செல்வாக்கை காட்டு முகமாக பாதுகாப்பு என்ற பெயரில் ஒவ்வொருவரும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களை அழைத்து வந்து விட்டிருந்ததால் அரண்மனை வளாகம் பெரும் அமளிது துமளியில் இருந்தது! 


        நேர்த்தியான வண்ணத்தில் அமைந்த அழகிய ஆடைகளில் தங்களின் அலங்காரங்களை செய்து கொண்டு பெரும் கம்பீரமாக அரண்மனைக்குள் பிரவேசித்து விட்டிருந்தவர்கள், தங்களது செல்வாக்குகளை பயன்படுத்திக் கொண்டு அங்கு உள்ள காவலர்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள்! இன்னும் சில சிற்றரசர்கள் தங்கள் ராணிகளுடன் வந்து அங்கு உள்ள அரண்மனை உய்யாவனத்தின் அழகிய காட்சிகளை காட்டிக் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார்கள்! சிற்றரசர்களும் அவரது ராணிகளும் உடலில் பூசியிருந்த வாசனை திரவியங்களின் எழுச்சி அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது! இன்னும் சில சிற்றரசர்கள் அங்குள்ள பணியாட்களை அழைத்து தங்களுக்கு வேண்டிய காலை நேர உணவு பதார்த்தங்களை வரவழைத்து உண்டு கொண்டிருந்தார்கள்! புதிதாக அப்பொழுது அங்கு வந்திருந்த சில சிற்றரசர்கள் அரண்மனையின் ஒவ்வொரு பகுதியையும் அதன் வேலைப்பாட்டையும் வியப்போடு பார்த்ததோடு தங்கள் அரண்மனையின் அடுத்து செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தங்கள் பணியாளர்களுக்கு கூறிக் கொண்டிருந்தார்கள்! 


      சிற்றரசர்களின் ஒவ்வொரு செயல்களையும் கண்டும் காணாமலும் எதுவும் கூற முடியாமல் அங்குள்ள பணியாளர்களின் தலைவர்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்! 


       அங்கு அப்போதுதான் வந்திருந்த சில அமைச்சர் பெருமக்கள் சிற்றரசர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்து அதனை தடுக்கும் வழி தெரியாமல் உள்ளூர அவர்களை சபித்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்று கொண்டிருந்தார்கள்! இவை யாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த சில சிற்றரசர்கள் தங்கள் மனதிற்குள் அமைச்சர்களை எண்ணி வஞ்சத்தோடு கருவிக் கொண்டிருந்தார்கள்! 


     புலர் காலைப் பணியில் ஈடுபடும் அரண்மனை பணியாளர்கள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே அன்று வந்து அரண்மனை முழுவதையும் சுத்தம் செய்ததோடு அங்கு வரவிருக்கும் விருந்தினர்களுக்கு தேவையான அத்தனை பணிகளையும் செவ்வனே நிறைவேற்றிக் வைத்திருந்தார்கள்! எத்தனை தான் பார்த்து பார்த்து பணிகளை செய்து வைத்திருந்தாலும் அவற்றின் குறைகளை கூறிக் கொண்டிருந்த சிற்றரசர்கள் மனம் நோகாமல் அவர்கள் வேண்டியவற்றை உடனே செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்! 


     இவ்வாறாக அரண்மனை முழுவதும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்த பொழுது தனது காலை நேர கடமைகளை முடித்துவிட்டு உணவினை அறிந்திக் கொண்டிருந்தார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!


      அப்போது அந்த அறையில் நுழைந்த இளம்வழுதி "என்னை அழைத்து இருந்திருக்கலாமே ஐயா! " எனக் கூறியபடி அவரது அருகே வந்து நின்றான்! 


     "இரவு வெகு நேரம் ஆகிவிட்டது! அதனால் நீ உணவு உண்டிருக்க மாட்டாய் எனத் தெரியும! உணவு அருந்துவதற்காக தான் உன்னை அழைத்தேன்! இங்கு வந்து அமர்ந்து உணவைச் சாப்பிடு!" என்றார் மாதாண்ட நாயகர்! அவர் கூறியதை ஆமோதிக்கும் வண்ணமாக பதில் ஏதும் கூறாமல் உணவருந்த அமர்ந்ததும் அங்கிருந்த பணிப்பெண் அவனது தட்டில் உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்தார்! தட்டில் வைத்த உணவுகளை ஏதும் மிச்சம் வைக்காமல் உண்டு முடித்த போது பணிப்பெண் கொண்டு வந்த பாத்திரத்தில் கைகளை சுத்தம் செய்து கொண்டு எழுந்து கொண்டான் இளம் வழுதி!


        ஏற்கனவே உணவு உண்டு முடித்து விட்டிருந்த மாதண்ட நாயகர் தனது விழியால் அவனை அழைத்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தார்! 


       மாதண்ட நாயகரும் இளம்வழுதியும் மாளிகையிலிருந்து வெளியேறி அரசவை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்! ஏற்கனவே வந்திருந்த சிற்றரசர்களும் அமைச்சர் பெருமக்களும் அரசவை நோக்கி நகர்ந்து விட்டிருந்தார்கள்! அவர்களைத் தொடர்ந்து இளம்வழுதியும் மாதண்ட நாயகரும் அரசவைக்குள் நுழைந்து தங்கள் ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள்! 


      அரசவைக்குள் வந்திருந்த சிற்றரசர்களும் அமைச்சர் பெருமக்களும் தங்களது இருக்கைகளில் அமர்ந்து கொண்டு வெற்றுப் புன்னகைகளை வலிய வரவழைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்! மாதண்ட நாயகருடன் இளம்வழுதியும் உள்ளே நுழைந்ததை கண்டும் காணாமலும் இருந்து விட்டிருந்தவர்கள் வேண்டுமென்றே அவர்களின் காதில் விழும்படி உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்! "ஓ கோ! இவன்தான் மாதண்ட நாயகர் புதிதாக கண்டுபிடித்த உப தளபதியா? எதற்கும் பயன் இல்லாதவன் போல் தோற்றமளிக்கிறானே? அதனால்தான் இன்று நம் தேசத்தில் நடைபெறும் எத்தனையோ சதி செயல்களை ஒன்றும் செய்யாமல் போனது போலும்!"எனக்கூறி சிரித்துக் கொண்டிருந்தார்கள்! 


      வேண்டுமென்றே பேசிக் கொண்டிருந்த சிற்றரசர்களின் பேச்சினை எதுவும் கண்டு கொள்ளாமல் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!


      "நீங்கள் கூறியது உண்மைதான்! தேசத்தில் நடப்பதை எண்ணி மிகுந்த வெட்கக்கேடாக உள்ளது! இதையெல்லாம் தடுக்கும் தகுதி சரியான நபரிடம் கொடுத்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது! என்ன செய்ய? நாம் கூறினால் யார் கேட்கப் போகிறார்கள்! எல்லாம் அவர்கள் வைத்தது தான் சட்டமாக உள்ளது! நாம் என்ன செய்ய முடியும்! வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் நாம் உள்ளோம்! இதற்கு ஒரு சரியான தீர்வினை சோழ மன்னர் தான் கண்டுபிடிக்க வேண்டும்! இப்போதெல்லாம் இது குறித்து அவரிடம் உரையாடும் வாய்ப்பே கிடைப்பதில்லை! இன்று எப்படியும் அவரிடம் நேரில் கேட்டு விட வேண்டியதுதான்!"என தனது பெரிய மீசையை தடவிக் கொண்ட படி கூறினார் சிற்றரசர்களில் வயதானவர்! 


         "சோழ மன்னருக்கு எத்தனையோ பிரச்சனை! அவர் இது குறித்து எல்லாம் எங்கு யோசிக்க போகிறார்! அவரது நிலையை எண்ணியே அவருக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது! அப்படி இருக்கும்போது மற்ற விவரங்களில் அவர் எவ்வாறு கவனம் செலுத்துவார்! நடப்பதை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்! பிறகோ ஒன்றும் செய்துவிடும் நிலையில் அவர் இல்லை!"என்றார் மற்றொரு சிற்றரசர்! 


       "ஆமாம் நீ கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! எதுவாயினும் இன்று ஒரு முடிவு எட்டி விட வேண்டியது தான்" என்றார் முன்பு கூறிய அதே சிற்றரசர்! 


     இதற்கிடையே வாயில் காப்பவன் பெரும் குரலில் "சோழ தேசத்தின் மாமன்னரான இராஜேந்திர சோழரின் கொள்ளு பேரனும் இன்றைய நமது சோழதேசத்தின் மன்னருமான குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி வருகிறார்! வருகிறார்!" என கட்டியம் கூறினான்! 


      அங்கு உள்ள அனைவரும் எழுந்து நின்று மன்னரின் வருகைக்காக காத்திருந்தார்கள்! அவர் உள்ளே வந்ததும் தலை வணங்கி வணக்கம் செலுத்தி விட்டு அவரது விழி அசைவினை ஏற்று தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்!


      சிரசில் மகுடம் தாங்கி சுந்தரமான முகத்தோற்றத்தோடு , தீட்சண்யமான  விழிகளில் எப்போதும் குடி கொண்டிருக்கும் அருட் பார்வையோடு கம்பீரமாக நடை போட்டபடி தனது "சேதிராயன்" என்னும் அரியாசனத்தில் அமர்ந்து கொண்டார் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி! அதுவரையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்த அத்தனை பெருமக்களும் ஆழ்ந்த அமைதியின் உறைவிடமாக மாறிவிட்டிருந்தார்கள்! அவர்களது வதனங்களை கூர்ந்து கவனித்தபடி தனது இதழில் புன்னகை ஒன்றைப் படர விட்டுக் கொண்டார் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி!


        மன்னர் கூறும் முடிவுகளை பதிவு செய்வதற்காக திருமந்திர ஓலை மற்றும் திருமந்திர ஓலை நாயகம்  தனது ஓலைகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தார்கள்!


       அங்கு உள்ளவர்களை ஒரு கணம் பார்த்துவிட்டு சோழ தேசத்தின் மாண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் எழுந்து "சோழ தேசத்தின் சக்கரவர்த்தி அவர்களுக்கு முதலில் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! இங்கு நாம் கூடியிருக்கும் நோக்கம் யாதென்று அனைவரும் அறிவோம்! இன்றைய சூழலில் நம் தேசம் பல்வேறு விதமான இடையூறுகளை சந்தித்து வருகிறது! அதன் பலா பலன்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்! அதற்கு நிரந்தர தீர்வு ஒன்று கண்டறிய வேண்டும் என்று நெடுநாளாய் நமது சோழ மாமன்னர் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தி எண்ணியதோடு அதனை செயலாற்றும் பொறுப்பை என் வசம் ஒப்படைத்து இருந்தார்! நானும் அதனை கலைந்திடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்! அதற்கு இடையில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல் நாம் ஏற்கனவே கணித்தவை சரியான நிரூபிக்கும் விதமாக உள்ளது!"எனக் கூறிவிட்டு அரசவையில் உள்ளவர்களை ஒரு கணம் தனது விழிகளைச் சுழற்றி பார்த்துக் கொண்டிருந்தார்! அனைவரும் அவர் என்ன கூறப் போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள்! அவரைத் தொடர்ந்து "நான் கூறப்போவது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அதனை உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்! அதற்கான ஆதாரம் இப்பொழுது கிடைத்துவிட்டது!" என்றார்! 


      "தங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதாரம் யாது என்று தெளிவாக எடுத்துக் கூறுங்கள்"என்றார் கிளியூர் மலையமான் இராஜேந்திர சோழச் சேதிராயன் என்னும் சிற்றரசர்.


     "கண்டிப்பாக கூறுகிறேன் மலையமான் அவர்களே! அதற்காகத்தானே இங்கு நான் கூடியுள்ளோம்! " என்றவர் தொடர்ந்து " நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பது வேறு யாரும் அல்ல... "எனக்கூறி நிறுத்தி விட்டிருந்தார் மாதாண்ட நாயகர்!


      "ஏன் பாதியிலே நிறுத்தி விட்டீர்கள்? தாங்கள் கூற வந்த உண்மையை உரைப்பதில் என்ன தயக்கம்? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறி விடுங்கள்? அதுதான் அனைவருக்கும் நல்லது!" பொத்தப்பிக் காமதேவ சோட மகாராஜன் என்னும் சிற்றரசர்! 


       "நான் கூறப்போகும் உண்மை இங்கு உள்ள சிலருக்கு மிகுந்த மன வேதனையை கொடுக்கலாம்! ஏனெனில் அவர்கள் வெகு காலமாய் நான் கூறப்போகும் நபரோடு மிகுந்த நெருக்கத்தில் உள்ளார்கள்! என்பதனை நான் நன்றாக அறிவேன்! இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுரை உள்ளது! அதை நோக்கிய பயணம் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது! அதுதான் கிடைத்திருக்கும் ஆதாரம் வெளிப்படையாக கூறுகிறது! இது குறித்து நான் நேற்று இரவு நமது மன்னரோடு கலந்து ஆலோசித்து விட்டேன்! அவரும் எவ்வித தயக்கமின்றி உண்மையை எடுத்துரைக்க ஒப்புக்கொண்டார்! ஆகவே பிரச்சனையின் சரியான திசை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்திருக்கும் ஆதாரம் தந்திருக்கிறது! "என அங்கிருந்தவர்களை பார்த்து கொண்டே அந்த உண்மையை எடுத்து காட்டியதும் அங்கு உள்ள சில சிற்றரசர்கள் கடும் கோபத்தில் கொந்தளிக்க தொடங்கி விட்டார்கள்!

(தொடரும்..... அத்தியாயம் 92ல்)



இராஜமோகினி - யாழிசை செல்வா அத்தியாயம் 90

  🌾90. மாதண்ட நாயகரின் உத்தரவு🌾

     கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனையில் பொற்கொடியை கொலை செய்ய முற்பட்டு அகப்பட்டு கொண்ட முகமூடி மனிதனான கதிரவன் பெரும் ஆணவத்தோடு சிரித்தது அந்த அறையில் இருந்த அனைவரிடமும் பெரும் யோசனைக்கு தள்ளி விட்டிருந்தது!


     "அடேய் மூடனே! இப்பொழுது வகையாக சிக்கிக் கொண்டாய்!  உன்னைத் தவிர வேறு நபர்கள் இந்த அரண்மனயில் உள்ளார்களா என்ற உண்மையை கூறிவிடு?"என்றார் மாதண்ட நாயகர்!


       "நான் உண்மையை கூறினாலும் அல்லது பொய் கூறினாலும் என்னை எப்படியும் நீங்கள் விட்டு வைக்கப் போவதில்லை! அப்படி இருக்க என்னிடம் ஏன் இந்த குழந்தைத்தனமான விளையாட்டு!"எனக்கூறி மீண்டும் ஆணவத்தோடு சிரித்தான் கதிரவன்! 


     "நீ கூறுவது உண்மைதான்! உனது மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான்! அவை எப்படி நிகழ வேண்டும் என்பது நீ கூறும் பதில் தன் உள்ளது!"என்றார் மாதாண்ட நாயகர்! 


     "நாங்கள் எப்பொழுது இந்த சதிச் செயலில் குதித்தோமோ அப்போதே எங்களுக்கு என்ன நடக்கும் என நன்கு தெரியும்! அதனால் உங்களின் இந்த போலியான பூச்சாண்டித்தனமான மிரட்டல் என்னிடம் பலிக்காது! அப்படி பலிக்கும் என நீங்கள் எண்ணினால் அது உங்கள் மடத்தனம்! உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்! அதைப்பற்றி எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை!"


      "இத்தனை தெளிவும் துணிச்சலும் நாட்டின் மேன்மைக்கு பயன்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! கேவலம் தேசத்தை சீரழிக்கும் நயவஞ்சகத்திற்கு அதை பயன்படுத்தி வீணாக நீங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல் தேசத்தையும் சீரழிக்கும் உங்கள் போக்கை எண்ணித்தான் சிறிது வருத்தமாக உள்ளது! நான் என்ன கூறினாலும் உன் காதில் விழப்போவதில்லை!"


     "பிறகு ஏன் தாமதிக்கிறீர்கள்? நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் எனக்கு கொடுக்கலாம்! அவை குறித்து எனக்கு துளியும் வருத்தமில்லை!உம் ஆகட்டும்!"என்றான் கதிரவன்!


       "உனக்கு அத்தனை நெஞ்சழுத்தமா? இவனை இழுத்துச் சென்று நாளை காலையில் வெட்டுப்பாறையில் இவனது தலையை சீவித் தள்ளுங்கள்! உம்! இனியும் இவன் என் கண் முன்னால் நிற்கக்கூடாது இழுத்துச் செல்லுங்கள்!"என மாதண்ட நாயகர் அங்கு உள்ள சோழ வீரர்களை பார்த்து உத்தரவிட்டார்! 


       சோழ காவல் வீரர்கள் முகமூடி மனிதனான கதிரவனே இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தார்கள்! 


       "தங்காய்! நீ படுத்து உறங்கம்மா! எங்களுக்கு வேறு பணிகள் உள்ளது! அதனைப் பார்க்க வேண்டும்!"எனக் கூறியதோடு அங்குள்ள காவலர்களுக்கு மல மல வென பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து விட்டிருந்தார் மாதண்ட நாயகர்! 


      பொற்கொடியின் மாளிகையைச் சுற்றி பெரும் காவல் பலப்படுத்தப்பட்டது! மேலும் அரண்மனை எங்கும் சோழ காவல் வீரர்கள் தடதடவென்று ஓடிக்கொண்டு இருந்தார்கள்! அதுவரையில் மங்கிய ஒளியில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளின் நாக்குகள் தூண்டப்பட்டு பெரும் ஒளி எங்கும் பரவி கிடந்தது! பல்வேறு பகுதிகளில் காவல் பணிகள் செய்து கொண்டிருந்த சோழக் காவல் வீரர்கள் அங்கும் இங்கும் விரைந்து ஓடிக்கொண்டிருந்தார்கள்! 


       சிறிது நேரத்திற்கெல்லாம் மாதண்ட நாயகரின் அரண்மனை மாளிகை பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டிருந்தது! மாதண்ட நாயகரின் மாளிகையின் முன்பு பெரும் ஆசனம் ஒன்று போடப்பட்டிருந்தது! ஆசனத்தில் அமர்ந்து கொண்டு பெரும் யோசனையில் இருந்தார் மாதண்ட நாயகர்! அவருக்கு அருகில் மற்றொரு மர ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்த இளம்வழுதி அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தான்! 


      அரண்மனையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த காவல் வீரர்களின் தலைவர்கள் அனைவரும் மாதண்ட நாயகரின் மாளிகை வாசலில் குழுமியிருந்தார்கள்! அங்கு கூடியிருந்த அவர்களின் வதனங்கள் அடுத்துஎன்ன நடக்கப் போகிறது?  திடீரென கருக்கல் நேரத்தில் ஏன் இந்த கூட்டம்? அப்படி என்ன அவசரம்? ஏதேனும் புதிய ஆபத்து உருவாகிவிட்டதோ? ஒன்றும் புரியவில்லையே? எதற்காக திடீரென்று இந்த அவசரக் கூட்டத்தில் அவசியமென்ன? என பலவாறான கேள்விக்கணைகள் அவர்கள் முகத்தில் ஓடிக்கொண்டிருந்தது! தங்களது அருகில் நின்று கொண்டிருந்த மற்ற காவல் தலைவர்களையும் விழிகளாலே வினவிக் கொண்டபோது பதில் ஏதும் கிடைக்காததால் என்ன செய்வதென்று புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார்கள்!


      ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருந்த மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அரண்மனை மாளிகையின் வாசலில் குழுமியிருந்த சோழக் காவல் வீரர்களின் தலைவர்களைப் பார்த்து கூறினார்; "இதுவரையில் நம தேசத்தில் எண்ணற்ற கலவரங்களும் சதிகளும் நடந்தேறிக் கொண்டிருந்தது! அவற்றை பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்! ஆனால் இன்று நமது அரண்மனையிலேயே சதிகாரர்கள் புகுந்து விட்டதோடு நமது அரண்மனை காவல் பணியில் இருக்கும் காவலர்களில் ஒருவனாகவே அவன் இருந்தது தான் பெரும் வியப்பாக உள்ளது! இவையெல்லாம் எவ்வாறு நடக்கிறது? அவை ஏன் நமது பார்வையில் இருந்து தப்பிவிட்டது? இன்னும் எத்தனை பேர் இங்கு நமது காவல் பணியில் ஊடுருவியுள்ளார்களோ, எதுவும் நமக்குத் தெரியவில்லை! சோழ காவலர்களிடமட்டும் தான் ஊடுருவி உள்ளார்களா அல்லது மற்ற பகுதிகளிலும் புகுந்து விட்டிருக்கிறார்களா? என எதுவும் நமக்குத் தெரியவில்லை! உடனடியாக இப்பொழுதே அரண்மனையின் ஒவ்வொரு பகுதிகளும் உள்ள நபர்களின் விவரங்களை சோதித்து சரி பார்க்க வேண்டும்! சந்தேகப்படும்படியாக யார் இருந்தாலும் உடனடியாக அவர்களை கைது செய்து காராக்கிரகத்தில் அடைத்து விடுங்கள்! எந்தவிதமான தயக்கமும் வேண்டாம்! நாளை காலைக்குள் நமது அரண்மனையின் ஒட்டுமொத்த நிலவரமும் எனக்கு தெரிந்தாக வேண்டும்! இனியும் இங்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு நான் அனுமதியேன்! உங்கள் பணிகளை நிறைவேற்றுவதற்கு எத்தனை வீரர்கள் தேவைப்படுகிறார்களோ அத்தனை பேர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களது பணிகளில் ஈடுபடுத்தும் நம்பிக்கைக்கு நீங்களே பொறுப்பாதீர்கள்! சரியான நபர்களை தேர்வு செய்து இந்த பணியை மேற்கொள்ளுங்கள்! எக்காரணம் கொண்டும் எந்தவிதமான இடையூறும் தடையும் இதில் நடைபெற்று விடக்கூடாது!"


      அங்கிருந்த சோழ காவல் வீரர்களின் தலைவர்களில் மிகவும் வயதான ஒருவர் முன்வந்து " ஆகட்டும் ஐயா! தாங்கள் கூறியபடியே அனைத்தையும் செய்து விடுகிறோம்! நடந்த தவறுகளுக்கு எங்களை மன்னித்து விடுங்கள்! இனியும் இது போன்ற தவறு ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்! எங்கள் காவல் வீரர்களில் ஒருவன் இத்தகைய சதி செயலில் ஈடுபட்டதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்! பலவிதமான சோதனைகளுக்கு பின்பு தான் எங்கள் காவல் பணிகளில் வீரர்களை தேர்வு செய்கிறோம்! அப்படி இருந்தும் இந்தத் தவறு எவ்வாறு நடந்ததென்று எங்களுக்கு தெரியவில்லை! நடந்துவிட்ட தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்! இனியும் இது போன்று நடக்காமல் அதற்கு வேண்டிய நடவடிக்கையை கட்டாயம் மேற்கொள்வோம் ஐயா! எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! இனி ஒருபோதும் சோழத்தின் காவல் பணிகளில் எந்தவிதமான தொய்வு இருக்காது என உறுதி அளிக்கிறோம்"என்றார்! 


      "நீங்கள் யாரும் வேண்டுமென்றே இதனை செய்தீர்கள் என்று நான் கூறவில்லை! சதிகாரர்கள் திட்டமிட்டு தங்களது சதி செயல்களில் உங்களை எப்படியோ ஈடுபடுத்தி விடுகிறார்கள்! அதற்காக நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் எனக் கூற முடியாது! நம்மை அறியாமல் நடந்து விடும் தவறுகளுக்கு இனியும் நாம் இடம் தரக் கூடாதென்று தான் கூறுகிறேன்! தேசம் இன்று உள்ள சூழலில் நாம் மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டும்! அப்போதுதான் எந்தவிதமான தவறுகளுக்கும் இடம் தர வாய்ப்பு இருக்காது! மிகுந்த பொறுப்போடு செயல்பட்டு இந்தக் காரியத்தை செயலாற்றுங்கள்! அவை தான் நம் அனைவருக்கும் நன்மை பயக்கும்! இங்கு நடந்த விவரங்கள் நமது சோழ மன்னரின் செவிகளுக்கு சென்றால் மிகுந்த வருத்தம் கொல்லுவார்! ஏற்கனவே தேசத்தில் நடைபெறும் பல்வேறு செய்திகளை கேட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளார்! எங்கே அவை இன்னும் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் என்னுள் உள்ளது! அவ்வாறு நடந்து விடாமல் அதனை தடுத்து காப்பது நமது கையில் தான் உள்ளது! அதை நோக்கிய பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டுமென இந்த நேரத்தில் உங்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்! நம்பிக்கை ஒன்று தான் நம்மிடம் இப்பொழுது உள்ளது! அதை கையில் கொண்டு காரியத்தை செயலாற்ற வேண்டியதுதான்! அனைவரும் விரைந்து செயலாற்றி விடியலில் எனக்கு நல்லதொரு பதிலை கூறுங்கள்!"என்றார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!


      "கண்டிப்பாக, நீங்கள் வருந்தும் அளவிற்கு எதுவும் நீ இனி நடக்காது! என்ன உறுதியாக நாங்கள் தெரிவிக்கிறோம்!"எனக் கூறியதோடு அங்குள்ள சோழக் காவல் தலைவர்கள் அனைவரும் மாதண்ட நாயகரே வணங்கி விடை பெற்று சென்றார்கள்! 


      "இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது எனக்கு? நாளை நடைபெற இருக்கும் மந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் சிற்றரசர்களும் அமைச்சர் பெருமக்களும் இது குறித்து என்ன கூறப் போகிறார்களோ என்ற அச்சம் மேலோங்குகிறது! நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பெரும் வருத்தத்தையும் அச்சத்தையும் தான் உண்டாக்கிறது! சதிகாரர்கள் இன்னும் எத்தனை எத்தனை சதி திட்டங்களை அரங்கேற்ற காத்து உள்ளார்களோ? ஒன்றும் புரியவில்லை எனக்கு! "என இளம்வழுதியை பார்த்து கூறினார் மாதாண்ட நாயகர்! 


       "தாங்கள் கூறுவது மறுக்க இயலாத உண்மைதான்! ஆனாலும் ஒன்றை கவனித்துப் பாருங்கள்! இதற்கு முன்பாக நடந்த அத்தனை சதிச் செயல்களிலும் சதிகாரர்கள் நம்மிடம் உயிருடன் அகப்படவில்லை! ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் மட்டும்தான் அகப்பட்டுக் கொண்டு உள்ளார்கள்! அதுவே அவர்களது முடிவுரைக் காண நாள் நெருங்கி வட்டதை உணர்த்துகிறது! அதனால் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது ஐயா! கண்டிப்பாக அவர்களுக்கான சரியான தண்டனை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது!" என்றான் இளம்வழதி!


      "அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது! இருப்பினும் அவர்களின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன் இறந்த பின்பும் இவர்கள் எப்படி செயலாற்றுகிறார்கள் என்றுதான் புரியவில்லை!"என்றார் மாதணட நாயகர்!


     "நான் ஏற்கனவே தங்களிடம் கூறி உள்ளேன் ஐயா! கங்கைகொண்ட சோழபுரத்தில் நான் நுழையும் முன்பாக இருண்ட காட்டில் என்னிடம் அகப்பட்டுக் கொண்ட சதிகாரர்களை இங்கு அழைத்து வந்து நமது காவலரிடம் ஒப்படைத்து உள்ளேன்! அவர்கள் எனக்கு கூறிய தகவல் யாதெனில் இதுவரை நடந்த நிகழ்வு மட்டுமல்ல, இப்போது நடந்த செயல்களும் ஏற்கனவே கோடியக்கரை மூர்க்கனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டவை தான்! புதிதாக ஏதும் அவர்களுக்கு உத்தரவு கொடுக்கப்படவில்லை! அதனால் நாம் உறுதியாக நம்பலாம்! இனியும் எந்த பேராபத்தும் வராது, அப்படியே வந்தாலும் அதனை துணிச்சலோடு எதிர்கொள்ளும் பக்குவத்தோடு செயலாற்ற வேண்டியதுதான்"என்றான் இளம்வழுதி! 


       "சரி மிகுந்த நேரம் ஆகிவிட்டது! விடியலில் சந்திப்போம்!"என இளவழுதியிடம் கூறியவர் தனது மாளிகைக்குள் சென்று விட்டிருந்தார் மாதண்ட நாயகர்! அவர் சென்ற பின்பு தனது அறையை நோக்கி நகர்ந்து விட்டிருந்தான் இளம்வழுதி! 


(தொடரும்...... அத்தியாயம் 91ல்)




இராஜமோகினி யாழிசைசெல்வா அத்தியாயம் 89

 

🌾89. முகமூடி மனிதன்🌾

        மாதண்ட நாயகரின் அரண்மனை மாளிகைக்குள் நள்ளிரவு வேளை தொடந்த பின்பு முகமூடி அணிந்த உருவம் ஒன்று சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே குதித்து விட்டிருந்தது! விளக்குகளால் அவ்வளவாக பரவியிராத இருளைத் துணையாக கொண்டு அவ் உருவம் மெல்ல நடந்து கொண்டிருந்தது ! அவ்வபோது தன் விழிகளை சுழற்றி அங்கும் இங்கும் எச்சரிக்கையோடு பார்த்துக் கொண்டே மாளிகைக்குள் நுழைந்து விட்டிருந்தது! அங்கு எண்ணற்ற அறைகள் நிரம்பிக் கிடந்தன! ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்து கடைக் கோடியிலிருந்த அறையை நோக்கி நகர்ந்து விட்டிருந்தது! ஒரு கணம் மற்ற அறைகளை நோக்கிய அவ்உருவம்  தனக்குள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருக்க வேண்டும். அதன் காரணமாக தன் தலையை அப்படி இப்படியும் ஆட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தது! இரவு நேர காவலர்கள் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்! மாதண்ட நாயகரின் மாளிகை வாசல் வரை வந்து ஒரு கணம் இரண்டு காவலர்கள் பார்த்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தார்கள். வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவல் பணி அது! முறை வைத்துக் கொண்டு மாறி மாறி குறித்த இடைவெளியில் மாளிகையை காவல் காத்து வந்து கொண்டிருந்தார்கள்!  காவலர்களின் வருகையை கவனித்துவிட்ட முகமூடி உருவம் அங்கிருந்த அடர்ந்த முல்லைக்கொடியின் பின்னால் தன்னை புதைத்துக் கொண்டது! காவலர்கள் திரும்பிச் சென்றதும் கடைக்கோடி அறையை நோக்கி மீண்டும் நகர்ந்தது முகமூடி உருவம்!

      இரவு நேரத்தின் குளுமைகளை அப்படியே அள்ளி வீசிக்கொண்டிருந்தது இளம் காற்று! கடைக்கோடி  அறையின் சாளரத்தின் மேல் போட்டிருந்த வண்ணமயமான வேலைப்பாடுடன் கூடிய திரைச்சீலைகள் காற்றில் படபடவென அடித்துக் கொண்டிருந்தன! அந்த அறையின் எதிர் திசையில் அமைந்திருந்த நந்தவனத்தில் மலர்ந்து மனம் பரப்பிக் கொண்டிருந்த பூக்களின் வாசம் காற்றில் கலந்து கடைக்கோடி அறையை நோக்கி வீசிக் கொண்டிருந்தது! இயற்கையின் இன்பமான நறுமணத்தின் வாசனையை பருகிய படி அந்த அறை முழுவதும் நிரம்பிக் கிடந்தது! நந்தவன மலர்களுக்கு நடுவே சிறிய பொய்கை ஒன்று அமைந்திருந்தது! அவற்றின் கரைகளைச் சுற்றி பரவி வளர்ந்து கிடந்த மலர்க்கொடிகள் அங்கிருந்த மரங்களின் மீது படர்ந்து நந்தவனத்திற்கு புது அழகைக் கொடுத்துக் கொண்டிருந்தது! மலர்களில் தேங்கி கொடிகளில் தவழ்ந்து நிலமகளை முத்தமிட்டு கொண்டிருந்த பனித்துளிகளை நேசத்தோடு வாரி இறைத்து கொண்டிருந்தது தென்றல் காற்று! அப்போது அங்கிருந்து கிளம்பிய தென்றல் காற்று மலர்களின் வாசத்தோடு பனித்துளிகளை ஏந்தி கொண்டு கடைக்கோடி அறையின் சாளரத்தை கடந்து உள்ளே சுழற்றி வீசியது!

      அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்த மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள் பொற்கொடி! வானில் உலவிக் கொண்டிருந்த வெண்ணிலவின் தண்ணொளி இந்த அறையில் துளித்துளிகளாய் மலர் தோரணம் செய்து கொண்டிருந்தது! நீண்ட அந்த அறையின்  திறந்து கிடந்த சாளரக் கதவுகளின் வழியாக முகமூடி உருவம் சத்தமின்றி எகிரிக் குதித்திருந்தது! மஞ்சத்தை நோக்கி இடையிலிருந்து உருவிய வாளுடன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது! பகல் முழுவதும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஆட்டம் போட்டதால் மிகுந்த கலைப்பில் உறங்கிக் கொண்டிருந்தாள் பொற்கொடி! 

      தனது கையில் உள்ள வாளை ஓங்கி பொற்கொடியின் தலையை துண்டாக வெட்டி வீச முகமூடி உருவம் முற்பட்டபோது அசதியில் புரண்டு படுத்தாள் பொற்கொடி! வெண்ணிலவின் ஒளி கீற்று ஒன்று அவளது வதனத்தை தொட்டதும்  அவளது முகத்தாமரையின் அழகில் ஒரு கணம் மயங்கி நின்று விட்டான் முகமூடி மனிதன்! அப்போது நந்தவனத்தின் பொய்கையிலிருந்து மிதந்து வந்த தென்றல் காற்றோடு பனித்துளிகள் சேர்ந்து சில்லென பொற்கொடியின் வதனத்தை தொட்டுச் சென்றது! அழகிய வருடலில் சட்டென முளித்தவள் எதிரே நீண்ட வாளோடு மர்ம முகமூடி மனிதன் நிற்பதை உணர்ந்ததால் கணமும் தாமதிக்காமல் மஞ்சத்தில் புரண்டு அப்புறமாய் குதித்து அவளது பாதுகாப்புக்கு வைத்திருந்த அழகிய வாளை கையில் ஏந்திக் கொண்டு முகமூடி மனிதனோடு தாக்குதலுக்கு தயாரானாள்! 

      சட்டென நடந்து விட்ட ஏமாற்றத்தில் முகமூடி மனிதன் மஞ்சத்தை தாண்டி உருவிய வாளோடு பொற்கொடி மீது பாய்ந்து விட்டான்! அது வரையில் வெண்ணிலவின் துளித்துளியான புள்ளிக்கோல ஒளிகள் நீண்டு  வளர்ந்து விட்டிருந்தது! வெண்ணிலவின் ஆதிக்கத்தில் அந்த அறை முழுதும் நிரம்பி வழிந்தது! முகமூடி மனிதனின் செயல்களை நன்கு கவனித்துக் கொண்டிருந்த பொற்கொடி அவனது தாக்குதலை அனாயசமாக எதிர்கொண்டாள்! தனது அழகிய வாளைக் நீட்டிக் கொண்டு முகமூடி மனிதனை தாக்கிக் கொண்டிருந்தாள் பொற்கொடி! அடுத்தடுத்து விரைவான தாக்குதலின் ஒலிகளால் அந்த அறை முழுவதும் எதிரொலித்தன! திடீரென பொற்கொடி இருந்த மாளிகையில் வாள் சண்டை அரவம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சோழக் காவல் வீரர்கள் விரைந்து வரத் தொடங்கியதை அவர்களின் பாத குரடுகளின் ஒலியிலிருந்து அறிய முடிந்தது! சட்டென முடிய வேண்டிய நிலவரம் பெரும் கலவரத்தில் போய்க் கொண்டிருப்பதை அறிந்து கொண்ட முகமூடி மனிதன் தன் தாக்குதலின் போக்கை மாற்றிக்கொண்டு விரைந்து வேகமாக பொற்கொடியை தாக்கிக் கொண்டிருந்தான்! அவனது வாளின் சுழற்சிக்கு ஏற்ப பொற்கொடியும் அவனது தாக்குதலை தடுத்து பதில் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தாள்! ஏறக்குறைய அரை நாழிகையை தொட்டிருந்த பொழுது சோழக் காவல் வீரர்கள் அவளின் அறை வாசலில் வந்து விட்டிருந்தார்கள்! 

      அதற்கிடையில் எங்கிருந்தோ எடுத்து வந்திருந்த விளக்கினை கொண்டு அங்கு உள்ள மற்ற விளக்குகளை சோழத்தின் காவல் வீரர்கள் ஏற்றி விட்டிருந்ததால் அவற்றின் வெளிச்சம் எங்கும் வியாபித்து இருந்தது! இப்பொழுது முகமூடி மனிதனை நன்கு பார்க்க முடிந்ததால் பொற்கொடி தனது தாக்குதலை விரைவுபடுத்தி கொண்டிருந்தாள்! சோழ காவல் வீரர்களின் வருகையும் அதனைத் தொடர்ந்து ஏற்றப்பட்ட விளக்குகளின் ஒளியும் பொற்கொடிக்கு அளித்த அதிக உத்வேகத்தையும் கண்ட முகமூடி மனிதன் தாக்குதலை மேலும் நீட்டிக்க விரும்பாமல் அங்கிருந்து தப்பியோடும் மனநிலையில் இருந்தான் போலும்! அவனது விழிகள்  எகிறி குதித்து உள்ளே வந்திருந்த சாளரக் கதவுகளை பார்த்துக் கொண்டிருந்தது! முகமூடி மனிதனின் விழிகள் செல்லும் திசையை கவனித்து விட்டிருந்த பொற்கொடி தனது விழி அசைவால் சோழ காவல் வீரர்களை சாளரத்தை நோக்கி செல்லும்படி செய்திருந்தாள்! அடுத்தடுத்து நடைபெறும் மாற்றங்களை கவனித்து விட்டிருந்த முகமூடி மனிதன் பெரும் ஆவேசத்தோடு பொற்கொடியை தனது வாளால் தாக்க முற்பட்டான்! தனது அழகிய வாளை கொண்டு முகமூடி மனிதனின் தாக்குதலை தடுத்து விட்டிருந்தவள் சண்டையை அதற்கு மேல் வளர்க்க விரும்பாமல் படீர் படீரென அவனது வாளின் மீது தாக்குதலை தொடுத்து விட்டிருந்தாள்! முகமூடி மனிதனின் வாள் எகிரி போய் அந்த அறையின் மூலையில் 'கிளாங் ' சென்ற ஒலியோடு கீழே விழுந்தது தான் தாமதம் பொற்கொடியின் வாள் முகமூடி மனிதனின் கழுத்தினை தடவிக் கொண்டிருந்தது! திடீரென நடந்து விட்ட தாக்குதலால் நீராயுதபாணியாக நின்று கொண்டிருந்த முகமூடி மனிதன் என்ன செய்வதென்று அறியாமல் மழங்க மழங்க முழித்துக் கொண்டு இருந்தான்! 

       வாசலில் நின்று கொண்டிருந்த சோழவீரர்களை தன் விழி அசைவால் வரச் செய்து முகமூடி மனிதனை கைது செய்யும்படி செய்திருந்தாள்! சிறிதும் தாமதிக்காமல் சோழக் காவல் வீரர்கள் முகமூடி மனிதனின் கை கால்களை பிணைத்து கைது செய்திருந்தார்கள்! 

       அதற்கிடையே இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்களை எப்படியோ அறிந்து விட்டிருந்த மாதாண்ட நாயகரும் இளம்வழுதியும் பொற்கொடியின் அறைக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்! 

       திடீரென மாதண்ட நாயகரும் இளம்வழுதியும் அறைக்குள் வந்ததால் அங்கிருந்த சோழக் காவல் வீரர்கள் தலை வணங்கி நகர்ந்து நின்றார்கள்! 

      அறைக்குள் நுழைந்தவுடன் பொற்கொடி பாதுகாப்போடு இருப்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகரின் விழிகள் சோழக் காவல் வீரர்கள் கைது செய்து வைத்திருந்த முகமூடி மனிதனை நோக்கி திரும்பி விட்டிருந்தது! முகமூடி மனிதனை நோக்கி நகர்ந்து விட்டிருந்தார்! அவரைத் தொடர்ந்து இளம்வழுதியும் சென்றிருந்தான்! 

       "அவனது முகத்தில் உள்ள முகமூடியை முதலில் அகற்றுங்கள்" யென பெரும் கோபத்தில் சோழ வீரர்களை பார்த்துக் கூறினார் மாதண்ட நாயகர்! 

      முகமூடி மனிதனின் முகமூடியை சோழ வீரர்கள் அகற்ற முற்பட்ட போது தனது முகத்தை அப்படி இப்படியும் திருப்பி அவர்களை கழட்ட விடாமல் செய்து கொண்டிருந்தான்! சிறிது நேரம் அவனது பிடிவாதம் தொடர்ந்த போதும் சோழ வீரர்களின் தொடரும் முயற்சியின் முன்பாக அவனது செயல் தோற்று விட்டிருந்தது! 

       "இவன் நமது அரண்மனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணி வீரர்களில் ஒருவன் அல்லவா?"என்றார் மாதணட நாயகர்!

      அவனது வசனத்தை கூர்ந்து கவனித்த மற்ற சோழ காவல் வீரர்களில் ஒருவர் "ஆமாம் ஐயா! இவனது பெயர் கதிரவன்! நீண்ட காலமாக நமது அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்! "

      "ஓ கோ! அதனால் தான் நம்மால் இவனை சந்தேகிக்க முடியவில்லை போலும்!" என்றார் மாதாண்ட நாயகர்! 

      "எனக்கு இப்பொழுது தான் ஞாபகம் வருகிறது! இவன் மற்ற இடங்களுக்கு பணி அமர்த்தினாலும் வேண்டுமென்றே அரண்மனை காவல் பணியை கேட்டு வாங்கிக் கொள்வான்! அதன் ரகசியம் என்னவென்று இப்பொழுதுதான் புரிகிறது! தொடர்ந்து இங்கு உள்ள நிலவரத்தை கண்காணிப்பதற்காக வேண்டுமென்றே பணியை கேட்டு வாங்கி உள்ளான் போலும்!"என்றார் மற்றொரு சோழக் காவல் வீரர்!

      சோழக் காவல் வீரர்களின் பதில்களைக் கேட்ட கதிரவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!

     அகப்பட்டுக் கொண்டதோடு முகத்தில் பெரும் வஞ்சகத்தின் எண்ணங்களை ஓட்டியபடி நின்று கொண்டிருக்கும் அவனைக் கூர்ந்து கவனித்த இளம்வழுதி "இதுவரையில் நம்மிடம் சதிகாரர்கள் பெரிதாக  உயிருடன் சிக்கிக் கொண்டதில்லை! ஆனால் நான் கங்கைகொண்ட சோழபுரம் வரும்போது காட்டுப் பகுதியில் சிக்கியவர்களுக்கு பின்பு இப்போதுதான் அரண்மனைக்கு உள்ளே அகப்பட்டுக் கொண்டதை பார்க்கிறேன்!"என்றான்! 

      "அங்கு தொட்டு இங்கு தொட்டு கடைசியில் தலை நகரத்தில் நுழைந்தவர்கள் இப்பொழுது அரண்மனைக்குள்ளும் புகுந்து விட்டார்கள்! இன்னும் எத்தனை பேர் இந்த அரண்மனைக்குள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்களோ எனத் தெரியவில்லை!" என்றார் மாதண்ட நாயகர்! 

      மாதண்ட நாயகரின் பேச்சைக் கேட்டதும் அகப்பட்டுக் கொண்ட முகமூடி மனிதனான கதிரவன் பெரும் குரலெடுத்து ஆணவமாக சிரிக்கத் தொடங்கி விட்டான்! அவனது நிலைப்பாடு அங்குள்ள அனைவரையும் பெரும் யோசனையில் தள்ளிவிட்டது! 

(தொடரும்.... அத்தியாயம் 90 ல்)


Saturday, 8 March 2025

தடைகளை தகர்த்து சரித்திரம் படைத்திடு யாழிசை செல்வா

தடைகளை தகர்த்து சரித்திரம் படைத்திடு 

=======================================


ஆதியில் தொடக்கம் அணுவும் குறையவில்லை//01

அன்னை என்னும் அன்பு மரம் //02

தங்கை தூங்க இனிய தாலாட்டு//03

தாங்கிக் கொள்ள ஏங்கும் தமையன்//04

இல்லம் ஏந்திக் கொள்ளும் குலவிளக்கு//05

சுவையோடு படைக்கும் அட்சய பாத்திரம்//06

இறுகக் கட்டிக் கொள்ளும் மனைவி//07

இன்னும் முடிவு பெறாத போராட்டம்//08

தூரத்து இடி முழக்கமாய் எழுந்திடு//09

தடைகளை தகர்த்து சரித்திரம் படைத்திடு//10


கவிஞர் யாழிசைசெல்வா 

08/03/2025

கவிதை சாரல் சங்கமம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை




பெண்ணினம் காப்பது பெருமையன்றோ யாழிசை செல்வம்

பெண்ணினம் காப்பது பெருமையன்றோ

=========================================

அழகு நடனத்தின் அன்புச் சிகரம்//01

புன்னகை பொழியும் பூங்கா வனம்//02

இல்லத்தின் எழுச்சியாய் விளங்கும் குலவிளக்கு//03

வண்ணத்தின் காவியச் சருகுகள் பெண்கள்//04

இன்னும் எழுதித் தீராத பொய்கள்//05

ஆதியின் நெருப்பைக் கையில் பிடித்து//06

அத்தனையும் தகர்க்கும் சிந்தனை சிகரமான//07

பெண்ணினம் காப்பது பெருமையன்றோ....?//08

கவிஞர் யாழிசை செல்வா 

08/03/2025

கவிதை சாரல் சங்கமம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை




விழுதுகள் யாழிசை செல்வா

விழுதுகள் 

===========

எழுதித் தீராத பக்கத்தின் துடிப்பு//01

அன்பு மொழியின் அழகு நடனம்//02

அற்றைத் திங்களின் அரும் தவம்//03

கிளை பரப்பிக் கொண்டாடும் விழுதுகள்//04

கவிஞர் யாழிசைசெல்வா 

08/03/025


கவிதை ஸ்வர்ணங்கள் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை


மீட்டாத வீணையொன்று யாழிசை. செல்வா

மீட்டாத வீணையொன்று

========================

கனவுகளை கடத்திச் 

சென்று கலி நடனம் புரிகிறாய் //

இன்னும் பேசாத மொழிகளை 

இதயத்தில் எழுதிச் செல்கிறாய்//

கற்றைக் குழலின்

நீளம் அறிய  

காற்றிடம் தூது அனுப்பினாய்///

அந்தி வானின் 

ஆர்ப்பரிக்கும் அழகை மறைக்கும் 

வானவில் நீ என்றாய்//

இன்னும் எழுதாத ஓவியத்தின் 

ஏடு அறியாத காவியத்தில் முகிழ்ந்த

இதழ் பிரிக்காத மோகப் புதையல் //

உன் விழிக் கனவின் 

ராகங்களைத் தேடும் 

மீட்டாத வீணையொன்று பூத்திருக்கிறது

உன் வரவிற்காக......!//

கவிஞர் யாழிசைசெல்வா 

08/03/2025


கவிதைச் சாரணம் வண்ணக் கொடியும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை இது


எங்கள் நாட்டின் கண்கள் யாழிசை செல்வா

 பெண்கள் நாட்டின் கண்கள் 

=========================

இருளின் கரைகளை சூடிக் கொண்டு //01


வார்த்தை என்னும் வலையில் சிக்கும் //02


காத்திரமான கதைகளில் கவிழ்ந்து போகும் //03


மாயைகளில் மறைந்து போகும் மலர்கள் /04


இன்னும் எத்தனையோ பொய்களைக் கூறி //05


பெண்கள் நாட்டின் கண்களை மறைத்தனர்!/06


கவிஞர் யாழிசைசெல்வா 


08/03/2025

அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை



வியப்பு யாழிசை செல்வா

 வியப்பு 

=======

இளம் விழிகளின் இன்ப நடனம்! 


கவிஞர் யாழிசைசெல்வா 

08/03/2025


அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை


மறக்குமா நெஞ்சம் யாழிசை செல்வா

 மறக்குமா நெஞ்சம் 

===================

காற்றின் தூதஞ்சலில்

கவிதை செய்தாய்! //01

செல்லச் சினுங்களை 

வண்ணக்கிளியிடம் மொழிந்தாய்/02

அங்குமிங்கும் அலையும் 

கெண்டை மீனின் விழிகளில்

கொஞ்சிப் பேசி கோலமிட்டாய்!//03

இன்னும் பிறக்காத 

பிறந்த நாளிற்காய்

தினமும் பூத்திருக்கிறாய்!//04

என்றோ சொன்ன பொய்களுக்கு 

வீணை இசைக்கிறாய்//05

நாதத்தின் நரம்புகளை 

மொழிபெயர்க்கும் மோகனம் நீ//06

யாரும் அறியாத 

மௌனத்தில்  நிழலில்

மின்னல் வெட்டாய் கண்ணசைத்து 

இதயத்தில் சூடிக்கொண்ட காரிகை நீ//07

வரையப்படாத ஓவியத்தின் 

தூரிகை கொண்டு

எழுதப்படாத காவியத்தின் 

மொழிகளைப் பேசும்

என் தேசத்தின் இதய ராணியை 

மறக்குமா நெஞ்சம்.....!//08

கவிஞர் யாழிசைசெல்வா 

08/03/2025


ஆனந்த அருவி கவிதை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை



சிறையினைத் தகர்த்திடு சிறகுகள் விரித்திடு யாழிசை செல்வா

சிறையினை தகர்த்திடு சிறகுகள் விரித்திடு 

=========≠=================================

காலம் கிழித்த  கருப்பு சட்டங்கள்//01

விதி என்னும் மதி செய்யும்//02

அநீதியின் ஆடம்பரக் கொழு மண்டபம்//03

வீணைகளின் நரம்பு அறுத்த வீணர்கள்//04

காற்றின் சிறகினை முறித்த கயவர்கள்//05

வேதனைத் தழும்புகளை அஞ்சல் செய்யும்//06

வீட்டின் முகவரி தொலைத்த மூடர்கள்//07

வானின் நீளங்களை அளந்து பார்க்க//08

மண்ணின் தாரகை எழுந்து விட்டாய்//09

சிறையினை தகர்த்திடு சிறகுகள் விரித்திடு//10


கவிஞர் யாழிசைசெல்வா 

08/03/2025  

குயில்களின் கூடாரம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை



மௌனத்திற்கு விடுமுறை விட்டு மலர்ந்திட


இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 88

🌾88. மாளிகை மேடு!🌾

      கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனை! இருளேதெரியாத அளவிற்கு ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த பெரும் விளக்குகளின் ஒளியில் மிதந்து கொண்டிருந்தது! சோழத்தின் காவல் வீரர்கள் அங்குமிங்கும் கைகளில் வேல்களைத் தாங்கிக் கொண்டு உலவிக் கொண்டிருந்தார்கள்!

      அப்போது பரபரப்புடன் இரண்டு குதிரைகள் அரண்மனை வாயிலைக் கடந்து உள்ளே வந்து கொண்டிருந்தன! அதன் மேல் வீற்றிருந்த இரண்டு மங்கையரின் வதனத்தில் அத்தனை பொலிவு இல்லை! வெறுப்பின் எல்லை வரை நீண்டு கிடந்தது! அரண்மனை வந்தடைந்ததும் தங்களது குதிரைகளை அப்படியே விட்டுவிட்டு மாளிகைக்குள் நகர்ந்து விட்டிருந்தார்கள்! காவல் வீரர்கள் அவர்களது குதிரைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி கொட்டடிக்கு கொண்டு சென்றார்கள்! 

      பூமியை அதிரும் வண்ணம் நடந்து கொண்டிருந்த நங்கையர்கள் இருவரையும் "ஏன் இத்தனை கோபம்? என்றும் இல்லாமல் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்ன? கோபம் என் பொருட்டா? அல்லது வேறு எங்கும் தொடங்கி இங்கு முற்றுப் பெறப் போகிறதா?"எனக் கேட்டபடி மாளிகையின் கதவினை திறந்து கொண்டு வெளியே வந்தார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!

      மாதண்ட நாயகரை கண்டதும் பொற்கொடியின் விழிகள் அக்கினி பிளம்பாய் மாறின! அப்படியே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு நின்றாள்! 

     "ஏன் தங்காய்? எரிமலையாய்  எரிந்து கொண்டு நிற்கிறாய்? அப்படி என்ன நடந்தது, சொன்னால் தானே தெரியும்?" 

    "இந்த தேசத்தில் இன்னும் என்ன நடக்க வேண்டும்? இங்குதான் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லையே! அப்படி இருக்கும் பொழுது நான் எதைக் குறிப்பிடுவது? அதனால் ஆகப்போகுது தான் என்ன? மீண்டும் மீண்டும் பழைய பல்லவியைத்தான் பாடப் போகிறீர்கள்! அதைக் கேட்டு சகித்துக் கொள்ளும் தன்மையை நான் எப்போதோ கடந்துவிட்டேன்! "என எரிமலையின் அக்கினியை அவர் மீது அள்ளி வீசினாள் பொற்கொடி! 

     "நானும் தொடர்ந்து கேட்டு வருகிறேன்! நீயோ எந்தவிதமான பதிலையும் கூறாமல், ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டிருக்கிறாய்! நிலவரம் என்னவென்று விளக்கமாக கூறினால் தானே, அடுத்து ஆக வேண்டியதை பார்க்க முடியும்! அதை விடுத்து நீ இவ்வாறு பேசிக் கொண்டிருந்தால் ஆகப் போவது என்ன? கோபத்தை கைவிட்டு நடந்ததை கூறு?"

    "நடந்ததை கூறுவதால் என்ன ஆகிவிடப் போகிறது? அதனால்தான் இம்முறை நானே தீர்ப்பை எழுதி விட்டேன்! விளைவுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!"

      "என்ன கூற முற்படுகிறாய்? சற்று விளக்கமாகத்தான் கூறு? "

     "இந்நேரம் உங்கள் ஒற்றர்கள் அத்தனை நிகழ்வுகளையும் உங்களிடத்தில் ஒப்பிட்டு இருப்பார்களே! அவர்களிடத்திலே கேட்டு தெரிந்து கொள்ளலாமே! புதிதாக என்னிடத்தில் என்ன தெரிந்து கொள்ள போகிறீர்கள்?"

     "அவர்கள் பட்டும் படாமலும் கூறினார்கள்! நடந்தது என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்வதற்காக தான் கேட்கிறேன்!"

     "ஆகா! எத்தனை அற்புதமான நடிப்பு! நீங்கள் கூறும் வார்த்தைகளை நான் நம்புவதற்கு ஒன்று பச்சைக் குழந்தை அல்ல! உங்கள் கைவரிசையை வேறு யாரிடமாவது காட்டிக் கொள்ளுங்கள்! அதற்கு ஏற்ற ஆள் நானில்லை! எனக்கு வரும் கோபத்திற்கு இந்த மாளிகையே தூள் தூளாக நொறுக்க வேண்டும் போல் உள்ளது!"எனக்கோபத்தில் வெடித்தாள் பொற்கொடி! 

     "நீதான்! சதிகாரர்களுக்கு சரியான தண்டனையை கொடுத்து விட்டாயே! பிறகு எதற்காக என் மீது கோபத்தை வாரி இறைக்கிறாய்? நான் அங்கு வந்திருந்தாலும் நீ செய்த முடிவைத்தான் எடுத்திருப்பேன்! பின் எதற்காக என்மீது கோபித்துக் கொள்கிறாய்? நமது தேசத்தில் பெண்கள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு நீயே மிகச்சிறந்த பதிலை கொடுத்து விட்டாய்! அதனை எண்ணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! உனக்கு கற்றுக் கொடுத்த வாள் பயிற்சியும் வேல் பயிற்சியும் வீணாகப் போய்விடவில்லை! தக்க நேரத்தில் உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள அது பயன்பட்டது!"

      "நன்றாகத்தான் பேசுகிறீர்கள்! எனது இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் அவர்களது கதிதான் என்ன? அப்போதும் இதே கதையைத்தான் கூறுவீர்களா? அதனால் ஆகப்போவது என்ன? சதிகாரர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக அல்லவா போய்விடும்! இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவர்களின் ஆட்டத்தை பொறுத்துக் கொள்வது! அங்கு தொட்டு இங்கு தொட்டு கடைசியில் தலைநகரத்திலே கை வைத்து விட்டார்கள்! அவர்களுக்கு உள்ள துணிச்சல் அதிகரித்துக் கொண்டே உள்ளது! இதற்கு ஒரு தீர்வே கிடையாதா? இப்படி இருந்தால் தேசம் எப்படி உருப்படும்? அதிலும் மாதாண்ட நாயகரின் தங்கையின் மீது கை வைக்க எண்ணுமளவிற்கு இந்த தேசத்தில் சதிகாரர்களின் துணிச்சல் பெருத்து விட்டது! அவை குறித்து உங்களுக்கு வெட்கமாக இல்லை! எனக்கு நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் கொதிக்கிறது!"

      "நீ கூறுவது அத்தனையும் சத்தியமான வார்த்தைதான்! சதிகாரர்களுக்கு முடிவரை சீக்கிரம் எழுதப்பட்டு விடும்! அவர்கள் எண்ணம் அடியோடு அழிக்கப்படும்! அவை குறித்து தான் நாளை மந்திர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது! அங்கு இதற்கான தீர்வு முற்றிலும் எழுதப்பட்டு விடும்! அதனால் வருத்தம் கொள்ளாதே! நீ போய் ஓய்வெடு! மிகுந்த களைப்பில் உள்ளாய்! "

      "என் மீதான தங்கள் அக்கரைக்கு நன்றி!"எனக் கூறியபடி தனது அறையை நோக்கி விடு விடு வென சென்றாள் பொற்கொடி! அவளைத் தொடர்ந்து அல்லியும் எதுவும் பேசிக் கொள்ளாமல் பின் தொடர்ந்தாள்!

       "தங்களின் தங்கை மிகுந்த கோபத்தில் உள்ளார்?"

     "நீ எப்பொழுது வந்தாய்?" என தன் பின்னால் இருந்த இளம்வழுதியை பார்த்துக் கேட்டார் மாதண்ட நாயகர்! 

    "தங்களது தங்கையார் உங்கள் இடத்தில் உரையாடும் போது தான் வந்தேன்! நீங்கள் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்ததால் இடையூறு செய்ய வேண்டாம் என்று ஒதுங்கி நின்று கொண்டேன்!"

     "பார்த்தாயா? இப்படி எல்லாம் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்  சோழகுல வல்லிப் பட்டினத்திற்கு உன்னை அனுப்பி வைத்தேன்?   இப்போது சதிகாரர்களின் சதிராட்டம் எங்கு வந்து நிற்கிறது எனப் பார்! இதற்கு என்ன சொல்லப் போகிறாய்?" இளம்வழுதியின் விழியைப் பார்த்துக் கொண்டே கேட்டார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான்!

      இளம் வழுதி எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்!

     "இப்படி மௌனமாக இருப்பதால் என்ன சாதிக்க நினைக்கிறாய்?"

      கோடியக்கரை மூர்க்கனும் அவனது கூட்டாளிகளும் இதுவரை செய்தது குறித்தும் அவர்களது சதிச்செயலை   கண்டறிந்து களைந்தது குறித்தும் விரிவாக அவரிடம் எடுத்துக் கூறினான்!

      "நீ கூறுவதை பார்க்கும் பொழுது இப்பொழுதுதான் சிறிது மூச்சு விட தோன்றுகிறது! ஒரு வழியாக பெரும் கூட்டத்தை அழித்து விட்டாய்! இருப்பினும் அவர்களோடு இது முடிவதாக தெரியவில்லை! அதனால்தான் பார்த்தாயா? தலைநகரில் என் தங்கை மீது தாக்குதலை தொடுத்துள்ளார்கள்! இதிலிருந்து தெரிவது என்ன? அவர்கள் இன்னும் முற்றிலுமாக அழிக்க படவில்லை! அவை என்று நிறைவேறுகிறதோ அன்றுதான் சோழத்தின் உண்மையான விடியல் பிறக்கும்! அதுவரையில் நாம் கண்ணும் கருத்துமாக தான் செயலாற்ற வேண்டும்!"

      "தாங்கள் கூறியபடியே செய்து விடலாம் ஐயா! கோடியக்கரைக்கு வரவிருக்கும் சதிகாரர்களை முறியடிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்! அது குறித்து தங்களிடம் கலந்துரையாட எண்ணியே இங்கு வந்தேன்! தாங்கள் உத்தரவு கொடுத்தால் நான் புறப்படுகிறேன்! எனது வரவை எண்ணி அழகன் கோடியக்கரையில் காத்திருப்பான்! நான் விரைந்து செல்ல வேண்டும்! நமக்கு அதிக நாட்கள் இல்லை!"

     "நீ கூறுவது எனக்கு நன்கு புரிகிறது! இருப்பினும் இதுகுறித்து மன்னரிடமும் விரிவாக எடுத்துக் கூற வேண்டும்! அவரது எண்ணம் என்னவென்று நாம் அறிந்து கொள்வது நன்மை பயக்கும்! இன்று இரவு ஒரு நாள் தங்கி நாளை நடைபெறும் மந்திர ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு அதன் பின் நீ என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளலாம்! அதுவரையில் உனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் சென்று ஓய்வெடு! நாளை மந்திராலோசனை கூட்டத்தில் சந்திப்போம்!"

      "திடீரென மந்திர ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கான காரணம் என்ன ஐயா?"

      "இது என்ன கேள்வி? நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு அசம்பாவிதங்களால் தேச முழுவதும் பெரும் கொந்தளிப்பு நிலவிக் கொண்டிருக்கிறது! குறுநில மன்னர்களும் அமைச்சர் பெருமக்களும் மிகுந்த அதிருப்தியில் உள்ளார்கள்! அவர்களது எண்ணங்கள் யாதென தெரியாது! ஆனால் கண்டிப்பாக தேசத்திற்கு நன்மை பயக்கும் காரியங்களை செய்வதற்காக இருக்காது என அறிவேன்! ஒவ்வொருத்தரும் பலவாறாக எண்ணிக் கொண்டு உள்ளார்கள்! அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! மன்னரும் அதைத்தான் விரும்புகிறார்! தொடர்ந்து இதனை வளர்த்துக் கொண்டு இருப்பதில் யாருக்கும் நன்மை பயக்காது! முடிந்த வரையில் நடப்பதையும் நடக்க வேண்டியதையும் தீர்மானித்து விட வேண்டியது தான்! அதன்பின் எது வந்தாலும் எதிர் கொண்டு விட வேண்டியது தான்! அதற்கான ஆயத்தத்தில் நாம் இருக்க வேண்டும்!"

     "நல்லது ஐயா! அப்படியானால் நாளை சந்திப்போம்"என மாதண்ட நாயகரடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தனது அறையை நோக்கி நகர்ந்து விட்டிருந்தான் இளம்வழுதி!

         இருளின் கிளை மீண்டும் பரவியிருந்த இரவு பொழுதின் அமைதியை கிழித்துக்கொண்டு தூரத்தில் எங்கோ அலறிக் கொண்டிருந்தது ஒரு ஆந்தை! 

       திடீரென கேட்ட ஆந்தையின் அலறலால் பக்கத்து மரத்திலிருந்து பறவைகள் சிறகை படபட வென அடித்துக் கொண்டு அந்த நள்ளிரவில் அமைதியான மற்றொரு மரத்தை நாடிச் சென்று கொண்டிருந்தது! 

      இரவு காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சோழத்தின் காவல் இரவாடிகளான காவலர்கள் இருவர் இருவராய் சேர்ந்து கொண்டு கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்! ஒளிர்ந்து கொண்டிருந்த வெண்ணிலவும் தண்னொழியை பூமியின் மீது ஊற்றிக் கொண்டிருந்தது! ‌

      மாளிகை மேட்டில் அமைந்திருந்த சோழர்களின் அரண்மனை, அவற்றின் உய்யாவனம் என பல அடுக்குகளாய் கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது! மன்னர்கள் தனது ராணிகளுக்கென தனித்தனி அரண்மனையை உருவாக்கி வைத்திருந்தார்கள்! அவை மட்டுமின்றி அவர்களது பேரமைச்சர்களும் முக்கிய அதிகாரிகளும் மாதண்ட நாயகர்களும் வசிப்பதற்கான தனித்த அரண்மனைகளும் அங்கு இருந்தன! 

     அத்தகைய சிறப்பு வாய்ந்த மாதணட நாயகரின் அரண்மனையின் சுற்றுச்சுவரைத் தாண்டி முகமூடி அணிந்த ஒரு உருவம் உள்ளே குதித்துக் கொண்டிருந்தது! 
(தொடரும்..... அத்தியாயம் 89 ல்)