Saturday, 25 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 29

  🐾இராஜ மோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம்  29 🌾 நெல்லு கடை வீதி    🌾

      சாளுக்கிய இளவரசி மதிமோகினியிடம் விடைபெற்றுக்கொண்டு  நாகை வணிக வீதியில் தனது புரவியுடன் அல்லங்காடிகளை பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு வழியாக நெல்லுக்கடை வீதிக்கு வந்திருந்தான் இளம்வழுதி. 

    கயவர்கள் செய்த கொடூரமான காரியத்தினால் நெல்லுக்கடை முழுவதும் எரிந்து சாம்பலாயிருந்தது. நெல்லுக்கடைக்கு தீ வைத்த சம்பவம் முடிந்து பல திங்கள் கடந்து விட்டிருந்தும் அதனை சரி செய்யாமல் அப்படியே விட்டிருந்தனர்.‌ அங்கு நடந்த கொடூரம் அவர்கள் நெஞ்சில் பெரும் ரணத்தைக் கொடுத்திருந்தது. அதனால் அவை அப்படியே கிடந்தன. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மூட்டைகள் கருகி விட்டிருந்தன. அத்தனையும் தஞ்சை பூமியில் விளைந்தவை. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வயிற்றுக்கு உணவாக வேண்டிய தானியம் வீணாகப் போயிருந்தது. சுதையும் கல்லும் வைத்து கட்டப்பட்டிருந்தது அங்காடி. அதன் மேல் கூரை மட்டும் மூங்கில் கழிகளாலும் தென்னை ஓலையாலும் வேயப்பட்டிருந்ததாலும் எளிதாக தீப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். நீண்ட வரிசையில் அமைந்திருந்த அங்காடிகளின் அமைப்பும் தீ பரவுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இந்தக் கடையை நம்பி இருந்த எத்தனையோ குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாய் போனது. எப்படித்தான் இவர்களால் கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி நடந்து கொள்ள முடிகின்றதோ? என பலவாறாக யோசித்தபடி ஒவ்வொரு அங்காடிகளையும் பார்த்துக் கொண்டிருந்த இளம்வழுதியின் எண்ணங்களில் இவ்வாறு ஓடிக்கொண்டிருந்தது. 

      கொழுந்துவிட்டு எரிந்திருந்த தீயினால் அங்காடிகளை தாங்கிக் கொண்டிருந்த பெரும் உத்திரங்கள் எரிந்து சாம்பலாயிருந்தன. அவற்றின் அருகே பாதி வெந்தும் பாதி வேகாததுமான மூங்கில் கலிகளின் எரிந்த பக்கம் சாம்பலாகவும்   எரியாதவை கூர்மையாகவும்  நீட்டிக்கிடந்தன. ஆங்காங்கே குவியல் குவியல்களாக வெந்து போன நெல் மூட்டையின் சாம்பல்  கிடந்தன. ஒரு சில மூட்டைகள் பாதி வெந்தும்,  வேகாமல் கிடந்த மூட்டையின் நெல்மணிகள் சிதறிப்போய் கிடந்தன. எரிந்தும் எரியாமலும் கடந்த கலவையான நெல் மணிகளிருந்து தீய்ந்து போன வாடை,  இரவின் வாடைக்காற்றால் அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்து உள்ளே நுழைய விடாமல் செய்து கொண்டிருந்தது. அந்த நாற்றத்தையும் தாண்டியபடி அங்காடிகளின் வணிகர்கள் தங்கள் உதவியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த அனைவரும் நாற்றத்தை சகிக்க முடியாமல் மூக்கில் மேல் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டு பணி செய்து வந்தார்கள். 

     நெல்லுக்கடையில் நுழைந்த போதே இதனை கவனித்திருந்தான் இளம்வழுதி. வேறு வழியின்றி அவனும் அவர்களை பின்பற்றி மூக்கில் துணிய கட்டி இருந்தான். அங்காடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களை கடந்து சென்றவன் ஒவ்வொரு அங்காடியாக நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். 
      அன்னமழகி, குள்ளங்கார், குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார்,வாடன் சம்பா, மடு முழுங்கி, களர் சம்பா, நவரை, குழிவெடிச்சான் , செந்நெல், கானாடு காத்தான், யானைக்கவுணி என நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகளைக் கொண்ட நெல் ரகங்கள் அங்கு அழிந்துபோயிருந்தன. 

      அங்காடியின் வணிகர் ஒருவர் தேம்பித் தேம்பி குழந்தை போல் எரிந்து போய் கிடந்த நெல்மணிகளை அள்ளி கையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். அவரது கதறலால் ஈர்க்கப்பட்ட பிற வணிகர்களும் அவரது பணியாளர்களும் அவர் அருகே வந்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்கள். 

     "அத்தனையும் வீணாக போய்விட்டது. இனி என்ன செய்வேன். " பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறி கதறி அழுது கொண்டிருந்தார் பச்சை வண்ண துண்டை தலையில் கட்டி இருந்த வணிகர். 

     "ஒவ்வொரு ரக நெல்லையும் பார்த்து பார்த்து குழந்தை போல் பாதுகாப்பாய் கொண்டு வந்து இங்கு சேர்த்து இருந்தேன். இதை பார்க்கும் போதெல்லாம் கருகிப் போய் கிடக்கும்  இந்த நெல்மணிகள் முன்னால் வந்து விடுகிறது . அதனால் பசித்தும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கிறேன்' என்றார் அங்கிருந்து வணிகரில் ஒருவர்.

    "நான் வாங்கி சேர்த்து வைத்திருந்த அன்னமழகி, குள்ளங்கார், குடவாழை, காட்டுயானம் ஆகிய நெல் வகைகளை உற்பத்தி செய்த விவசாயிகள் ஒருவருக்கு கூட இன்னும் நாணயங்கள் கொடுக்கவில்லை. அவர்களுக்கு நான் தருவதாக சொன்ன அந்த நாளும் கடந்து விட்டது. இதனை உற்பத்தி செய்த விவசாயிகளில் ஒருவன் நான் உரிய நேரத்தில் நாணயங்கள் கொடுத்தால் மட்டுமே அவனது ஒரே மகளின் கல்யாணம் நடக்கும் என்று கூறியிருந்தான். அவனது மகளின் கல்யாணத்திற்கு செய்ய வேண்டிய சீர்வரிசை, உணவுப் பதார்த்தங்கள், வண்ண வண்ண ஆடைகள், கல்யாணத்தன்று வாசிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த கெட்டிமேளகாரர்கள், அன்று நடைபெறும் சாமக்கூத்திற்கான முன்பணம் இவையெல்லாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் நான் தரும் நாணயங்கள் மட்டுமே அவனுக்கு உதவும் என்று  என்னிடம் அத்தனை தெளிவாக கூறிச் சென்றிருந்தான். அந்த விவசாயின் மகள் திருமணம் நடந்ததோ என்னவோ நடந்த விபரீதத்தில் நான் மறந்து விட்டேன். பாவம் வந்து விவசாயி என்னவானானோ? இறைவா எங்களை ஏன் இவ்வாறு சோதிக்கிறாய்? இத்தனை அநீதிகளையும் செய்த மூடர்களை தண்டிக்காமல் ஏன் தாமதிக்கிறாய்? இதுதான் நீ வழங்கும் நீதியா? நான் எவ்வாறு அந்த விவசாயிக்கு உரிய நாணயங்களை கொடுப்பேன்? என்னிடம் தான் ஏதும் இல்லையே! இருப்பது அனைத்தும் இழந்து விட்டு நிர்க்கதியாய் உள்ளேனே! ஆண்டவா! இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்?" தனது இரு கைகளையும் மேலே உயர்த்தி வேண்டிக் கொண்டிருந்தார் மற்றொரு அங்காடி வணிகர். 

      "இந்த அநீதி நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இதுவரை அதற்கான நியாயம் எதுவும் கிடைக்கவில்லை. சோழ தேசத்தில் என்னதான் நடக்கிறது?" என்றார் மற்றொரு வணிகர்.

     "இங்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்கப் போய் தான். பாடி காவல் அதிகாரி இளமாறன் இராஜராஜர் ஆதுர சாலையில் குற்றுயிரும் குறையுமாய் இப்போதோ அப்போதோ என்று தெரியாமல் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்" என அங்கிருந்த வணிகர்களில் குட்டையாக இருந்த ஒருவர் கூறினார். 

     "எல்லாம் சரி! ஒரு அதிகாரி போனால் மற்றொரு அதிகாரி வந்து விடுவார். ஆனால் நமது நிலவரம் என்ன? நம்மை யார் வந்து காப்பாற்றுவார்?" அங்கிருந்த வணிகர்களில் உயரமாய் இருந்தவர் கூறினார். 

     "இத்தனை நடந்தும், சூரிய வர்மர் ஏன் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? வணிகர்களை பாதுகாப்பதும் அவரது கடமைதானே. நாமெல்லாம் அவரை நம்பி தானே உள்ளோம்" என்றார் குட்டையாக இருந்த வணிகர். 

    "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை போலும். சூரிய வர்மரை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. அவரது மாளிகையில் யார் யாரோ வந்து போகிறார்கள். மேலும் அவர் எங்கு சென்றார் என யாருக்கும் தெரியவில்லை. அவரது மறைவே ஒரு மர்மமாக உள்ளது." என்றார் மற்றொரு வணிகர். 

    " இதையெல்லாம் சரி செய்வதற்கும், நம்மை பாதுகாப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்து உள்ளார்களா இல்லையா?" என்றார் அவர்களில் உயரமான வணிகர்.

    "சமீபத்தில் தான் குடும்ப வாரியங்களின் கூட்டம் நடந்துள்ளது. அக்கூட்டத்தின் முடிவில் புதிய பாடி காவல் அதிகாரி ஒருவர் பொறுப்பேற்று உள்ளதாக அறிகிறேன்" என்றார் குட்டையாக இருந்த வணிகர். 

     "அப்படியா! யார் அவர்? யாரேனும் அவரை பார்த்து உள்ளீர்களா? நமது துயரம் குறித்து அவரிடம் கூறினீர்களா?" என்றார் உயரமான வணிகர். 

    "இதுவரை அவரை பார்த்ததில்லை. அவரைப் பற்றி யாருக்கேனும் தெரியுமா?"

    "நான் அறிந்த வரையில் அவர் ஏற்கனவே காயம் பட்டு ஆதர சாலையில் உள்ள பாடிகாவல் அதிகாரி இளமாறனின் தம்பி எனவும் அவரது பெயர் இளம்வழுதி எனவும் தெரிகிறது" என்றார் குட்டையான வணிகர். 

     "ஓ அப்படியா! இவரேனும் நமது குறைகளை தீர்த்து வைப்பாரா? அல்லது முந்தைய அதிகாரி போல் காணாமல் போய்விடுவாரா?" என்றார் உயரமானவணிகர்.

     "ஏனையா இப்படி கூறுகிறீர்கள்? இப்பொழுது புதிதாக வந்திருப்பவர் சோழ தேசத்தின் உப தளபதி பதவி வகிப்பவர் என அறிகிறேன். அத்தனை பெரிய பொறுப்பில் உள்ளவர் கண்டிப்பாக வல்லவராகத் தான் இருப்பார். நமக்கும் நீதி கிடைக்கும் என நம்புவோம்" என்றார் இன்னொரு வணிகர். 

    அங்காடிகள் ஒவ்வொன்றையும் பார்வையிட்டுக் கொண்டிருந்த இளம்வழுதி வணிகர்கள் கூடி நின்று பேசுவதை பார்த்தவன் அவர்களை நோக்கி வந்த போது தான் மேற்கண்ட உரையாடல் கேட்க நேர்ந்தது."வணிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் புதிய பாடிகாவல் அதிகாரி. தாங்கள் இத்தனை நேரம் கூறிய அனைத்தையும் கேட்டேன். வருத்தம் அடைய வேண்டாம். தங்களது இழப்பிற்கு உரிய இழப்பீடு  வேண்டி  அமைச்சர் பெருமக்களுக்கு உடனே செய்தி அனுப்புகிறேன். அதுமட்டுமின்றி இதற்கு காரணமான அத்தனை பேரும் உரிய தண்டனை பெறுவார்கள். அது எனது கடமை. நம்பிக்கையோடு இருங்கள் "என்றான் இளம்வழுதி. 

     "இப்பொழுதுதான் எங்களுக்கு போன உயிர் திரும்ப வந்தது. இத்தனை காலமாக என்ன செய்வது என்று தெரியாமல் ஏங்கிக் கிடந்த எங்களுக்கு, நல்லதொரு வழியை காட்டி உள்ளீர்கள். தங்களுக்கு மிக்க நன்றி" வணிகப் பெருமக்கள் அனைவரும் கரம் குவித்து தங்கள் நன்றியை தெரிவித்தார்கள். 

    "வணிகர்கள் தாங்கள் அனைவரும் தங்களது அங்காடியில் எத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளது . அவற்றின் மதிப்பு எவ்வளவு? இவை குறித்த விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு என்னிடம் தாருங்கள். நான் தங்களுக்கு வேண்டிய இழப்பீடு பெற்றுத் தருகிறேன்"

     "நல்லது ஐயா. எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை விரைவாக உங்களிடம் அந்த விவரங்களை கொண்டு வந்து சேர்ப்பது எனது கடமை " என்றார் அவர்களில் உயரமான வணிகர். 

    "தங்களது அங்காடிகளில் சந்தேகப்படும்படியான ஏதேனும் கிடைத்துள்ளதா? அல்லது இனிமேல் ஏதேனும் அப்படி கிடைத்தால் எனக்குத் தகவல் தாருங்கள்"

    "நான் அறிந்த வரையில் இதுவரை ஏதுமில்லை"என்றார் குட்டையான வணிகர். 

     "எனது அங்காடியில் குவியலாகக் கடந்த சாம்பலை கூட்டி அள்ளும்போது அங்கு தற்போது புழக்கத்தில் இல்லாத சோழநாராயணன் நாணயங்கள் சில கிடைத்தன." என்றார் அவர்களில் வயதான வணிகர். 

     "தங்களது அங்காடி எங்கே உள்ளது ஐயா"

    "நெல்லுக்கடை வீதியில் முகப்பு பகுதியில் உள்ள கடை தான் என்னுடையது"

    "அப்படியெனில், அங்கிருந்து தான் முதலில் நெருப்பு வைத்திருக்க வேண்டும். " என்றவன் தொடர்ந்து" தாங்கள் அந்த காசினை என்ன செய்தீர்கள்?"

     "அவை என்னிடம் உள்ளன ஐயா?"

     "அதனை என்னிடம் தர இயலுமா?"

     "பயன்பாட்டில் இல்லாத நாணயம் என்பதால் அதனை எனது இடையில் உள்ள பையில் பாதுகாப்பாக வைத்துள்ளேன்." என்றவர் தனது இடையில் உள்ள பையில் இருந்து சோழ நாராயணன் நாணயங்களை எடுத்து இளம்வழுதியிடம் கொடுத்தார். 

      சோழநாராயணன் நாணயங்கள் தீயில் விழுந்து கிடந்ததால் அதன் பொலிவு மறைந்து கருத்துப் போய் கிடந்தது. அதனை மேலும் கீழும் திருப்பிப் பார்த்துவிட்டு இடையில் உள்ள தனது பையில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டான் இளம்வழுதி. 

    "வேறு ஏதேனும் தங்களுக்கு கிடைத்ததா ஐயா?"

 ‌   "இல்லை ஐயா. இவை மட்டும்தான் கிடைத்தது"

   "நல்லது ஐயா. வேறு ஏதேனும்  தெரிந்தால் உடனே எனக்கு தகவல் அனுப்ப மறந்து விடாதீர்கள்" என அவர்களிடம் கூறிவிட்டு தனது பணியை தொடர்ந்தான். 

     அப்போது அவனை நோக்கி ஒருவன் பரபரப்பாக வந்து கொண்டிருந்தான்.

(தொடரும்..... அத்தியாயம் 30 ல்)


No comments:

Post a Comment