Monday, 27 January 2025

இராஜ மோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 32

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 32  🌾தஞ்சை பெருவழிச்சாலை🌾  

      வணிகர்களின் வணிகச் சாத்து வண்டிகள் தஞ்சை பெருவழியில் தமது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தன. அவ்வண்டிகளின் பாதுகாவலர்கள் கையில் குத்திட்டியும், இடைதனில் நீண்ட வாளும் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பைக் கொடுத்த வண்ணம்  பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில இருவர் பயணத்தின் ஊடாக தொடர்ந்து பேசிக்கொண்டே  பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

     "என்ன சொல்கிறீர்கள்? அப்படி என்ன பெரிய புரட்சிகளும் கலகங்களும் உண்டாகிவிட்டது?" என்றான் புதிதாக கல்யாணமானவன். 

    "உனக்குத் தெரியாதா என்ன?"

     "ஆமாம். அதனால் தானே கேட்கிறேன்"

     "நீ எத்தனை காலமாக வணிக சாத்துக்களின் காவலனாய் பணி செய்கிறாய்?"

    "சமீபமாகத்தான் பணியில் சேர்ந்தேன்."

    "ஆமாம் எனக்கும் இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. நாம் இருவரும் இதுவரை இரண்டு முறை பாதுகாப்பு பணியில் ஒன்றாக இணைந்து பயணம் செய்திருப்போம்."

    "ஆமாம் தாங்கள் கூறுவது சரிதான். இப்போது கூறுங்கள் என்ன பிரச்சனை என்று?"

    "சோழ மன்னர் அதி ராஜேந்திரர் மறைவிற்குப் பிறகு நாட்டில் பல்வேறு விதமான குழப்பங்கள் உருவாகி நாடு முழுவதும் பரவி வருகிறது"

     "உண்மையில் பரவி வருகிறதா? அல்லது யாரேனும் பரப்பி வருகிறார்களா?"

     "இதென்ன இப்படி கேட்டு விட்டாய்?"

     "இங்கு கலவரத்திற்கு என்ன காரணம் இருக்க முடியும் அதனால்தான் கேட்டேன்?"

     "உண்மையில் நீ புரியாமல் தான் பேசுகிறாயா?"

     "கலவரம் உண்டானால் அதனைக் கட்டுப்படுத்தி, சரி செய்ய இங்கு தான் காவலர்கள் உள்ளார்களே. பிறகு எதற்காகக் கலவரத்தை வேரறுக்காமல் உள்ளார்கள்?"

     "தம்பி! நீ புரிந்தும் புரியாமல் பேசுகிறாய். உண்மையிலே கலவரத்தை சிலர் தூண்டிக் கொண்டுதான் உள்ளார்கள். அவர்களது நோக்கம் நாட்டைச் சிதைப்பதாகக் கூட இருக்கலாம்"

    "யார் யாருக்காக கலவரத்தை உண்டாக்குகிறார்கள்?"

    "அதி ராஜேந்திரர் வாரிசு இன்றி இறந்து போய்விட்டார். அந்தச் சூழ்நிலையில் அம்மங்கை தேவியின் புதல்வர் இராஜேந்திரர், 'குலோத்துங்கர்' என்ற விருது பெயரில் அரசு கட்டில் ஏறிவிட்டார். அதனை விரும்பாத பல்வேறு நபர்கள் இன்று நாடெங்கும் கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள்."

     "அப்படி எனில் குலோத்துங்கச் சோழர் நேரடி வாரிசு இல்லை. இதுதான் அவர்களது பிரச்சனை. அப்படித்தானே?"

    "இப்பொழுதுதான் நீ சரியாக புரிந்து கொண்டாய். "

    "சரி, குலோத்துங்கச்சோழர் அரியணையில் அமர்ந்து மன்னராகிவிட்டாரே பிறகு இவர்களால் என்ன செய்துவிட முடியும்?"

     "தாய் வழி உறவினை பின்பற்றி குலோத்துங்கச் சோழர் அரசு உரிமை பெற்றுவிட்டார். இதனைக் காரணம் காட்டிச் சில சிற்றரசர்களும் நாட்டிற்கு எதிராக கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். இன்னும் சிலரோ அவர் மீது வீண் பழியைச் சுமத்தி வருகிறார்கள்."

     "அது என்ன வீண்பழி? அதனால் எப்படி அவர்களால் கலவரத்தை உண்டாக்க முடியும்?"

     "அரியணையை கைப்பற்றுவதற்காக தன் தாய் மாமன் குலோத்துங்கச் சோழரை கொலை செய்து விட்டார் என்னும் குற்றச்சாட்டைப் பரப்பி வருகிறார்கள்."

    "இது என்ன கொடுமையாக இருக்கிறது? இப்படியெல்லாமா வதந்திகளை பரப்புவார்கள்?"

     "அதைத்தான் செவ்வனே செய்து வருகிறார்கள். சில சதிகாரர்கள். "

     "சரி அதற்கும், வணிக சாத்துக்கள் நடைபெறாமல் போனதற்கும் என்ன காரணம்?"

     "தம்பி! பிரச்சனை அதோடு நிற்கவில்லை. நாகையின் மணிக்கிராமத்தார் சூரியவர்மர் எங்கு உள்ளார் என்பதே யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. நாகையின் ஒட்டு மொத்த வணிகத்தை கட்டிக் காத்து வந்தவர் அவர். அவரது மறைவு இங்கு உள்ள வணிகர்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது. நிலவரம் இப்படி உள்ள போது, எப்படி அவர்கள் தங்கள் பணிகளை செய்வார்கள்?"

    "சூரியவர்மர் பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டு உள்ளேன். தாங்கள் கூறுவது இப்பொழுது, எனக்கு தெளிவாக புரிகிறது. சரி! இப்பொழுது சூரியவர்மர் எங்கு உள்ளார் எனத் தெரிந்து விட்டதா?"

    "இல்லை. எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தான், நான் அறிகிறேன்."

     "அப்படி இருக்கும் பொழுது எந்த நம்பிக்கையில் வணிகர்கள் தங்கள் வணிக சாத்துகளை தொடங்கியுள்ளார்கள்?"

   "இப்போது உள்ள பாடி காவல் அதிகாரி பற்றி நீ அறிவாயா?"

    "இல்லை. எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது."

     "அப்படியானால் நான் கூறுவதை கவனி. இப்போது உள்ள பாடி காவல் அதிகாரி வேறு யாரும் அல்ல. முன்பிருந்த பாடி காவல் அதிகாரியின் தம்பி மட்டுமல்லாமல் சோழ தேசத்தின் உப தளபதிகளில் ஒருவரும் ஆவார்."

    "அப்படி என்றால் நாகையின் பிரச்சனை சோழ தேசத்தின் காதுகளை எட்டிவிட்டது. அதன் காரணமாகத்தான் நேரடியாக அங்கிருந்து உப தளபதி இங்கு வந்து உள்ளார்"

    "பரவாயில்லை ஒரு வழியாக பிரச்சனையின் தன்மையை புரிந்து கொண்டாயே" என இருவரும் பேசிக்கொண்டே தங்கள் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். 

     வணிகச் சாத்துகளை  பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த  இளம்வழுதியும் அழகனும் வணிகச் சாத்துகளின் காவலர்கள் இருவரும் பேசிக்கொண்டே பயணிப்பதை கவனித்தவர்கள் தங்கள் குதிரைகளை அவர்கள் அருகே செலுத்தியபோதுதான், மேற்கண்ட உரையாடலை கேட்க நேர்ந்தது. 

    "இன்று தேசம் முழுவதும் இதே பேச்சாகத்தான் உள்ளது போலும் ஐயா"

    "நமது பொறுப்பு கூடி உள்ளது இதிலிருந்து நன்றாக அறிய முடிகிறது"

     "ஆமாம் ஐயா. எத்தனை விரைவாக இதனை தீர்க்க முடியுமோ, அத்தனை விரைவாக இதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும்"

    "அதற்கான தேடுதலில் தான் நாம் உள்ளோம். முதலில் நாம் கண்டறிய வேண்டியது சூரியவர்மரை எங்கு உள்ளார் என்பதை தான். தேசத்தின் உயிர்நாடியான வணிகம் அப்போதுதான் சீரும் சிறப்புமாக செயல்படும் "

      "பாதுகாவலர்கள் கூறியதிலிருந்து சூரிய வர்மரின் தேவை குறித்து நன்கு அறிய முடிகிறது."

    "தஞ்சை பெருவழியில் இதற்கு முன்பாக பயணம் செய்து உள்ளாயா?"

    "இல்லை ஐயா"

    "காலம் காலமாக நடைபெற்று வரும் வணிகச் சாத்து என்றாலும் எனக்கு என்னவோ என்று சரியாகப் படவில்லை"

    "ஏன் ஐயா அப்படி கூறுகிறீர்கள்?"

    "மனதில் ஏனோ ஒருவித கலக்கம் நிலவுகிறது"

     "எதனால ஐயா?"

     "நீண்ட நாட்களுக்குப் பிறகு வணிகச் சாத்துகளை வணிகர்கள் ஆரம்பித்து உள்ளார்கள். இத்தனைக்கும் சூரியவர்மர் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லாத பொழுது, மேற்கொண்டுள்ள இப்பயணம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் என்னிடம் உள்ளது"

     "இங்குதான் இத்தனை காவலர்கள் உள்ளார்களே. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் கவலைப்படுவது ஏன்?"

     "ஏனோ தெரியவில்லை. உள்ளுக்குள் ஒரு விதமான கலக்கம் தோன்றுகிறது"

    "கவலை விடுங்கள் ஐயா. அதுதான் கூடவே நீங்களும் பயணம் செய்கிறீர்களே"

     "உள்ளூரத் தோன்றிய கலக்கத்தின் காரணமாகத்தான் இந்த வணிகச் சத்துக்களை பின்தொடர எண்ணினேன்"

    "தங்களுக்கு முன்பே வணிக சாத்துகள் புறப்படுவது தெரியுமா?"

    "நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த வணிக சாத்துகளை வெற்றிகரமாக நடத்தி சதிகாரர்களின் சதி செயலை நடைபெறாமல் தடுக்க முடியும் என்ற எண்ணத்தில் தான் ஒரு முயற்சியினை நான் வணிகர்கள் அனைவருக்கும் ஓலை அனுப்பி உங்கள் பாதுகாப்புக்கு நான் இருக்கிறேன்,  நீங்கள் வழக்கம் போல் வணிக சாத்துகளை தொடருங்கள் என தெரிவித்திருந்தேன். அதன் காரணமாகத்தான் இந்த வணிக சாத்துகளை வணிகர்கள் இன்று செயல்படுத்திக் கொண்டு உள்ளார்கள்"

     "நம்பிக்கையோடு இருங்கள் ஐயா. கண்டிப்பாக இந்தப் பயணம் வெற்றிகரமாக தான் முடியும்"

      "இன்னும் இரண்டு காத தூரம் கடந்து விட்டோம்ன்றால் அங்கு ஒரு சத்திரம் வரும், வழக்கமாக அங்கு தான் வணிகர்கள் இளைப்பாரி செல்வார்கள் "

     "அப்படி என்றால் அங்கு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இருக்கும் அல்லவா?"

    "வணிகர்கள் தங்களோடு அழைத்து வரும் பாதுகாப்பு வீரர்கள் தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது வணிகர்களின் நம்பிக்கை. ஏனெனில் இது காலம் காலமாக நடந்து வரும் பழக்கம். அதனில் நாம் தலையிட முடியாது. இருப்பினும் அவர்களது பாதுகாப்பை இம்முறை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அங்குள்ள சத்திரத்தில் ஓரிரு பாதுகாவலர்கள் இருப்பார்கள். அதனால் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்"

      "தாங்கள் கூறியபடியே அனைத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளலாம் ஐயா" எனக் கூறியபடி இளம்வழுதியை பின்தொடர்ந்து கொண்டிருந்தான் அழகன். 

     தஞ்சை பெருவழிச் சாலையின் இரு பகுதிகளிலும் மரங்கள் விரைவிக் கிடந்தன. அகன்று பெருத்து கிடந்த மரங்கள் ஏற்கனவே இருந்த இருளை இன்னும் அதிகப்படுத்தி விட்ட சூழலை உண்டாக்கியிருந்தது. வானத்தில் 'மினுக் மினுக்கென' ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களின் ஒளியினை புறந்தள்ளிவிட்டு தண்ணொளியை பாய்ச்சிக்கொண்டிருந்தாள் வெண்மதி. அவள் உருக்கிய வெள்ளிப் பனிச்சூட்டில் நீண்டு கடந்த சாலையில் வணிக சாத்து வண்டிகளுக்கு முன்பாக பாய்ந்தோடி கொண்டிருந்தது இளம்வழுதியும் அழகனும் ஆரோகனித்திருந்த குதிரைகள்.  

   வணிக சாத்து வண்டிகள் எப்பொழுதும் போல் ஆரவாரம் இன்றி ஒரே சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தன. வண்டி ஓட்டிகளும் அவற்றின் தாள லயங்களுக்கு ஏற்ப முன்னும் பின்னும் நகர்ந்தபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார்கள். வண்டினுள் பயணித்திருந்த வணிகர்கள் என்னதான் இளம்வழுதி பாதுகாப்பு தருவதாக கூறியிருந்தாலும் உள்ளுக்குள் ஒரு விதமான பயத்தோடு இருப்பதை வெண்மதியாளின் ஒளி வீச்சு அவர்களது முகத்தில் அப்பட்டமாக தெரிவதை  வெளிப்படித்திருந்தது. இருப்பினும் தமக்குள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு வண்டியின் உள்ளே அமர்ந்துகொண்டு பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வவ்போது தங்களது காவலர்களை அழைத்து பாதுகாப்பு குறித்து விசாரித்த வண்ணம் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

     முன் வரிசையில் முதலில் சென்று கொண்டிருந்த வண்டியில் இருந்த வணிகர் ஒருவர் "வழக்கமாக தங்கிச் செல்லும் சத்திரத்திற்கு வண்டியைக் கொண்டு செல்லுங்கள்" என்றார். 

     "தாங்கள் கூறியபடியே செய்து விடலாம் ஐயா"என வண்டி ஓட்டி கூறியபடி வண்டியினை சத்திரம் இருக்கும் திசையை நோக்கி முடிக்கி விட்டிருந்தார்.

     முன்னாள் செல்லும் வண்டியை தொடர்ந்து வந்து கொண்டிருந்த, மற்ற கூட்டு வண்டிகளும் மாட்டு வண்டிகளும், அதனைத் தொடர்ந்து வரும் பயணிகள் வண்டிகளும்,  முகப்பு வண்டியைப் பின்பற்றித் தங்கள் பயணத்தை தொடர்ந்தன. 

     சத்திரத்தில் தங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து குறித்து அறியாமல் தங்களது வழமையான பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்கள் வணிகர்கள்.

(தொடரும்...... அத்தியாயம் 33ல்)


No comments:

Post a Comment