Sunday, 26 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 30

  🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 30 🌾புதியவனின் வருகையும் புதிய ஆதாரமும்🌾

        இருபதுவயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் இளம்வழுதியை நோக்கி பரபரப்பாக ஓடி வந்து அவன் அருகே நின்றான். அவன் உடல் முழுவதும் வியர்வை மழையால் குளித்ததோற்றம் ‌ வெகு தொலைவில் இருந்து வந்தவன் என்பதை‌ சொல்லிக் கொண்டிருந்தது. 


     துடிப்பான கண்கள், வலுவேறிய தோள்கள், இள வயதுக்கு உரிய கட்டுக்கோப்பான உடல் அமைப்பு , சுந்தர முகத்திற்கு கூடுதல் பொலிவைத்தரும் இளம் மீசை ‌, இடைதனில் சிறிய வாள் என ஒரு போர் வீரனுக்கு உரிய அத்தனை தோற்றமும் கொண்ட இளைஞன் தான் அழகன்.‌ தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஏர்முனையையும் போர்முனையையும் சரிசமமாக கருதும் போக்கு அவனிடம் இருந்தது.  


     "ஐயா வணக்கம். என்னை தங்களுக்கு தெரிகின்றதா?" என்றான் அழகன். 


    "இல்லை " என்றான் இளம்வழுதி. 

 

    "இரண்டு நாட்களுக்கு முன்பு ஊர் நத்தம் குடியிருப்பில் கருமம் ஆராயும் அதிகாரி என்ற பெயரில் கயவன் ஒருவன் நிகழ்த்திய பெரும் குழப்பத்தின் போது அங்கு அவனை கையும் களவுமாக பிடித்த மக்களில்‌ ஒருவன் தான் நான். அப்பொழுது அங்கு தாங்களும் கூட வந்திருந்து அந்தப் பிரச்சினையை சரி செய்து விட்டு சென்றீர்கள்"


    "அந்த நிகழ்வு நன்றாக எனக்கு ஞாபகம் உள்ளது. அங்கு பலபேர் மாறி மாறி பேசினார்கள். அதன் காரணமாக என்னால் தங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. "


    "அதனால் பிழை ஒன்றும் இல்லை ஐயா. எனது பெயர் அழகன். வைத்தியர் முருகனின் மகன் நான்."


     "தங்கள் தந்தையார் பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். என்ன காரணமாக என்னை அழைத்தீர்கள்?"


    "தங்களைப் பற்றி செங்கமலம் அம்மா நிறைய எடுத்துக் கூறினார். அங்கு உங்களிடம் நான் ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள். " என மன்னிப்பு கோரினான்.


    "அந்த சூழ்நிலையில் அங்கு யார் இருந்தாலும் அவர்களுக்கு அப்படித்தான் தோன்றி இருக்கும்.‌ அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை."


    "தங்களிடம் ஒரு விண்ணப்பம்" என தயங்கியபடி கூறினான் அழகன். 


   "என்னவென்று கூறுங்கள். என்னால் செய்யக்கூடிய காரியம் எனில் கண்டிப்பாக நிறைவேற்றித் தருகிறேன்."


    "தங்களைப் பற்றி செங்கமலம் அம்மா கூறியதிலிருந்து தங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டாகிவிட்டது. ஊர் நத்தம் குடியிருப்பில் அதனை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு உண்டாகியது. அதன் பிறகு தான் எனது நீண்ட நாள் தேடலுக்கு ஒரு வழி கிடைத்ததாக உணர்ந்தேன். "

 

     "அப்படி என்னால்  தங்களுக்கு ஏற்பட்ட‌ மாற்றம் என்னவென்று அறிய ஆவலாக உள்ளது"


    "நான் பிறந்த தேசத்திற்கு பயன்பெறும் வகையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அதற்கு சரியான ஒரு பாதை இதுவரை அந்தப் பாதை தங்களை கண்ட பின்பு தெளிவாகிவிட்டது. ஆமாம் ஐயா. தங்களோடு சேர்ந்து சோழ தேசத்திற்கு தொண்டாற்றுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்."


    "தேசத்தின் மீதான தங்களின் அன்பும் பற்றும் அதற்காக தாங்கள் காட்டும் முனைப்பும் தங்கள் மீது  மிகுந்த மரியாதையை உயர்த்துகிறது. எனக்கும் உண்மையில் ‌ நம்பத் தகுந்த ஒரு ஆள் தேவைதான் உள்ளது. அந்தத் தேவை பூர்த்தியாகும் நேரம் இப்பொழுது வந்துவிட்டதாக உணர்கிறேன்.‌"


    "எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நிச்சயம் உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பேன்."


    "மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கு வேறு பணி ஏதும் இல்லை என்றால் இப்பொழுதே என்னுடன் பணி செய்ய வரலாம்."


     "தங்களைத் தேடிக் கொண்டுதான் நாகை முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் தங்களைக் காண முடிந்தது. அதுவும் நல்லதாகத்தான் போய்விட்டது. நான் எதிர்பார்த்த கனவு நினைவாகும் நாள் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நினைத்ததில்லை. உண்மையில் நான் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் தங்களுடன் சேர்ந்து பணி செய்வதற்கு."


     "நல்லது வாருங்கள். "


     "ஐயா இன்னும் ஒரு வேண்டுகோள். நான் தங்களை விட வயதில் சிறியவன்."


    "அதனால் என்ன கூறுங்கள்?"


     "என்னை உரிமையோடு அழைத்தால் போதும். "


    "ஏன்? தவறாக ஏதேனும் கூறி விட்டேனா?"


    "இல்லை ஐயா. மரியாதை நிமித்தமாக தாங்கள் பேசுவதால், நம் இருவருக்கும் இடையே ஒரு இடைவெளி உருவாவதாக உணர்கிறேன். அதனால் உரிமையோடு என்னை அழைக்கலாமே. என்றுதான் தங்களிடம் கூறினேன்"


   "அப்படியா.  எதுவும் பழக்கத்தினாலும் பண்பினாலும் தான் வரும். உடனே வருவதற்கு சாத்தியம் இல்லை"


    "நல்லது ஐயா."


     இருவரும் வெகு நேரமாக எரிந்து சாம்பலாக கிடந்த நெல்மணிகளை கலைத்து ஏதேனும் தகவல் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் தேடிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் நெருப்பை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தண்ணீரை வாரி இறைத்ததில் எரிந்து சாம்பல் குவியல்கள் இறுகிப் போயிருந்தன. கொழுந்துவிட்டு எரிந்திருந்த நெருப்பின் மிகுதியால் அங்காடியின் சுவர்கள் வெடித்து கீழே சரிந்து இருந்தன. கீழே கிடந்த சுவர்களின் பல துண்டுகள் அனைத்திலும் கரி அப்பிக்கிடந்தன. அதனை பார்க்கும்போது உயரம் நெஞ்சில் அப்பிக் கொள்ளும் அளவிற்கு இருந்தன.


    இடிபாடுகளில் இடையே புகுந்து தேடிக் கொண்டிருந்த அழகன் அங்கு கடந்த சிறிய குச்சியினால் சாம்பலை கிளறிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாக நடந்து கொண்டிருந்த அவனது தேடலுக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்க வேண்டும். அவனது சுந்தர முகத்தில் ஒளி தோன்றியது. குச்சியினை சாம்பலில்சுளித்து சுழித்து கொண்டிருந்தவனுக்கு ஏதோ ஒன்று அகப்பட்டதாக தோன்றியது. அங்கு தொலைவில் எரிந்து கொண்டிருந்த விளக்கு ஒன்றை எடுத்து வந்து மீண்டும் அவன் தேடிய இடத்தில் குச்சியால் சுழித்தான். பார்ப்பதற்கு ஏதோ ஒரு முத்திரை போல் தெரிந்தது. சாம்பலை விலக்கிவிட்டு கவனமாக அதை கையில் எடுத்து அதன் மேல் படிந்திருந்த சாம்பலை தனது மேலாடையால் சுத்தம் செய்து விட்டு விளக்கை உயர்த்திப் பார்த்தான். முத்திரையில் பன்றி உருவம் பொறித்திருந்தது.  அதனை எடுத்துக் கொண்டு இளம்வழுதியை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான். அவனது முகத்தில் அத்தனை பொலிவும் மொத்தமாய் குடியேறி இருந்தது. 


     தனக்குப் பின்னால் கேட்ட பாதக்குரடுகளின் ஒளியால் ஈர்க்கப்பட்ட இளம்வழுதி திரும்பி பார்த்தான்.  அழகன் கையில் ஏதோ ஒன்றை உயர்த்திக் கொண்டு வருவதை காண முடிந்தது. அதற்குள் அவன் அருகில் வந்து விட்டிருந்தான் அழகன். 


     "ஐயா.  இந்த முத்திரை அங்கு உள்ள அங்காடியில் கிடைத்தது" என கூறி நெல்லுக் கடையின் முகப்பில் அமைந்த அங்காடியை காட்டினான். 

   

   அழகன் கையில் கொடுத்திருந்த முத்திரையை விளக்கின் ஒளியில் பார்த்தபோது அதில் இருந்த பன்றி உருவம் தெரிந்தது. அதனைக் கண்டதும் அவனது முகத்தில் புதிய பொலிவு ஒன்று உருவாகி இருந்தது. 


   "அழகா! உண்மையில் நீ இன்று செய்திருக்கும் காரியம் மகத்தானது. இத்தனை நாட்களாக தேடிக் கண்டிருந்த வினாக்களுக்கு சரியான விடை இன்று தான் கிடைத்துள்ளது. நான் கணித்திருந்தது சரி என்பதற்கு சாட்சியான ஆதாரத்தை கொண்டு வந்துள்ளாய்."என கூறியதோடு அவனை இறுகத் தழுவி பாராட்டினான் இளம்வழுதி. 


    "அப்படி என்ன பெரிய காரியம் ஒன்றும் நான் செய்துவிடவில்லையே?"


    "அப்படி கூறாதே அழகா! சோழ தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அத்தாட்சியான அடையாளம் தான் இன்று நமது கையில் உள்ள முத்திரை"


   "இந்த முத்திரைக்கும் தாங்கள் கூறுவதற்கும் என்ன சம்பந்தம்?"


    "இந்த முத்திரையில் உள்ள உருவம் என்ன?"


   "பன்றி உருவம்"


    "அதனை யார் பயன்படுத்துகிறார்கள்?"


    "சாளுக்கிய மன்னர்கள் தங்களது முத்திரைகளிலும், கொடிகளிலும் பயன்படுத்துகிறார்கள்"


   "இப்போது கூறு, இவை இங்கு கிடைக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?"


    "இதனை செய்தது சாளுக்கியர்கள் எனக் கொள்ளலாம்"


   "ஆமாம். அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. இங்கு மட்டுமல்ல இன்று சோழ தேசத்தில் நடந்து வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் சாளுக்கியர்கள் தான் காரணம் என்பதற்கு இந்த முத்திரையே சாட்சி."


    "இந்த ஒற்றை முத்திரையை வைத்துக்கொண்டு நாம் எவ்வாறு அவர்களை தடுக்க முடியும்?"


    "இப்போது கிடைத்துள்ள இந்த முத்திரையின் வழியாக நமது பிரச்சினைக்கு சாளுக்கியர்கள் தான் காரணம் என்ற இறுதி முடிவிற்கு நம்மால் வர முடிகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு துணை செய்யும் துரோகிகள் இங்கு நம்மிடையேதான் வாழ்ந்து வருகிறார்கள். என்பதற்கான சாட்சியமாகவும் இவை விளங்குகிறது. "


     "அப்படியெனில் நமது அடுத்த தேடல் அவர்களை தேடித்தான் இருக்க வேண்டும்'


   "ஆமாம்! சரியாக கூறினாய். "


    "அவர்களை நாம் எங்கிருந்து தேடுவது?"


    "புதிதாக எங்கும் தேட வேண்டாம். அவர்கள் ஏற்கனவே விட்டுச் சென்றிருந்த இடங்களில் இன்னும் ஏதேனும் ஆதாரம் கிடைக்கலாம். அதனைத் தேடும் போது நமக்கு ஏதேனும் வழி அதன் வழியே கிடைக்கலாம் என தோன்றுகிறது"


     "சரி வாருங்கள்" எனக் கூறி ஆயத்தமானன் அழகன். 


      அழகனை அழைத்துக் கொண்டு முன்னாள் நடந்த இளம்வழுதி இப்படி கேட்டான் "உன்னிடம் குதிரை உள்ளதா?" 

    

    "இல்லை ஐயா."


      "சரி வா. வழியில் சம்பாதித்துக் கொள்ளலாம்" எனக்கூறியவன் தனது குதிரை மருதனை அழைத்துக் கொண்டு முன்னால் சென்றான்.

      

     நெல்லுக்கடை வீதியினை கடந்து அடுத்து உள்ள இரண்டு ஒரு வீதிக்குள் புகுந்தவர்கள் எதிரே உள்ள பெரிய வீதிக்குள் இருவரும் நுழைந்தார்கள்.‌ அங்குள்ள வீடுகள் அனைத்தும் இரண்டு மூன்று அடுக்குகளை கொண்ட பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வீடுகளும் பல்வேறு வகையான அலங்காரங்களும் தோரணைகளையும் கொண்டு அமைந்திருந்தது. பார்க்கும்போதே அவை பெரும் வணிகர்களுக்கு சொந்தமானவை என்பதை காட்டிக் கொண்டிருந்தன.‌ ஒவ்வொரு வீடுகளின் முகப்பு வாசலில் பெரியதொரு அலங்கார விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அவற்றின் பூரண ஒளியால் அவ்விதி முழுவதும் நிரம்பி வழிந்தது. அவ்விதிக்குள் அவ்வளவு எளிதாக யாரும் மறைந்து விட முடியாதபடி வெளிச்சத்தின் ஆதிக்கம் பரவிக் கிடந்தது. அதுமட்டுமின்றி அந்த இரவு வேலையிலும் இரவு காவலர்கள் ஒவ்வொரு வீதியையும் மாறி மாறி கையில் வேலும் வாளும் தாங்கியபடி சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அந்த வீதிக்குள் நுழைந்த யாரும் அத்தனை எளிதில் அவர்கள் விழிகளில் இருந்து தப்புவதற்கு சாத்தியம் இல்லாத படி அவர்களது பணியை எளிதாக்கி விட்டிருந்தது அங்கு ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள். 


     (தொடரும்... அத்தியாயம் 31ல்)

No comments:

Post a Comment