தமிழேனிக் கலை மன்றத்தில் நடைபெறும் கவிதை போட்டிக்கு நான் அனுப்பி வைத்த கவிதை இது
காற்றைப் போலே நீ வந்து போனாயே..!
===================================
கவிஞர் யாழிசை செல்வா
==========================
இருளின்
கரை தெரியாத நீண்ட வானம்!
கடலின் அலைகளை - காதலோடு
தாக்கிக் கொண்டிருக்கும் வெண்ணிலா!
பொங்கிப் புனல் ஆடும்
ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளில்
செங்கரும்பின் சுவை மேவிய
அதரந்தனில்
கோல முத்தம் தந்தேனே -
மறந்து போனதா மாயவா...? //01
இதோ வருகிறேன்
இன்னுயிரும் உனக்காக தருகிறேன்
சொன்னதெல்லாம் பொய்யா நாயகனே... //02
வில்லில் அம்பெய்து
வீரம் பேசும் மன்னவர்கள் முன்னால்
விழிதனில் காதல் எழுதிய காதலனே -
காற்றைப் போலே
நீ
வந்து போனாயே...! //03
வேல்விழிக் கண்கள்
விரகத்தில் உதிரும் கை வளையல்கள்
தாகத்தில் தவித்திருக்கும் அதிரங்கள்
மோக தீ மூட்ட
மறந்து போனதேன் மன்னவா...! //04
நீ
நான்
நிலா
காற்று
வானம்
சேர்ந்தெழுதிய பூக்கோலம் புதுக் கோலமாய்
இன்னும்
என் இதயத்தில்....//05
நீண்ட வானம்
தவழும் வெண்மதி
சுழன்றடிக்கும் காற்று
அலர் தூற்றும் ஊர்
ஆசையாய் நான்
கரம் பற்றி காப்பாற்றுவேன் என்ற நீ
எங்கு போனாய் - என்
ஆசைக் காதலா!//06
வழமையாக காத்திருக்கும் படகுத்துறை
இடைதனில் கரம் கோர்த்து
ஏந்திழை என்னைச்
சுரம் சேர்க்கத்தான் மறந்து போனாயே!//07
அலைந்தாடும் காற்றும்
சுழித்தோடும் நீரும்
மோகத்தை தூண்டும் நிலவும்
எனது
பாரத்தைப் பற்றுகின்றன-
காதலோடு கொஞ்சத்தான் நீ இல்லை!//08
அன்று -
ஊரில் நடந்த
சடுகுடுப் போட்டியில்
தோற்றுப் போனதாய் -
உன்னை
அனைவரும் பலித்துப் பேசிய போது
நீ
என் இதயத்தை கைப்பற்றியது
அவர்களுக்கு தெரியாமல் போனது!//09
முதல் சந்திப்பினைத் தொடர்ந்து
ஊர் திருவிழாதெனில்
நான் கும்மியடித்த பாவத்தை
என் இதழில் எழுதிக்காட்டி
என்னை எரித்தாயே
மறந்து போனதா மாயவா!//10
தொடரும் 02ல்
காற்றைப் போலே நீ வந்து போனாயே
==================================
கவிஞர் யாழிசை செல்வா
======================
பகுதி 02 தொடர்ச்சி
=================
அங்குமிங்குமாய்
காவிரிக் கரையோரம்
நீயும் நானும்
ஓடிப்பிடித்தும் தாவிக் குதித்தும்
விளையாடிய போது
நீ செய்த கோலங்கள் தான்
எத்தனை இன்பமென
இறுக அணைத்துக் கொண்டாய்
ஞாபகம் இல்லையா....!//11
ஒரு நாள் மாலை வேலை
திருக்கோடியிலுள்ள அங்காடிதனில்
மதுரமான மாம்பழமொன்றைக்
கையில் எடுத்துச் சுவைத்தவன்
யாரும் அறியாதபோது
என்னருகில் வந்த நீ
உனது குழி விழுந்த கன்னத்தின்
சுவையை ஒப்பிடும்போது - இதன்
தித்திப்பு குறைவு தான் என்றாய்!//12
ஊரின் மையத்திலுள்ள
ஊர்க்கிணற்று நீரை இறைத்துக் கொண்டிருந்த
நீ
யாருமறியாமல்
என் இடைப்பற்றி
என் முகம் சிவக்க வைத்தாயே!//13
ஊர்த் தெரு முனையில் தோழிகளோடு
நான்
பாண்டி விளையாடிக் கொண்டிருக்கும்போது
உன்னையும்
சேர்க்கச் சொல்லி
என்னிடம் வம்பிழுத்தாயே..!//14
ஒரு அமாவாசையன்று
இடி விழுந்த வீடாய்
என் தாயின் மரணத்தில்
நான் துடித்த போது
தாயாக மாறித் தோல் தந்தாயே!//15
இத்தனையும் மறந்து
எத்தனை தூரம் சென்றாய்
என் காதலா....!
காற்றும் கூட
என்னைக் கைது செய்து விடத் துடிக்கிறது -
என் கரம் பற்றி
இதழ் கொய்யத்தான்
இங்கு நீயில்லை -
காற்றைப் போலே
நீ
வந்து போனாயே....!//16
கவிஞர் யாழிசை செல்வா
No comments:
Post a Comment